ஏன் கலைஞருக்கு கைதிச் சீருடை கொடுத்தீர்கள்?

– சிறை அதிகாரியிடம் கோபப்பட்ட முதல்வர் எம்.ஜி.ஆர்.

எப்போதும் தன்னுடைய பேச்சில் ‘பொறி’ வைத்து பேசுவதாக நினைத்துக்  கொண்டு அதிரடியாக பொதுவெளியில் பேசுகிறவரான திமுக எம்பி ஆ.ராசா அண்மையில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கக் கூட்டத்தில் பேசும்போது, முன்னாள் தமிழக முதல்வரான எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி பிழையாகப் பேசியிருந்தார்.

இதற்கு சில தகவல்கள்

தாளமுத்துவுக்கு முன்பே, இல. நடராசன் பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக ஆக்கியதை எதிர்த்து, 1937இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் முதன்முதலாக உயிர்விட்ட போராளி என ஆ.ராசாவுக்கு தெரியுமா?

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட 1963-ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் நிறைவேற்றுவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது நஞ்சுண்டு இறந்த மொழிப் போராளி விராலிமலை சண்முகத்தைப் பற்றி ஆ.ராசாவுக்குத் தெரியுமா? இவர் எம்.ஜி.ஆர். ரசிகர்மன்ற நிர்வாகி என்ற நிலையில் திமுக.

அதாவது 1986-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது இந்திய சட்ட நகலை எரித்து கைதான கலைஞர் கருணாநிதியை சிறையில் கைதிக்கான சீருடை அணிய வைத்துவிட்டார் என்று குறிப்பிட்டு எம்ஜிஆரை அவர் விமர்சித்த விதம் எம்ஜிஆரின் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.

ஏற்கனவே முன்னாள் முதல்வரான எடப்பாடியின் குடும்பத்தினர் பற்றி அவர் இதேமாதிரி பொதுவெளியில் அசிங்கப்படுத்தும் விதமாக பேசி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது தெரிந்ததுதான்.

அதே பாணியில்தான் தற்போதும் பேசி இருக்கிறார். தாளமுத்துவுக்கு முன்பே நடராஜன் முதல் மொழிப்போர் களப்பலி.

1986-ல் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சிறையில் என்ன நடந்தது என்பதை அப்போது சிறைத்துறை உயர் அதிகாரியாக இருந்த ஜி.ராமச்சந்திரன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

ஆ.ராசாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு இதுதான் பதில்.

இதை வெளியிட்ட ஜூனியர் விகடன் இதழுக்கு (செப்டம்பர் 2022) நன்றி தெரிவித்து அந்த நிகழ்வை கீழே பதிவிட்டிருக்கிறேன்.

“இரண்டாம் முறையாக சிறையில் கலைஞரைச் சந்திப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. முதல் சந்திப்பு நிகழ்ந்தது 1985-ம் ஆண்டு. பிறகு மீண்டும் 1986-ம் ஆண்டு ஒரு போராட்டத்தில் கைதாகி விசாரணைக் கைதியாக சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார் கலைஞர். கூடவே ஆயிரக்கணக்கான தொண்டர்களும்.

இந்த முறை கலைஞருக்குத் தரப்பட்டது வெறும் காவல் தண்டனை இல்லை; கடுங்காவல் தண்டனை. கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள் சிறையில் கட்டாயம் வேலை செய்ய வேண்டும். கைதி உடையை அணிய வேண்டியது கட்டாயம்.

தீர்ப்புக்குப் பிறகு சிறைக்கு வந்த கலைஞர் என்னிடம், ‘‘கடுங்காவல் தண்டனை என்றால் என்ன… செக்கு இழுக்க வைப்பீர்களா?’’ என்று கேட்டார்.

‘‘செக்கு இழுப்பதெல்லாம் பிரிட்டிஷார் காலத்துடன் போய்விட்டது. நீங்கள் கைதி உடை அணிய வேண்டும். கட்டாயம் வேலை செய்ய வேண்டும். சோப்பு தயாரித்தல், பைண்டிங், டேக் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் இந்தச் சிறையில் உள்ளன’’ என்று கூறினேன்.

‘‘உங்கள் அலுவலக உதவியாளராக என்னைப் போட்டுக்கொள்ளுங்கள்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

நானும் விடாமல், ‘‘நீங்கள் சரியாக வேலை செய்யாவிட்டால் நான் ஏதாவது சொல்வேன். அதை மனதில் வைத்துக் கொண்டு, நாளை முதலமைச்சராக வந்தவுடன் தண்ணீர் இல்லாத காட்டுக்குத் தூக்கி அடிப்பீர்கள். அந்த வம்பே வேண்டாம். நீங்கள் பைண்டிங் தொழிற்கூடத்தில் வேலையைப் பாருங்கள்’’ என்று சிரித்தபடியே கூறிவிட்டு, ‘Labour alloted to binding section’ என்று அவரது வரலாற்று அட்டையில் எழுதினேன். உடனே அவருக்குக் கைதிச் சீருடை வழங்கப்பட்டது.

மாலை நேர்காணலுக்கு தன் மனைவி, மக்களைப் பார்க்க என் அறைக்கு வந்துவிட்டார். அவரை நிமிர்ந்து பார்த்த எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. காரணம், அவர் அணிந்திருந்த கைதிச் சீருடை.

இங்கே இன்னொரு விஷயத்தையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். கலைஞர் தமிழக முதல்வரானதும்தான் கைதிகளின் சீருடையை மாற்ற உத்தரவிட்டார்.

அதுவரை கட்டம் போட்ட டிரவுசர், மேலாடையுடன் குல்லா அணிய வேண்டும். கலைஞர்தான் வெள்ளைச் சீருடையைப் பரிந்துரைத்து மாற்றி உத்தரவிட்டார். இப்போது அதே சீருடையில் என் முன்னால் அமர்ந்திருக்கிறார்.

வெளியே அவரைக் காண ஏகத்துக்கும் கூட்டம். கடுங்காவல் தண்டனை என்பதால், அனைவரும் உணர்ச்சிப் பிரவாகத்தில் இருந்தார்கள். சிலர் அழுகையுடன் காணப்பட்டார்கள்.

இதோ அவர்களைப் பார்க்கச் செல்கிறார் கலைஞர். அவரைப் பார்த்த அந்த சில நொடிகள் மட்டும் கனத்த மெளனம். அத்தனை பேரும் உறைந்து நின்றார்கள். சில நொடிகளில் அங்கே பேரிரைச்சல். ‘தலைவரே… உங்களுக்கா இந்த நிலைமை!’ என்று அனைவரும் கதறி, கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒருவழியாக திரும்பிவந்தார் அவர். அவரிடம் நான், ‘‘அண்ணே! எல்லாரும் ரொம்ப வருத்தப்படுறாங்க… உங்களுக்கு ஏ கிளாஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதனால், தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகும்போது கைதி உடை அணிந்தால் போதும். மற்ற நேரங்களிலும், பார்வை யாளர்களைப் பார்க்கும்போதும் கைதி உடை வேண்டாமே…’’ என்றேன்.

உடனே என்னைக் கூர்ந்து பார்த்தவர் மெல்லிய புன்னகையுடன், ‘‘இந்தக் கைதி உடையை நான் இன்று அணிந்ததற்கான காரணம் நாளைக் காலை உங்களுக்கு விளங்கும்’’ என்றார் பூடகமாக. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

அடுத்த நாள் காலை அனைத்துப் பத்திரிகைகளிலும் பிரதான செய்தியே கலைஞர்தான். கைதி உடையுடன் அலுமினியத் தட்டு, குவளையைப் பிடித்துக்கொண்டு நிற்பதுபோன்ற புகைப்படம், ‘கைதி உடையில் கருணாநிதி!’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன்.

அவரைப் பார்த்து, ‘‘இந்தப் புகைப்படத்தை எனக்குத் தெரியாமல் எப்போது எடுத்தீர்கள்… புகைப்படம் எடுக்க உங்களுக்கு அனுமதி இல்லையே!’’ என்றேன்.

அதற்கு அவர், ‘‘இப்போது எடுக்கவில்லை. முரசொலி அலுவலகத்தில் போட்டோஷாப்பில் ஏற்கெனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பழைய புகைப்படம்’’ என்றார்.

ஒரு நிமிடம் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், தொலைபேசி அலறியது. அழைத்தது டி.ஜி.பி!

‘‘கருணாநிதிக்குக் கைதி உடை கொடுத்தீர்களா? முதலமைச்சர் கேட்கிறார்’’ என்று கேட்டார்.

‘‘ஆம். கொடுத்தது உண்மைதான்’’ என்றேன்.

‘‘யாரைக் கேட்டுக் கொடுத்தீர்கள்?’’ என்றார் கோபமாக.

‘‘கடுங்காவல் தண்டனை என்றால் சிறை விதிகளின்படி கைதி உடைதானே கொடுக்க வேண்டும்’’ என்றேன்.

அவர், ‘‘சட்டம் எனக்கும் தெரியும். முன்னாள் முதல்வருக்குக் கைதி உடையைக் கொடுக்கும்போது ஒரு வார்த்தை கேட்டுவிட்டுக் கொடுத்திருக்கலாமே…’’ என்றார்.

நானும் அவசரப்பட்டுவிட்டோமோ என்று வருத்தப்பட்டேன்.

டி.ஜி.பி-யை அழைத்துப் பேசியிருக்கிறார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘

‘ஏன் அவருக்குக் கைதிச் சீருடையைக் கொடுத்தீர்கள்?’’ என்று கோபமாகக் கேட்டிருக்கிறார். காலையில் பேப்பரைப் பார்க்காத டி.ஜி.பி., ‘கருணாநிதிக்கு கைதிச் சீருடை தரப்படவில்லை!’ என்று கூறிவிட்டார்.

திரும்பவும் டி.ஜி.பி என்னை அழைத்து, ‘‘அவருக்குக் கொடுக்கப்பட்ட கைதிச் சீருடையைத் திரும்பப் பெறுங்கள்’’ எனக் கட்டளையிட்டார். நானும் கலைஞரிடம் சென்று, கைதி சீருடையைத் திரும்பக் கேட்டேன். ‘‘அதெல்லாம் கொடுக்க முடியாது. நான் அதை திருப்பிக் கொடுத்துவிட்டால் பத்திரிகைகள் பொய் கூறியதுபோல் ஆகாதா… முடியாது!’’ என்று மறுத்துவிட்டார்.

இதற்கிடையில் உளவுப்பிரிவினர் விசாரித்து, ‘‘கோர்ட்டிலிருந்து சிறைக்குச் சென்றதும் நேற்று மாலையே கருணாநிதிக்கு கைதிச் சீருடை கொடுக்கப்பட்டுவிட்டது’’ என்று முதல்வருக்கு ரிப்போர்ட் போட்டுவிட்டனர்.

டி.ஜி.பி-யை அழைத்த முதல்வர் எம்.ஜி.ஆர், ‘சிறைக்குப்போய் நேரில் பார்த்து வாருங்கள்’ என்று சொல்லி விட்டார்.

டி.ஜி.பி என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘‘நான் காலை 10 மணிக்கு அங்கு வருகிறேன். அப்போது கலைஞர் கைதிச் சீருடையில் இருக்கக் கூடாது’’ என்று கட்டளையிட்டார்.

நான் கலைஞரிடம் சென்று, ‘‘நீங்கள் கைதிச் சீருடையில் இருந்தால் என் வேலைக்கு ஆபத்து!’’ என்று தயக்கத்துடன் எடுத்துச் சொன்னேன்.

என்னைக் கனிவாகப் பார்த்தவர், ‘‘உங்களுக்கு ஒரு தீங்கு வருமென்றால், அதனால் கிடைக்கும் எந்தப் பயனும் எனக்குத் தேவையில்லை’’ என்று கூறி கைதிச் சீருடைகளைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.

கைதி உடையில் கருணாநிதியைப் பார்த்து மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே எம்.ஜி.ஆர் இப்படிச் செய்தார் என்று பலரும் பேசினார்கள்.

உண்மையில் தன் நண்பரை அந்த உடையில் பார்க்க அவர் விரும்பவில்லை என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரிந்திருந்தது.

கடுங்காவல் தண்டனையால்தான் கைதி உடை என்பதை அறிந்த எம்.ஜி.ஆர்., தனது முதலமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ‘கருணாநிதி உள்ளிட்ட அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்து சிறைக்கு வெளியே அனுப்பிவிட வேண்டும்’ என ஆணை பிறப்பித்தார்.

ஆணையைக் கலைஞரிடம் வாசித்தேன். சிரித்துக்கொண்டே, ‘‘நேற்று நான் கைதிச் சீருடை அணிந்து பார்வையாளர்களைச் சந்திக்க வந்தது ஏனென்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமே!’’ என்றார்.

‘‘உங்கள் அரசியல் திருவிளையாடல்கள் எங்களுக்குப் புரியாது. நீங்கள் சீக்கிரம் புறப்படுங்கள்’’ என்றேன்.

‘‘என்ன… ரொம்ப அவசரப்படுத்துகிறாய். சட்டப்படி சிறையில் எனக்கு இன்று மதியச் சாப்பாடு உண்டு. மதியம் சாப்பிட்டுவிட்டுதான் செல்வேன்’’ என்று தாமதப்படுத்தினார்.

வேறு வழியின்றி மற்ற சிறைவாசிகளை முதலில் விடுதலை செய்தேன். கலைஞர் விடுதலையாகும்போது அலைகடலாய் வெளியே தொண்டர்கள் திரண்டிருந்தனர்”.

– நன்றி : வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜூனியர் விகடன் இதழ்

You might also like