“பெருமையும், மகிழ்ச்சியுமான நாட்கள்” – எம்.என்.ராஜம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினரான நடிகை எம்.என்.ராஜம் நடிகர் சங்க நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டார்.
அப்போது தனது அனுபவங்களை அவா் பகிா்ந்து கொண்டாா்.

“தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முதல் பெண் உறுப்பினராகச் சேர்ந்த என்னை இன்றைக்கு அழைத்து கவுரவப்படுத்துவது, எனக்கு பெருமையாக இருக்கிறது.
ஒரு பழைய நடிகையை அழைத்துப் பாராட்டு விஷயம் பாராட்டத்தக்கது. எனக்கு 7 வயது இருக்கும்போது மதுரையில் இயங்கி வந்த ‘பாய்ஸ் நாடக கம்பெனி’யில் நடிக்க ஆரம்பித்தேன்.

அது அப்போது கலையுலகைச் சேர்ந்தவர்களுக்கு குருகுலம் மாதிரி இருக்கும். நடிப்புடன் கல்வியையும் சொல்லிக் கொடுத்தார்கள்.

சிவாஜி, கே.ஆர்.ராமசாமி, டி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., காக்கா ராதாகிருஷ்ணன், வி.கே.ராமசாமி உள்ளிட்ட புகழ்பெற்ற நடிகர்கள் அந்தக் குருகுலத்தில் இருந்தார்கள்.

எப்படிப் பேசுவது? எப்படிப் பாடுவது? எப்படிச் சிரிப்பது? எப்படி அழுவது? எப்படி நடப்பது? போன்றது அனைத்தையும் அங்குச் சொல்லிக் கொடுப்பார்கள்.

சராசரிப் பெண்களைப்போலச் சிாிக்கக்கூடாது. நடிகைகளின் சிரிப்புகளுக்கு என்று தனி பாணி உள்ளது. நடக்கும்போது நளினமாக நடக்கவேண்டும்.
பார்க்கும்போது, பணிவுடன் பார்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களின் போதனைகளால் சின்ன சின்ன விஷயங்கள் கூட புத்துயிர் பெறும். பாய்ஸ் கம்பெனி நடிகைகளில் இப்போது நான் மட்டும் தான் இருக்கிறேன்.

சத்தியபாமா கல்லூாியில் எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். என்னுடன் விஞ்ஞானி, டாக்டர், அரசியல்வாதிகள் எல்லோரும் டாக்டர் பட்டம் பெற்றார்கள்.

அவர்களுடன் நடிகையான எனக்கும் டாக்டர் பட்டம் கொடுத்தது, பெருமையாக இருந்தது. அதற்கு கலைதான் காரணம்.

அப்போதெல்லாம் தினமும் படப்பிடிப்புகள் நடக்கும். நடித்துக் கொண்டே இருப்போம்.

நடிகர்களுக்கு விடுமுறை இல்லை என்று நினைத்து அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த நடிகை அஞ்சலி தேவி, மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை படப்பிடிப்புகளை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டார்.
அன்று தான் எங்களுக்கு எல்லாம் விடுமுறை.

பின்னா் ‘கலைவாணா் தினம்’ என்ற ஒருநாளை வருடத்திற்கு ஒருநாள் கொண்டாடுவோம்.

அந்த நாளை நடிகர் சங்க வளாகத்தில், கலை உலகமே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மறந்து கொண்டாடும். விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் நடத்தப்படும்.

ஒரு முறை நடிகைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் சாவித்திரி, பத்மினி, அஞ்சலிதேவி, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொண்டு ஓடினார்கள்.

அந்தப் போட்டிக்கு நடுவா்களாக எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., ஆகியோர் இருந்தார்கள்.

போட்டி முடிந்தப் பின்னர் நடுவா்களாக இருந்தவா்கள் ‘கப்சிப்’ என அமா்ந்திருக்கிறாா்கள். யார் முதலில் வந்தது என்பதை சிவாஜி இப்படி அறிவிக்கிறார்.

சாவித்திாி முதலில் வந்தாா், அஞ்சலிதேவி இரண்டாவதாக வந்தார், பத்மினி மூன்றாவதாக வந்தாா். இவர்களை எல்லாம் விரட்டிக்கொண்டு வந்த ராஜம், கே.ஆர்.விஜயா எல்லாம் கடைசியாக வந்தார்கள் என்றாா்.

அங்கிருந்து நடிகர் நடிகைகள் எல்லாம் மனம் விட்டு சிரித்த காலங்கள் அது.
அதை எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும்போது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது”

You might also like