நூல் அறிமுகம்:
அயோத்திதாசர் யார்? அவரை எப்படிப் புரிந்துகொள்வது? அவர் யாருக்கானவர்? நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியவற்றை இன்றைய தேதியில் எப்படி உள்வாங்கிக் கொள்வது?
அவர் கட்டமைக்கும் வரலாற்றிலிருந்து, அவர் முன்வைக்கும் பண்பாட்டிலிருந்து, அவர் கண்டடையும் தொன்மத்திலிருந்து நாம் எவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ள முடியும்?
அயோத்திதாசரை ஒரு தலைசிறந்த சிந்தனையாளராகவும் செயலூக்கம் கொண்ட ஒரு செயற்பாட்டாளராகவும் பொதுவெளியில் அறிமுகம் செய்து வைத்தவர்களுள் முதன்மையானவர் டி.தருமராஜ்.
அயோத்திதாசரை நாம் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் வகுத்துக் கொடுக்கும் ஆய்வுச் சட்டகங்கள் புதுமையானவை, முக்கியமானவை.
தருமராஜின் ஆய்வு முறையியலையும் அந்த முறையியலைப் பொருத்தி ஆராய்வதன் மூலம் வெளிப்படும் அயோத்திதாசரையும் பன்முக நோக்கில் அணுகி, விவாதிக்கிறது இந்நூல்.
ஜெயமோகன், ஸ்டாலின் ராஜாங்கம், சமஸ், பிரேம், ஏர் மகாராசன், சரவண கார்த்திகேயன், சுரேஷ் பிரதீப், ஈஸ்வரபாண்டி, சாந்தி நக்கீரன், இராவணன் அம்பேத்கர், கோபிநாத், கலையரசி, சக்திவேல், கார்த்திக், மனோஜ் பாலசுப்ரமணியன் ஆகியோர் வெவ்வேறு கோணங்களிலிருந்து தர்மராஜின் பங்களிப்புகளை ஆராய்கின்றனர்.
தருமராஜின் கட்டுரையொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்நூலைத் தொகுக்கும் பெரும் பணியை மேற்கொண்டதோடு ஓர் ஆய்வுக் கட்டுரையையும் வழங்கியிருக்கிறார் அரிபாபு.
பண்பாடு, கலை, அரசியல், மொழியியல், சமூகவியல், மானுடவியல், தத்துவம், வரலாறு போன்ற துறைகளில் தேடலும் ஆர்வமும் கொண்டவர்களுக்கு இந்நூல் பல புதிய திறப்புகளை அளிக்கும் என்பது உறுதி.
**********
டி. தருமராஜின் அயோத்திதாசரியம்
தொகுப்பாசிரியர்: பா.ச.அரிபாபு
விலை: ரூ. 428/-