‘தீபம்’ நா.பார்த்தசாரதி: மலர்களைத் தேடித் தவித்த மணிவண்ணன்!

தமிழ்நாட்டின் முன்னணித் தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையான ஒரு சிலருள் ஒருவர் தீபம் நா பார்த்தசாரதி அவர்கள்.

நா.பா. என்றதுமே என் தலை முறை வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உடனே நினைவுக்கு வரும் படைப்புகளில் சில : குறிஞ்சி மலர், பொன் விலங்கு, மணி பல்லவம், பாண்டி மாதேவி, நித்திலவல்லி, ஆத்மாவின் ராகங்கள், மகாத்மாவைத் தேடி,

பிறந்த மண், நெற்றிக்கண், கோபுர தீபம், நெஞ்சக்கனல், நினைவின் நிழல்கள், சாயங்கால மேகங்கள், கபாடபுரம், மனக்கண், வஞ்சி மாநகரம், பட்டுப்பூச்சி, ராணி மங்கம்மாள் போன்ற நாவல்கள்.

அவருடைய சிறுகதைத் தொகுப்புகளுள் மலைச் சிகரம், ஒப்புரவு, பிரதிபிம்பம், கண்ணன் கதைகள், தூங்கும் நினைவுகள், மங்கி யதோர் நிலவினிலே, வேனில் மலர்கள், காலத்துக்கு வணக்கம், வலம்புரிச் சங்கு, கங்கை இன்னும் வற்றி விடவில்லை போன்றவை முக்கியமானவை.

சிறந்த ஆய்வாளராகவும், கட்டுரையாளராகவும் விளங்கிய ஒரு புலமைத்துவ அறிஞர் நா.பா. அவர்கள்.

தொல்காப்பியத்தை ஆய்வு செய்து மொழியின் வழியே, சொல்லின் செல்வம் போன்ற நூல்களையும், தொன்மை மிகு தமிழர் நம் கட்டிடக்கலை குறித்து ஒரு நூலையும் படைத்தளித்தவர்.

இவரின் படைப்புகளைக் காட்டிலும், தமிழ் மொழிக்கு இவரின் அருங்கொடை எதுவென்றால், சுமார் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் ‘தீபம்’ என்ற இலக்கிய மாத இதழைத் தொடர்ந்து இடையறாமல் நடத்தி வந்ததுதான்.

அது ஒரு சிற்றிதழ் தான் எனினும், சில ஆய்வாளர்கள் அதை இடைநிலை இதழ் என்றுதான் மதிப்பி டுகிறார்கள். எ

ன்ன பெயர் வைத்தாலும் ரோஜாவுக்கு மனம் இல்லை என்று யாரும் சொல்லி விட முடியாதல்லவா? தீபத்தின் பணியும் அப்படித்தான் இன்றும், என்றும் அணையா நெடுந்தீபமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.

இன்று புகழ் பெற்று விளங்கும் பல படைப்பாளிகள் தீபத்தின் மூலமே பிரபல மாகிப் போற்றப்பட்டார்கள் என்பதை யாரும் மறுக்கவியலாது.

நாஞ்சில் நாடன், வண்ணதாசன், வண்ண நிலவன், சுப்ரபாரதி மணியன், தி.சா.ராஜு, சுப்ரமண்ய ராஜு, பாவண்ணன், வே.சபாநாயகம் – என்று ஒரு பெரிய பட்டியல் போடுமளவிற்குப் பலரும் இந்த வகையில் அடங்குவார்கள்.

மறைந்த புகழ் பெற்ற படைப்பாளியான வல்லிக்கண்ணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூலான ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற புத்தகம், தீபத்தில் தொடராக வந்ததுதான்!

அவரின் வேறு சில வரலாற்றுக் கட்டுரைகளையும் தீபமே தொடர்களாக வெளியிட்டது. அவை: ’தமிழில் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்,’ ‘சரஸ்வதி காலம்’, ’தமிழில் சிறு பத்திரிகைகள்’- போன்ற பலவற்றைக் கூறலாம்.

சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையா போன்ற முன்னோடிகளும் தீபத்தில் தொடர்களை எழதியவர்களே. நாஞ்சில் நாடன் அவர்களின் புகழ் பெற்ற நாவலான ‘மாமிசப் படைப்பு’ தீபத்தில் தொடராக வெளியானதுதான்.

இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளில் இருந்து தீபத்தின் மேல் அன்பும், அக்கறையும் உள்ள வாசகர்கள் ஒவ்வொரு மாதமும் அந்தந்த நாடுகளில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளையும், புத்தக வெளியீடுகளையும் பற்றிய செய்திக்கடிதங்களைத் தொடர்ந்து எழுதிவந்தார்கள்.

’இலக்கிய மேடை’ என்ற கேள்வி-பதில் பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு நா.பா. அவர்கள் சூடும் சுவையுமிக்க மறுமொழிகளை வழங்கி வந்தார்.

வாசகர்கள் ஒவ்வொரு இதழ் வெளியானவுடன் படித்து விட்டுத் தங்களின் விமரிசனங்களை, மதிப்பீடுகளை அனுப்பினார்கள்.

அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதப் பகுதிகள் ‘சங்கம்’ என்ற பகுதியில் மாதந்தோறும் வெளியிடப்பட்டன.

‘தீபம் இலக்கியக் குடும்பம்’ என்ற பகுதியில், தீபத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான வகையில் கை கொடுத்து வந்த பல நண்பர்களைப் பற்றி நா.பா.அவர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாக அறிமுகம் செய்து வந்தார்.

கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் அண்ணாச்சி அவர்கள், அவிநாசி முருகேசன் என்ற எழத்தாளர், மதுரை டாக்டர் கமலம் சங்கர், கர்ணன், அசோகா பாக்கு நிறுவன உரிமையாளர் போன்ற பலரும் இப்பகுதியில் இடம் பெற்றிருந்தனர்.

தீபம் அட்டைப்படங்களில் இடம் பெற்ற பல ஓவியங்கள் நீண்டகாலம் வரை மரபார்ந்த ஓவியங்களாகவே இருந்தன. அவற்றைத் தொடர்ந்து வரைந்தளித்தவர் அமுதோன் என்ற ஓவியக்கவிஞர் ஆவார்.

பிற்பாடு கோவி.பரஞ்சோதியின் நவீன ஓவியங்கள் அட்டையை அலங்கரித்தன. மு.மேத்தாவின் புகழ் பெற்ற பல கவிதைகள் தீபத்தில் வெளியானவையே.

அஞ்சறைப் பெட்டி, இலக்கியப் படைப்பாளிகள் சந்தித்துத் தமக்குள்ள உரையாடும் ‘இலக்கியச் சந்திப்பு’ பகுதி- போன்றவையும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவை.

நா.பா.வின் பொய்ம்முகங்கள், ஆத்மாவின் ராகங்கள் போன்ற பல நாவல்கள் தொடர்களாகத் தீபத்திலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

எனது குறிப்பேடு என்ற பகுதியில் ஒவ்வோர் இதழிலும் நா.பா.பல்வேறு இலக்கிய, சமூக, அரசியல் விஷயங்களைப் பற்றிய தன் சிந்தனைகளை எழுதிக்கொண்டிருந்தார்.

அவரது நாவல்களில் நா.பாவின் ஆழ்ந்த தமிழ் மரபிலக்கியப் புலமை வெளிப்படும் வகையில், பல்வேறு இலக்கிய மேற்கோள்களைக் கதைக்குப் பொருத்த மான விதத்தில் கொடுப்பது வழக்கம்.

சில சமயங்களில் நா.பா.வின் கவிதைகளும், சிந்தனைகளும் இவ்வாறு இடம் பெற்று வாசக மனங்களைக் கவர்ந்து ஈர்த்ததும் உண்டு.

மணிவண்ணன் என்ற நா.பா.வின் புனைபெயர், மிகவும் பிரபலமானது. அதைத் தவிர, செங்குளம் வீரசிங்கக் கவிராயர், தீரன், பொன்முடி, வளவன், கூடலழகன், இளம்பூரணன் போன்று வேறு பல புனைபெயர்களிலும் நா.பா. தன் கவிதைகளையும், அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் எழுதி வந்திருந்தார்.

பொன்முடி என்ற புனைபெயரில் அவர் எழதிய ‘ஒரு வழிகாட்டிக்குத் தன் வழி தெரியவில்லை…’ என்ற குறுநாவல் மிகவும் புகழ் பெற்ற படைப்பாகும்.

குடிமக்கள் காப்பியம் என்று நம் சிலப்பதிகாரக் காப்பியம் போற்றப்படுவது அனைவரும் அறிந்ததே. அதே போல, குடிமக்கள் வரலாற்று நாவல் என்று இவரின் மணிபல்லவம் நாவலைக் குறிப்பிடுவதுண்டு.

காரணம், அன்றைய புகார் நகரில் வாழ்ந்த இளங்குமரன், சுரமஞ்சரி, நீல நாக மறவர், முல்லை, நகை வேழம்பர், ஓவியன் மணிமார்பன், அருட்செல்வ முனிவர் போன்ற பல சாதாரண மனிதர்கள் இந்த நாவலின் கதைமாந்தர்களாக இதில் இடம் பெற்றிருப்பதுதான்.

ஏன் அரசர்களையும், அரசிகளையும் தவிர்த்து விட்டுப் புகார் நகரின் படை வீரர்கள், செல்வர்கள், இளம் பெண்கள் போன்ற குடிமக்களைக் கதை மாந்தர்களாக நா.பா. தேர்வு செய்தார்?

அவரே இது பற்றி மணிபல்லவம் நாவலில் ‘எழுதியவன் கதை’ என்ற முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்:

“தமிழ்நாட்டில் சரித்திர நாவல்கள் என்றால், அரசர்- அரசி, படைத்தலைவர், அமைச்சர் என்று கதாபாத்திரங்களை வகுத்துக் கொண்டு எழதுவதே இதுவரை வழக்கம்.

இதனால், ஆண்ட வாழ்வின் ஒரு பகுதி ஒளி நிறுவிக் காட்டப்பட்டதே தவிர, ஆளப்பட்ட வாழ்வு என்ற பெரும் பகுதி விவரிக்கப்பெறவில்லை.

பேரரசர்கள் பலர் போர்கள் செய்து வெற்றிவாகை சூடி வீர வாழ்வு வாழ்ந்தும், அரசவையில் அரியணையில் அமர்ந்தும் பீடுறக் காலங்கழித்த நாள்களில், அவர்கள் அங்ஙனம் காலங்கழிக்கக் காரணமான மக்களும் பல்லாயிரவர் வாழ்ந்திருக்கத் தானே வேண்டும்? அந்த மக்களிலும் வீரர்கள் இருந்திருப்பார்கள்.

பல்வேறு சமயச் சார்புள்ள விதவிதமான மக்கள் விதவிதமாக வாழ்ந்திருப்பார்கள். ஈடு சொல்ல முடியாத அழகர்கள் இருந்திருப்பார்கள்.

அரசகுலத்து நங்கையரை அழகிற் புறங்காணும் பேரழகிகள் இருந்திருப்பார்கள். அவர்களிடையே நளின மான உறவுகள், காதல், களிப்பு எல்லாம் இருந்திருக்கும். வாழ்க்கைப் போராட்டங்கள் இருந்திருக்கும்.

ஆனால், பெரும்பான்மையானதும், சரித்திரத்தை உண்டாக்கியதும், சரித்திரத்தின் பொன்னேடுகளில் நாயகம் கொண்டாடும் பேரரசர்களை அப்படிப் பேரரசர்களாக ஆக்கியதுமான இந்த மக்கள் கூட்டத் தின் மேல், வரலாற்று நாவலாசிரியர்கள் எந்த அளவுக்கு ஒளியைப் படர விட்டார்கள்? எந்த அளவு கவனம் செலுத்த முயன்றார்கள்?”

“பழைய வாழ்வின் இந்த அழகிய பகுதி மறைந்தே இருக்கிறது. மணிபல்லவம் நாவலின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, இந்த அழகிய வாழ்க்கையைப் புனைந்து கூற முயல்வது. இந்தக்கதையில் எழில் நிறைந்த பெண்கள் வருகிறார்கள்.

ஆனால் அவர்கள் அரசகுல நங்கையரில்லை. காதலும், வீரமும், சோகமும் இன்பமும், சூழ்ச்சியும், சோதனையும் வருகின்றன. ஆனால், அவை அரண்மனைகளையும், அரச மாளிகைச் சுற்றுப்புறங்களையும் மட்டும் சார்ந்து வரவில்லை.

போரும், போட்டிகளும் வருகின்றன. ஆனால், அவை மணிமுடி தரித்த மன்னர்களுக்கிடையே மண்ணாசை கருதி மட்டும் வரவில்லை.

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெரும் காவியங்கள் பிறக்கக் காரணமாயிருந்ததோர் இலக்கியக்காலச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு, அந்தப் பெருங்கதைகளிலே கண்ட மிகப்பெரியதும், அளப்பரியதுமான பூம்புகார் நகரை உங்கள் கண்பார்வையிற் கொண்டு வந்து காட்ட முயல்கிறேன்…”

நா.பா.வின் படைப்பாற்றலும், பழந்தமிழ் இலக்கியப் புலமையும், கற்பனை வளமும், காவிய நயங்கள் மிக்க உணர்ச்சி மயமான அழகிய தமிழ் நடையும் பரிபூரணமாகத் துலங்கும் ஒரு நாவல் உண்டென்றால், அது இந்த மணிபல்லவம் தான் என்று அறுதியிட்டுக் கூறி விடலாம்.

படிப்பவர்களால் இதைப் பளிச்சென்று உணர்ந்து அனுபவிக்க முடியும்!

வரலாற்று நாவல்களில் மட்டுமன்றி, சமூக நாவல்களிலும் இந்த அனைத்துப் பண்புகளையும் நம்மால் குறைவின்றிக் காண முடியும். சமகால வரலாற்று நாவல்களென அவற்றைக் கருதலாம்.

எடுத்துக்காட்டாக, ஆத்மாவின் ராகங்கள் நாவலில், காந்திய இல்டசியங்களையே தனது வாழ்வின் குறிக்கோள்கள் எனக்கொண்டு அதற்காகவே வாழ்ந்து விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறைவாசம் அனுபவித்து,

விடுதலைக்குப் பின் தங்களின் இல்டசியங்கள் ஈடேறும் என்று நம்பிய ராஜாராமன் அந்தக் கனவுகள் பொய்த்துப் போனதை உணர்ந்து சோகம் மேலிடப் பொது வாழ்விலிருந்து ஒடுங்கி,

ஆனால், நாட்டின் சமகாலப் பிரச்னைகளைப் பற்றிய அக்கறையில் மட்டும் குறைவின்றி அன்றாடம் சிந்தனைகளால் போராடி வந்து, கடைசியில் நிராசையுடன் ஒடுங்குகிறான்.

அவனுடைய கதையை, காந்திராமன் என்ற புனைவு நாயகனின் வரலாற்று நாவலாக எழுதுகிறார் ஒரு பத்திரிகையாளர்.

ஊரறிய, உலகறிய காந்திராமன் நாட்டுக்குத் தியாகம் செய்ய, அவனையே நினைத்து அவனுக்காகவே சர்வத்தையும் தியாகம் செய்து ஊரறியாமல், உலகறியாமல் வாழ்ந்து மறைந்த மதுரம் என்ற ஒரு பேதைப் பெண்ணின் கதையாகவும் இந்த நாவல் அமைகிறது.

இந்த நாவலின் முன்னுரையில் நா.பா.பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“இது ஒரு காந்தீய சகாப்த நாவல். ஆனால், ஒன்றல்ல, இரண்டு சகாப்தங்களை நீங்கள் இந்த நாவலில் சந்திக்கிறீர்கள்.

ஒரு தலைமுறையின் தேசபக்தர்கள் அனைவருமே இந்த நாவலில் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். உப்புச் சத்தியாக்கிரகத்திலிருந்து நேற்று வரையுள்ள நிலைமைகளின் ஊடே இந்தக் கதை பாய்கிறது, வளர்கிறது, நிறைகிறது.

தேச சுதந்திர வரலாறும், போராட்டங்களும் பின்னணியாக அமைய உருவாக்கப்பட்ட இக்கதையை ஒரு தேசிய சமூகத்தின் புதிய வகைச் சரித்திர நாவலாக நான் கருதுகிறேன்…

உலகறிய, ஊரறிய நாட்டுக்குத் தியாகம் செய்த ஒருவரும், உலகறியாமல், ஊரறியாமல் அந்தரங்கமாக அவருக்குத் தியாகம் செய்த ஒருத்தியும், அவர்களுடைய ஆத்ம ராகங்களும் இந்த நாவல் முழவதும் சுருதி சுத்தமாக ஒலிக்கின்றன.

உடம்பாலோ, மனத்தாலோ, புலன்களாலோ மட்டும் வாழ்ந்து மறையாமல், அவற்றில் நின்று அவற்றிலும் மேம்பட்டு ஆத்மாவினால் வாழ்ந்த ஒருத்தியின் தியாகத்தினாலும்,

சுதந்திரப் போர் என்ற பவித்திரமான நோன்பினாலும் முழமையடைந்த ஒருவரின் இந்தக் கதையில் நீங்கள் இதுவரை கேட்டிராத ஆத்மாவின் இனிய பண்புகள் ஒலிக்கின்றன…”

இப்படியான நெஞ்சைத்தொடும் முன்னுரைகள், நா.பா.நாவல்களின் தனிச் சிறப்பு மிக்க பகுதிகளாக நிரம்பியிருக்கின்றன.

’மலர்களைத் தேடி…’ என்ற ஒரு கவிதையை மணிவண்ணன் என்ற புனைபெயரில் நா.பா. தீபத்தில் எழுதியிருந்தார்.

”பூமியில் வல்லவர் நடுவினிலே நான் பொய்யை எதிர்த்துக் கொதிக்கின்றேன், மாமிசம் விற்பவர் நடுவினிலே நான் மலர்களைத் தேடித் தவிக்கின்றேன்.”

– என்று தொடங்கும் அந்தக் கவிதை, நா.பா.வின் மனவெளியில் அலைக்கழித்துக் கொண்டிருந்த எண்ணங்களின் வெளிப்பாடு என்றே சொல்ல வேண்டும்.

மலர்களைக் கோத்துக் கோத்து ஓர் அழகிய மலர் மாலையாகத் தொடுப்பதைப்போல, மிக அழகிய எண்ணங்களைத் தொடுத்துக் கருத்தாழம் மிக்க சொல் மாலையாகத் தொடுப்பது நா.பா.வின் சிறப்பு.

இதைப் பற்றி ஒரு வாசகர் அவரிடம் கேட்டபோது, ”அழகிய மனத்திலிருந்து பிறக்கும் வாக்கியங்களும் அழகாகத்தான் இருக்கும்!“ என்று தன்னம்பிக்கையுடன் மறுமொழி சொன்னார்.

பதில் என்று குறிப்பிடாமல், மறுமொழி என்றே குறிப்பிடுவார்.

அதே போலத் தனது தொடர் நாவல்கள் பத்திரிகைகளில் முடியும் போது ‘முற்றும்’ என்றோ அல்லது ‘முடிந்தது’ என்றோ குறிப்பிடாமல் ‘நிறைந்தது’ என்றே குறிப்பிடுவார்,

புலவர் பட்டமும், பாண்டித்துரைத்தேவர் வழங்கிய தங்கப் பதக்கத்துடன் முதன்மையிடம் பெற்றுப் பண்டிதர் பட்டமும் தமிழ் மொழியில் பெற்றவர் நா.பா. அவர்கள்.

அந்தப் புலமைத்திறம், நா.பா.வின் வசீகரமான, தனித்தன்மையுடைய உரைநடைக்கு அடித்தளமாக அமைந்திருந்தது.

மிகச் சிறப்பான பல தமிழ் இலக்கியப் பாடல்களைத் தன் கதைகளில் மேற்கோள்களாகக் குறிப்பிட்டு அவற்றுக்கு உரிய விளக்கங்களையும் மனங்கவரும் வண்ணம் எழதுவது நா.பா.வின் பழக்கம்.

பொன்விலங்கு நாவலில், ’எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?’ என்று தொடங்கி, ’செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் நீயும் தாம் கலந்தனவே’ என முடியும் குறுந்தொகைப் பாடலைத் தந்து,

அதற்கு நாவலின் கதாநாயகன் சத்தியமூர்த்தி ஆசிரியப் பணிக்கான நேர்முகத் தேர்வின்போது அற்புதமாக விளக்கமளித்ததால் அந்தப் பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்படுவதாகக் கதை செல்லும்.

குறிஞ்சி மலர் நாவலின் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி ஆகிய இருவரும் அறுபதுகளில் தமிழ்நாட்டு வாசகர்களிடையே மிகவும் புகழ் பெற்ற பாத்திரங்களாக நிலை பெற்றிருந்தனர்.

அந்த இரண்டு பெயர்களையும் தமிழ் மக்களில் பலரும் தங்களின் ஆண், பெண் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

காரணம், இவ்விரு கதை மாந்தரும் அன்றைய தமிழ்ச் சமூகத்தின் இளைஞர்கள், இளம் பெண்கள் நடுவே அவர்களின் இலட்சிய நாயகர்களாக, ரோல் மாடல்களாகத் திகழ்ந்தவர்களாவர்.

மதுரை நகரின் வீதிகளிலும், திருப்பரங்குன்றம் பகுதியிலும் நிகழ்வதாக நா.பா. படைத்திருந்த அந்த நாவலின் நடை நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் எழிலார்ந்த நடையாயிருந்தது.

பூரணியின் எழில் குறித்து அரவிந்தன் May be an image of text புனைவதாக நா.பா. எழுதியுள்ள கவிதை ஒன்று, சந்த அழகும், பொருள் ஆழமும் நிரம்பிய கவிதையாகும்.

அதைப்படித்தாலே மனம் துள்ளும். நா.பா.வின் படைப்புகளில் குறிஞ்சி மலர் நாவலைத்தான் நான் முதன்முதலில் படித்தேன்.

அப்போது எட்டாம் வகுப்பு மாணவனாயிருந்த நான் நாவலின் மென்மையான நடையிலும், அது முன் வைத்திருந்த குறிக்கோள்களிலும் மனம் பறிகொடுத்து மெய்மறந்து அவருக்கு ஒரு நீண்ட கடிதத்தை அனுப்பினேன்.

அதைப்படித்து விட்டு சில தினங்களில் நா.பா. கைப்பட ஒரு மறுமொழியை எழுதியிருந்தார்.

ஓர் எட்டாம் வகுப்பு மாணவனுக்கு, அன்று புகழ் ஏணியின் உச்சியிலிருந்த ஓர் எழுத்தாளரின் கைப்பட ஒரு கடிதம் கிடைத்தால் எப்படிப்பட்ட ஒரு பரவச உணர்வை அது ஏற்படுத்தியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?

அதன் பிறகு பல கடிதங்கள் அவரிடமிருந்து எனக்கு வந்திருக்கின்றன.

இன்று பார்த்தாலும் மெய் சிலிர்க்க வைக்கும் மணி மணியான கையெழுத்துகள்… அன்பும், அக்கறையும் தொனிக்கும் வாசகங்கள்…!

அவற்றை, அவை ஏற்படுத்திய உத்வேகத்தை ஒரு போதும் நான் மறக்கவியலாது.

அவரின் நினைவுகளை நான் ஒரு போதும் மறந்ததில்லை. என் படைப்புலகப் பயணத்தில் அந்த மாமனிதரின் அறிவுரைகள் தோன்றாத் துணையாக விளங்கும்!

– கமலாலயன்

நன்றி: புக் டே இதழ்

You might also like