கட்டுப்படுவாரா ட்ரம்ப்?

முன்பு மற்ற நாடுகளுக்கு வரி விதிப்பதில் தன்னிச்சையாக ட்ரம்ப் பல முடிவுகளை எடுத்தபோது அதற்கு கடிவாளம் போட்டது அமெரிக்க உச்சநீதிமன்றம்.

மீண்டும் சரிந்த தங்கம் விலை!

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,430 ஆகவும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,15,440 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ட்ரம்பை எப்படி நம்புவது?

செய்தி: இந்தியா என்னை 100 சதவீதம் நம்பலாம். மோடி எனது சிறந்த நண்பர்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெகிழ்ச்சி கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருந்தவர்தான் ட்ரம்ப். இருந்தும் இந்தியாவுக்கு அதிகப்படியான வரியை உயர்த்தியதும் இவர்தான். அமெரிக்காவில் வாழும், வாழப் போகும் இந்தியர்களுக்கு பல்வேறு சிரமங்களைக் கொடுத்தவரும் இதே ட்ரம்ப் தான். இப்படிப்பட்ட டிரம்பை எப்படி நம்புவது?

அமெரிக்காவில் லஞ்சத்திற்கு எதிரான நிலைப்பாடு!

செய்தி: இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம்; ரூபாய் 57 கோடி அபராதம் செலுத்த அதானி சம்மதம். – வழக்கை கைவிட அமெரிக்க அரசு முடிவு. கோவிந்த் கமெண்ட்: அமெரிக்காவிலாவது லஞ்சம் வாங்கியது நிரூபணமாகி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் இதேவிதமான லஞ்சம் வாங்குவது வெளிப்படையாக தெரிந்தும்கூட என்ன நடந்திருக்கிறது? யார் இம்மாதிரி இங்கு அபராதத்தைச் செலுத்தத் தயாராக இருப்பார்கள்?

குண்டு வீசினபிறகுதான் தெளிவு பிறக்குமா?

செய்தி: ஹார்மூஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். – ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி உறுதி.  கோவிந்த் கமெண்ட்: இன்றைக்கு இப்படி பேசும் ஈரான், மிக அண்மையில்தான் இதைக் கடக்க முயன்ற இந்திய எண்ணெய்க் கப்பலை குண்டு வீசி தாக்கி இருக்கிறது, அந்தக் கப்பலும் பலத்த சேதம் அடைந்திருக்கிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிற நிலையில், மிகவும் தாமதமாக ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. போரின் போது பல செயல்பாடுகள் தாமதமாகத்தான் நடக்கின்றன.

எப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஐ.நா.?

செய்தி: ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே உலக அளவில் பலவிதமான போர்களும், பெரும் இன அழிப்பும் நடந்து கொண்டிருந்தபோது ஐநா மன்றம் என்ன செய்தது? ரஷ்யா, உக்ரைன் போராகட்டும் தற்போது நீடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா – ஈரான் மேற்காசியப் போராகட்டும், அதை வலிமையோடு தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியை ஐ.நா. மன்றம் ஏன் செய்யவில்லை? இந்த நிலையில், அதில் சீர்திருத்தம் வேண்டும் என்கின்ற இந்தியாவின் கோரிக்கை மனதார வரவேற்க வேண்டியதா?