நூல் அறிமுகம்:
பக்குவமாகக் காய்ச்சி எடுக்கப்பட்ட செந்தமிழ்த் தேந்தீம்பாகைக் கவிதை என்னும் வட்டிலிற் பெய்து அன்புடன் வழங்குகிறார் அருமை நண்பர் புதுவைக் கவிஞர் வாணிதாசன்.
நான் அதைச் சுவைத்துப் பார்த்தேன். அதன் தித்திப்பு என் உளமெலாம் ஏறி நின்று தெவிட்டா இன்பத்தை நினைக்குந்தோறும் அளித்து வருகிறது.
கவிஞர் வாணிதாசன் ‘தமிழச்சி’ என்னும் தனித் தமிழ்க் கவிதை மூலம் பெண் பெருந்தகையாள் ஒருத்தியை நம்முன் நிற்க வைக்கிறார்.
அவள் அடுப்பூதியே வாழும் அடுப்பங்கரைப் பெண்ணாகவோ, காம விளையாட்டுக்கள் புரிந்து திரியும் காமக் கிழத்தியாகவோ காட்சியளிக்கவில்லை.
வீழ்ச்சியுற்ற தாய் நாட்டை – தன் நாட்டை – எழுச்சியுற்றதாக ஆக்கும் சீரிய பொதுப்பணியில் ஈடுபடும் வீராங்கனையாகவே நம்முன் நடமாடுகிறாள்.
கனிந்த காதலுள்ளம், பிறர்மாட்டு நனி அன்பு, ஊரார்க்குழைக்கும் பண்பு, மூடப் பழக்கவழக்கங்களை முறியடிக்கும் துணிவு, பகுத்தறிவை மக்களுக்குப் புகட்டும் ஆர்வம், சேரியினைத் திருத்த முற்படும் முயற்சி,
சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிய வெகுண்டெழும் எழுச்சி, ஏழை எளியவர்கள் உயர்நிலையடைய வேண்டும் என்னும் அவா, தனியுடைமையை மாய்த்துப் பொதுவுடைமையைப் பூக்கச் செய்யும் கொள்கை,
இன்பத் திராவிடத்தைக் காணும் குறிக்கோள் ஆகிய இன்னபிற தன்மைகள் எல்லாம் அவள் மாட்டுப் பொதிந்து கிடக்கின்றன.
இத்தகைய மாண்புடைய ‘தமிழச்சி’யைத்தான் கவிஞர் வாணிதாசனின் பேனாமுனை சொல்லோவியமாகத் திறம்படத் தீட்டிக் காட்டுகிறது.
– இரா .நெடுஞ்செழியன்
******
நூல்: தமிழச்சி
ஆசிரியர்: வாணிதாசன்
கௌரா பதிப்பகக் குழுமம்
பக்கங்கள்: 104
விலை: ரூ. 39/-