போக்குவரத்து விதிமீறல்: 6187 பேரிடம் ரூ.45 லட்சம் வசூல்!

பழைய மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்கள் செய்த ஒன்றிய அரசு, திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது.

அதனடிப்படையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி புதிய அபராத கட்டணங்கள் வசூலிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 19-ம் தேதி வெளியிட்டது.

அதில், முதல் முறை செய்யும் சாலை விதிமீறலுக்கு ஒரு அபராதம் கட்டணம், அதே விதிமீறலை மீண்டும் செய்தால் அதற்கு கூடுதலான ஒரு அபாதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசிக்கொண்டே சென்றால் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் படி ரூ-1000 அபராமும், அதே விதிமீறலில் இரண்டாவது முறை ஈடுபடுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் என பல்வேறு விதிமீறல்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இந்த விதிமுறைகள் கடந்த 26ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் நாளில் சென்னை முழுவதும் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 2,500 வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்து ரூ.15.50 லட்சம் வசூலித்தனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களில் சென்னையில் விதிகளை மீறியதாக 6,187 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து அபராத தொகையாக ரூ.42 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like