செய்தி:
தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை!
– கமல்ஹாசன் அறிவிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
மக்கள் நீதி மய்யம் – திமுக கூட்டணியில் சேராமல் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பது என்று எடுத்திருக்கிற நிலைப்பாடு, பலரை அதிர்ச்சியமடைய வைத்திருக்கிறது.
கமல் இந்த முடிவை எடுத்ததற்கு என்ன காரணம்?
2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்த கமலுக்கு, பிறகு, மாநிலங்களவையில் சீட்டு கொடுக்கப்பட்டது.
மாநிலங்களவையில் தனது கன்னிப் பேச்சையே அதிரடியாக எழுப்பி, பாஜகவின் அடிப்படையான நிலைப்பாடுகள் குறித்து அதிரடியான பல கேள்விகளை முன்வைத்து, தேசிய அளவில் பல்வேறு ஊடகங்களை தன் பக்கம் திருப்பி வைத்தவர் கமல்.
அதாவது மாநிலங்களவை சீட்டை அதற்குரிய அசலான அர்த்தத்தோடு பயன்படுத்தியவர் என்று கூட சொல்லலாம்.
அப்படிப்பட்ட செழுமை கொண்ட அனுபவத்துடன் தான் திமுகவுடன் தற்போதைய தேர்தலிலும் கூட்டணி பேச வந்தார் கமல்.
இரட்டை இலக்கத்தில் அவர் தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில் அவருக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கை தான் தருவதாக பேசப்பட்டது.
அதிலும் மக்கள் நீதி மய்யயத்தின் சின்னமான ‘டார்ச் லைட்’ சின்னத்தில் போட்டியிடுவதைவிட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்ட நிலையில்,
வேறு வழியின்றி கமல், கூட்டணியிலிருந்து மிகவும் நாசுக்கான முறையில் இன்னொரு விதத்தில் சொன்னால், நட்பு கெடாத விதத்தில் திமுகவால் ‘தியாகி’ பட்டம் பெறப்பெற்று வெளியேறியிருக்கிறார்.
தான் கையில் வைத்திருந்த ‘டார்ச் லைட்’டை அவரால் ஆன் பண்ண முடியவில்லை.
இப்படி ஒரு தர்ம சங்கடமான இருள் சூழும்போது, வெளிச்சமூட்டும் ஒரு கருவியைக் கையில் வைத்திருந்தாலும், கமலால் வேறு என்ன செய்துவிட முடியும்?