இந்தியாவில் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்களில்…!

தமிழ்நாடு தவிர்க்க முடியாத பெயர் “தந்தை பெரியார்” தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் பெயர் “தந்தை பெரியார்” என்று அழைக்கப்பட்ட நாள் இன்று.

1938 நவம்பர் 13 ஆம் நாள், தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பெண்கள் பல வகையான அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருந்த அச்சூழலில் இந்தப் பெண்கள் மாநாடு நடைபெற்றது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு மீனாம்பாள், பண்டித நாராயணி, வா.பா. தாமரைக் கண்ணி, பா.நீலாம்பிகை, மூவலூர் இராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள் உட்பட்ட பெண்கள் குழு முன்னின்று நடத்தப்பட்டது.

ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான் ஈ.வெ. ராமசாமி “பெரியார்” என்று அழைக்கப்பட காரணம்.

“இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும்

தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் “பெரியார்” என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது.” என்பதே அந்த தீர்மானம்.

அன்று முதல் இன்றுவரை எல்லோறாலும், “தந்தை பெரியார்” என்றே அழைக்கப்படுகிறார் ஈ.வெ. ராமசாமி.

– மு.சி.அறிவழகன்.

நன்றி: நியூஸ் 7 

You might also like