இலக்கியங்கள் காட்டும் பெண்களும் பருவங்களும்!

பெண்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். மல்டிடாஸ்கிங் செய்வதில் திறமையானவர்கள். புராணங்கள், இலக்கியங்களிலும், சித்த மருத்துவப் பாடல்களிலும்கூடப் பெண்களின் பெருமையைப் புகழ்ந்தே சொல்லப்பட்டிருக்கிறது.

உடல் செயல்பாட்டைப் பொறுத்தவரைப் பெண்களைவிட ஆண்களுக்கே ஆற்றல் அதிகம்.

ஆணைவிடப் பெண்ணுக்கு இடுப்பு எலும்பு வலிமையானது. ஆணைவிடப் பெண் மன வலிமை வாய்ந்தவர்கள்.

தன்னைப் போல் ஒரு உயிரை உருவாக்கி இவ்வுலகுக்குத் தருவது, பெண் இனத்தாலே சாத்தியமாகிறது.

ஆண் சிசுவைவிடப் பெண் சிசு, தன் தாயின் கர்ப்பப்பையில் ஒரு வாரம் கூடுதலாகத் தங்கி, தன்னை வலிமையாக்கிக் கொள்கிறது.

பெண்களில் அத்தினி, பத்தினி, சித்தினி, சங்கினி ஆகிய நான்கு பிரிவினர் உள்ளனர். ஆனால், ஆண்களில் மா, பறவை, குதிரை என்ற மூன்று பிரிவினர்தான் உள்ளனர்.

பெண்களின் ஏழு பருவங்கள்

பேதை

கள்ளமற்ற, வெகுளித்தனமான பெண் குழந்தை. 5 வயது முதல் 7 வயது வரையுள்ள பெண் பருவம்.

பெதும்பை

சற்றுப் புரிந்துக்கொள்ளும் தன்மையுடைய, ஆனால் விவரமறியாத பெண் பிள்ளை. 8 வயது முதல் 11 வயது வரையுள்ள பெண் பிள்ளைகளின் பருவம் இது.

மங்கை

பருவக்கால மாற்றங்களைப் புரிந்துகொண்ட மங்கை, 12 வயது முதல் 13 வயது வரையுள்ள பருவப் பெண்.

மடந்தை

காதல் விஷயங்களில் சிக்ககூடிய வயது. உள்ளம் இளகக்கூடிய பெண்ணின் வயது காலம் இது. 14 வயது முதல் 19 வயது வரையுள்ள பெண்ணின் காலம் இது.

அரிவை

20 வயது முதல் 24 வயது வரையுள்ள பெண். விவரம் நன்கு அறிந்து, புரிந்துக் கொண்ட பக்குவம் கொண்ட பெண்ணின் காலம் இது.

தெரிவை

25 வயது முதல் 31 வயது வரையுள்ள பெண். தனக்குத் தேவையானவற்றைத் தேர்வு செய்துகொள்ளும் தன்மையுடைய பெண்ணின் பருவ காலம் இது.

பேரிளம் பெண்

32 வயது முதல் 40 வயதுள்ள பெண்ணின் காலம். வயது முதிர்ந்த மற்றும் மிகவும் பக்குவம் அடைந்த முதிய பெண்.

சில புராணங்களில் பெண்களுக்கான பருவத்தை நான்கு பருவங்களாகப் பிரித்துச் சொல்லப்படுகிறது.

வாலை

பருவமடையாத குழந்தைத் தனமான பெண்களின் பருவம்.

தருணி

16 வயது முதல் 30 வயதுள்ள பெண்ணின் வயது காலத்தை, தருணி என்கிறார்கள்.

பிரவுடை

31 வயது முதல் 55 வரையுள்ள பெண்ணின் காலத்தைச் சொல்லும் பருவம்.

விருத்தை

55 வயதைக் கடந்த முதிய பெண்ணின் பருவ காலம் இது.

கந்த புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் பெண்களின் பருவகாலங்கள், பல்வேறு கால அளவுகளில் கூறப்பட்டுள்ளன.

ஆண்களுக்கும் தமிழ் இலக்கிய நூல்களில் பருவ காலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால், பெண்களைச் சிறப்பித்துக் குறிப்பிட்டிருப்பதைப் போல ஆண்களின் பருவ காலங்கள் சிறப்பாகக் குறிப்பிடப்படவில்லை.

ஆண்களின் பருவ காலம்

பாலன்

1 வயது முதல் 7 வயது வரை உள்ள ஆண் குழந்தைகள்

மீளி

8 வயது முதல் 10 வயது வரையுள்ள ஆண் பிள்ளைகள்

மறவோன்

11 வயது முதல் 14 வயது வரையுள்ள ஆண் பிள்ளைகள்

திறவோன்

15 வயதுள்ள ஆண் பிள்ளைகள்

விடலை

16 வயதுள்ள ஆண் பிள்ளைகளைக் குறிக்கிறது.

காளை

17 வயது முதல் 30 வயது வரையுள்ள ஆண்களின் பருவம் இது.

முதுமகன்

30 வயது முதல் 40 வயதுவரையுள்ள ஆண்களின் பருவ காலம் இது.

– மினு ப்ரீத்தி

  • நன்றி: விகடன்
You might also like