உலகில் 3-ல் ஒரு பெண் பாலியல் தொந்தரவை எதிர்கொள்கிறார்!

உலக சுகாதார அமைப்பு தகவல்

உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக, உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதில் தென்கிழக்கு ஆசியப் பகுதியே உலகில் 2-ஆவது இடத்தில் இருப்பதாகவும், இந்தப் பகுதியில் 33 சதவிகிதப் பெண்கள் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கான இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், “வன்முறை, வற்புறுத்தல் இல்லாத வாழ்க்கையை வாழ அனைவருக்கும் உரிமை உண்டு. பெரும்பாலான பெண்கள், தங்களுடன் வாழும் நபர்களால்தான் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக மிகவும் நெருங்கியவர்களால்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, குறிப்பாக நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் கொடுமைகள், பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடனடியாகவும் அதேநேரத்தில் நீண்ட காலத்திற்கும் கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இவை தீவிரமான உடல், மன, பாலியல் மற்றும் இனப்பெருக்கப் பிரச்சனைகளை உள்ளடக்கியது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் இன்றைய சூழ்நிலையில் பொது சுகாதாரப் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது. பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகள் தடுக்கப்படக்கூடியவை.

ஆனால், பாலின சமத்துவமின்மை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை இன்று ஏற்றுக்கொள்ளக் கூடியதாக மாறி வருகிறது. குறிப்பாக, தனிப்பட்ட, குடும்பம், சமூகத்தில் ஏற்படும் காரணிகளால், மிகவும் நெருங்கியவர்களால் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் அதிகம் ஏற்படுவதை சான்றுகள் நிரூபிக்கின்றன” எனக் கூறினார்.

நன்றி. தீக்கதிர் நாளிதழ்

You might also like