நூல் அறிமுகம்:
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது.
தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது. அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள், புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது.
ஞானக்கூத்தன் எழுதிய 123 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். வாசகனின் ‘உளம் நிற்கும் நூல்’.
நமது இன்றைய வாழ்வின் கோலங்களை எள்ளலுடனும் கனிவுடனும் சமயங்களில் வேடிக்கையாகவும் சித்திரிக்கும் இந்தக் கவிதைகள் பன்முகம் கொண்டவை.
பல குரலில் பேசுபவை. சில புதிரானவை. சில மர்மமானவை. சில வெளிப்படையானவை. சில ரகசியமானவை. சில வினோதமானவை. சில அபத்தமானவை. சில இயல்பானவை. சில பிரகாசமானவை.
நவீன மனிதனைப் போன்று அதிநவீனமானவை இந்தக் கவிதைகள். விரிவான களங்களிலும் மாறுபட்ட காலங்களிலும் வேறுபட்ட பார்வைகளுடனும் தனித்துவமான கூறல் முறையிலும் துணிச்சலான சோதனை நோக்கிலும் உருவான இந்தக் கவிதைகள் ஒரு முதிர்ந்த கவிஞரின் பக்குவப்பட்ட இளமைக்குச் சான்றாக நிற்கின்றன.
நூல்: ‘என் உளம் நிற்றி நீ’
ஆசிரியர்: ஞானக்கூத்தன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.162/-