‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார்.
கோயிலுக்கு பின்புறம் சங்கரபீடம் இருக்கிறது. அங்கே தான் ஆதிசங்கரர் தவம் செய்து பின்னர், மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். சிறப்பு அனுமதி பெற்று சங்கரபீடத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். தனிமையில் தியானம் செய்ய சங்கர் ஏற்பாடு செய்தார்.
ஒரு மணி நேரத்துக்கு பின் வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ‘‘நிம்மதியாக இருந்த இந்தத் தருணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.
சங்கர் வீட்டில் நடந்த ஒரு திருமணத்தின்போது, அவருக்கு பண உதவி செய்வதாக கூறியவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டனர்.
திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தவுடன் வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் சங்கர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மணமக்களை வாழ்த்திவிட்டு சங்கர் கையில் இரண்டு பாக்கெட்களை திணித்தார். அவற்றில் சங்கருக்குத் தேவையான பணம் இருந்தது.
சங்கர் நெகிழ்ந்து கூறினார்:
‘‘மகாபாரதக் கர்ணன்கூட கேட்டவர்களுக்குத்தான் கொடுத்தான். கேட்காமலேயே மற்றவர்களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.!’’
குறிப்பு: ‘வேட்டைக்காரன்’ படப்பிடிப்பு நிகழ்ந்தபோது எதார்த்தமாக சந்தித்துக் கொண்டர் எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், இயக்குநர் கே.சங்கர்.
நன்றி: தி இந்து