மாற்றம் பெறுமா உயர்கல்வி?

சமீபத்தில் (13.09.2023) மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை செயலகத்திலிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதம் வலியுறுத்தும் செய்தி நம் பஞ்சாயத்துக்களும் உயர்கல்வி நிறுவனங்களும் பங்குதாரர்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான்.

உயர்கல்வி நிறுவனங்கள் சமூகத்துடன் இணைந்து மக்களுக்குச் சேவை புரிவதை இன்றைய மத்திய அரசு கட்டாயக் கடமையாக்கிவிட்டது. அதற்கான ஒரு திட்டத்தையும் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதுதான் உன்னத் பாரத் அபியான் 2.0. இந்தத் திட்டத்தின் மூலம் உயர் கல்வி நிறுவனங்கள் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவிட முடியும் என்ற நோக்கில்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில் பெருமளவில் சமூகத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்யும் வளங்கள் உள்ளன. அது திறன் வளர்ப்பாக இருக்கலாம், சில தொழில்நுட்பங்களாக இருக்கலாம், சில விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்திகளாக இருக்கலாம், அவைகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டு செயல்படும்போது மக்களின் தேவைகள் மட்டும் பூர்த்தி செய்யப்படுவதில்லை, மாணவர்களின் திறனும் வளர்க்கப்படும், அத்துடன் அவர்களுக்கு சமூகம் சார்ந்து சிந்திக்கும் பார்வையும் உருவாகிவிடும்.

இந்தச் செயல்பாடு என்பது நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஒருசில உயர் கல்வி நிறுவனங்களில் நடந்து கொண்டுதான் இருந்தது. அதற்குப் பெயர் விரிவாக்கப்பணி. அந்த விரிவாக்கப்பணி என்பது ஒருசில உயர் கல்வி நிறுவனங்களில் கட்டாயப் பணியாக இருந்தது. மற்ற நிறுவனங்களில் அது விருப்பக் கடமையாக இருந்தது.

காந்திய நிறுவனங்களும் ஒருசில கிறித்துவ உயர்கல்வி நிறுவனங்களும் விரிவாக்கப் பணியை நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து செம்மையாக செய்து வந்தன என்பது மட்டுமல்ல, இந்த விரிவாக்கப் பணியை எல்லா உயர்கல்வி நிறுவனங்களும் கட்டாயக் கடமையாகச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பல்கலைக் கழக மானியக் குழுவையும் மத்திய அரசையும் வலியுறுத்தி வந்தன.

குறிப்பாக காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம் பலமுறை பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் இங்கு வந்தபோதும் சரி, மற்ற உயர்நிலைக் கூட்டங்களிலும் இந்தக் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்தக் கருத்தை ஏதோ தத்துவார்த்த நிலையில் ஆலோசனையாக வைக்கவில்லை, தங்கள் உயர்கல்வி நிறுவனத்தின் மூலம் களச் செயல்பாட்டில் சமூகம் பெற்ற பயன்களையும், களப்பணியாற்றிய மாணவர்கள் பெற்ற பயன்களையும் அடிப்படையாக வைத்து இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் பரிந்துரை செய்தது.

இந்த நீண்ட நாள் கோரிக்கையை இன்றைய மத்திய அரசு கவனத்தில் கொண்டு விரிவாக்கப்பணியை கட்டாயக் கடமையாக அறிவித்து ஆணை பிறப்பித்து விட்டது.

அதற்குக் காரணம் பல்கலைக் கழக மானியக்குழு ஓர் குழு அமைத்து இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வைத்து ஓர் அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. அந்தக் குழுவின் அறிக்கையிலும் காந்தி கிராம விரிவாக்கப் பணி மேற்கோள் காட்டப்பட்டு இதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டிருந்தது.

இதற்கும் மேலாக புது டெல்லியில் இயங்கும் ஆசிய பங்கேற்பு ஆய்வு (Participatory Research in Asia) என்ற நிறுவனத் தலைவர் உயர்கல்வி நிறுவனங்கள் மக்களுடன் பணி செய்ய வேண்டும் என்பதை ஒரு முப்பது ஆண்டுகாலமாக யுனெஸ்கோவுடன் இணைந்து உலக நாடுகளிலெல்லாம் பரப்புரை செய்து பல நாடுகளில் நடைமுறைப்படுத்தியதன் அடிப்படையில் இந்திய அரசையும் வலுயுறுத்தி வந்தார்.

அதன் அடிப்படையில் இந்திய அரசு அவரையும் இதில் ஒரு உறுப்பினராகச் சேர்த்தது மத்திய அரசு.

மத்திய அரசு இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது மட்டுமல்ல, இதற்கான பிரத்தியேகத் திட்டம் ஒன்றையும் உருவாக்கி அறிவித்தது. அதுதான் உன்னத் பாரத் அபியான்.

ஆனால் இந்தத் திட்டத்தை ஒரு சில கல்வி நிறுவனங்களைத் தவிர எவரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அதற்கு மாநில அரசுகளும் பெரும் முன்னெடுப்பைச் செய்யவில்லை.

ஆனால் மத்திய அரசு இதை விடுவதாக இல்லை. அந்தத் திட்டம் ஏன் தொய்வடைந்தது எனக் கண்டுபிடித்து அதற்கு உயிரூட்ட உன்னத் பாரத் அபியான் 2.0 என்ற திட்டத்தை மறுபடியும் அறிவித்து அதற்கு நிறுவனங்களைக் கண்டுபிடித்து, பொறுப்பேற்கச் செய்து வலுப்படுத்தி வருகிறது. இன்று இந்தப் பணி வலுவடைந்து வருகிறது.

இந்த நேரத்தில் இந்தக் கடிதம் ஏன் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எழுதியுள்ளது என்பதை புரிந்து கொண்டு நம் அரசு செயல்பட்டால் இந்தத் திட்டம் வெற்றி பெறும் என்பது முக்கியமல்ல, நம் கிராமங்கள் பயன் அடையும் என்பதுதான் முக்கியமான கருத்தாகும்.

இந்தக் கடிதத்திற்கு ஒரு பின்னணி உண்டு. மத்திய அரசு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு பயிற்சித் திட்டம் ஒன்றை கொள்கை அளவில் உருவாக்க ஒரு குழு அமைத்திருந்தது. அந்தக் குழு பலமுறை கூட்டம் நடத்தி வல்லுனர்களின் கருத்துக்களைக் கேட்டு ஓர் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

அந்தக் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு மிக முக்கியமான பரிந்துரை உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து ஒருசில கிராமங்களில் தொடர் செயல்பாடுகளில் ஈடுபட்டால் மிகப்பெரிய மாற்றங்களை சமூகத்தில் கொண்டுவர முடியும் என்பது.

இந்தக் குழுவிற்கு நான் பலமுறை அழைக்கப்பட்டு அதில் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்திருக்கிறேன். அந்தப் பரிந்துரையும் எனது கருத்து அல்ல, எங்கள் பல்கலைக்கழகத்தில் நாங்கள் செய்த பணிகளின் அனுபவங்களை வைத்து கொடுக்கப்பட்டதுதான்.

பல்கலைக் கழகங்கள் சமுதாயத்திற்குத் தேவையான பல வளங்களை வைத்திருக்கின்றன. சமூகத்தில் இன்னும் பல உணர்ந்த தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. சமூகமும் பல்கலைக் கழகங்களும் இணையும்போது மக்களின் தேவையும் பூர்த்தி செய்யப்படும், பல்கலைக்கழகமும் இந்தச் செயல்பாடுகளால் பயன்களைப் பெற முடியும் என்ற கருத்தை அந்தக் குழு ஏற்று பரிந்துரை செய்திருந்தது.

இன்று கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் திட்டமிடும் பணி என்பது கட்டாயக் கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கிராமப் பஞ்சாயத்துக்களால் அதை நிறைவேற்ற இயலவில்லை. காரணம் அதற்கான நிபுணத்துவமும் அங்கு இல்லை, அதற்கான கட்டமைப்புகளும் இல்லை. ஆனால் இதற்கான நிபுணத்துவம் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ளது. இருந்தபோதும் அது பயன்படுத்தப்படவில்லை.

இதேபோல் ஐ.நா.வில் நீடித்த வளர்ச்சியின் குறிக்கோள்களை அடைய கிராமங்களும் நகரங்களும் பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இருந்தும் அந்தச் செயல்பாடுகளை எப்படி அடிமட்டத்தில் செய்வது என்பதை பஞ்சாயத்துக்களுக்கு கற்றுத் தரவேண்டிய முக்கியப் பங்கு உயர் கல்வி நிறுவனங்களுக்குத் தரப்பட்டுள்ளன இந்த உன்னத் பாரத் அபியான் 2.0ன் மூலம்.

எனவே இந்த இரண்டு பணிகளையும் கிராமங்களில் கிராமப் பஞ்சாயத்துக்கள் செய்திட வேண்டும். இதற்குத் தேவையான நிபுணத்துவத்தைப் பெற்றிருக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் கிராமப் பஞ்சாயத்துக்களுடன் கைகோர்த்துச் செயல்பட்டால் மக்கள் பயன்பெறுவார்கள் என்ற அடிப்படையில் கல்வித்துறையும், ஊரக வளர்ச்சித்துறையும் இணைந்து இந்த முன்னெடுப்பைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் மத்திய அரசு இந்த கடிதத்தை மாநில அரசுகளுக்கு எழுதியுள்ளது.

இந்தக் கடிதத்துடன் இந்தப் பணியை கேரளா மாநிலத்தில் ஒரு கல்லூரி எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் செயல்பட்டு ஒரு திட்ட அறிக்கையை உருவாக்கி அந்தப் பஞ்சாயத்திற்குத் தந்துள்ளது. அதனை ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்துடன் கேரளப் பஞ்சாயத்தில் நடைபெற்ற இந்த பரிச்சார்த்த செயல்பாட்டின் அடிப்படைகளை விளக்கி ஒரு கருத்துத்தாள் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அந்தக் கல்லூரியும் கிராமப் பஞ்சாயத்தும் இணைந்த செயல்பட்ட முறைமையும் விளக்கப்பட்டுள்ளது. இதனை முன்னுதாரணமாக வைத்து மாநிலங்கள் முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது மத்திய அரசு.

தமிழகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் முன்பே நடத்தப்பட்டுள்ளன. பல கிராமப் பஞ்சாயத்துக்கள் சமூக மேம்பாட்டை மையப்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட நிர்வாகத்தின் பங்கேற்புடன் செய்துள்ளன. அதை காந்திகிராமப் பல்கலைக்கழகமே ஒருங்கிணைத்துச் செய்துள்ளது. அதன்பின் ஒருசில பஞ்சாயத்துக்கள் ஒருசில தன்னார்வல நிறுவன உதவியுடன் வளர்ச்சித் திட்டம் தயாரித்தன.

ஆனால் அவைகள் அனைத்தும் தொடரவில்லை. அதற்கு மிக முக்கியக் காரணம் ஒன்று அரசு தொடர்ந்து அதில் ஆர்வம் காட்டவில்லை. இரண்டு பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இதன் முக்கியத்துவமும் தெரியவில்லை, அத்துடன் இந்தப் பணியைச் செய்ய அவர்களிடம் கட்டமைப்பும் இல்லை. இன்று இந்தக் குறையைப் போக்கிடத்தான் கிராமப் பஞ்சாயத்துக்கள், அருகில் இருக்கும் உயர்கல்வி நிறுவனத்தை முறையாக அணுக வேண்டும் என்ற அறிவுரையை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அப்படி அணுகும்போது உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் உன்னத் பாரத் அபியான் 2.0 திட்டத்தின் மூலம் பஞ்சாயத்துத் திட்டமிடலுக்கு உதவிட முன்வர வேண்டும். இந்த செயல்பாட்டை ஊக்குவிக்க மாநில அரசு முன்வர வேண்டும். கேரளாவில் நடைபெற்றுள்ள இந்தத் திட்டமிடலில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். மிகக் குறைந்த செலவில் அந்தத் திட்டத்தைத் தயாரித்துத் தந்துள்ளனர். தமிழ்நாட்டில் முன்பு தயாரித்த திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்பட்டது. அதை ஹங்கர் திட்டம் போல் உள்ள நிறுவனங்கள் உதவியளித்தன.

தற்போது கூட இரண்டு கிராமப் பஞ்சாயத்துக்கள் (முத்துகாபட்டி கிராம பஞ்சாயத்து, நாமக்கல் மாவட்டம், பிரதாமபுரம் கிராமப் பஞ்சாயத்து நாகை மாவட்டம்) நல்ல திட்டத்தினை தயாரித்து வைத்திருக்கின்றன. இந்தத் திட்டங்களை தயாரிக்க மிகுந்த சிரமங்களை இந்தப் பஞ்சாயத்துக்கள் அனுபவத்திருக்கின்றன. இருந்தும் திட்டங்களை தயாரித்து விட்டன இந்தப் பஞ்சாயத்துக்கள்.

கடந்த காலங்களில் பல வாய்ப்புக்களை தவற விட்டிருக்கின்றோம். இந்த புதிய வாய்ப்பை நம் அரசும், பஞ்சாயத்துக்களும், உயர்கல்வி நிறுவனங்களும் பயன்படுத்தி ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்கான செயல்பாடுகளை உள்ளூர்மயப்படுத்தி கிராமப் பஞ்சாயத்துக்களில் திட்டம் தீட்டி அடிப்படை மாற்றங்களை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் கொண்டுவர வேண்டும்.

இந்த புதிய வாய்ப்பைப் பயன்படுத்தி நம் பஞ்சாயத்துக்கள் திட்டம் தீட்டிட முயற்சிக்க வேண்டும். இதற்கான உந்து சக்தியை மாநில அரசு பஞ்சாயத்துக்களுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும், பயிற்சி நிறுவனங்களுக்கும் தந்திட வேண்டும்.

டாக்டர் க. பழனித்துரை

You might also like