அனைவருக்கும் வணக்கம்.
பாலசாகித்ய புரஸ்கார் விருது எனது ஒற்றைச் சிறகு ஓவியாவுக்கு அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து நண்பர்களின் வாழ்த்துகள் மொபைல் வழியேயும் சமூக ஊடகங்கள் வழியேயும் வந்தபடியே உள்ளது.
பெரும்பாலும் மொபைலில் அழைத்தவர்களோடு பேசவே நேரம் சரியாக இருந்தது. அதிலும் பேசிக்கொண்டிருக்கையில் வரும் இரண்டாம் அழைப்புகளுக்கு மீளவும் அழைத்துப் பேசி, வாழ்த்து பெற்றேன்.
அனைவருக்கும் பேச முயன்றேன். ஓரிருவர் விடுபட்டிருக்கலாம் அவர்கள் பொருத்தருள்க.
ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டா வழியே வாழ்த்திய அனைவருக்கும் நேரடியாக நன்றி தெரிவிக்க முயல்கிறேன்.
சிலர் விடுபட்டிருந்தால் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் என பணிவுடன் வேண்டுகிறேன். இருநாட்கள் முழுக்க மொபைலில் வாழ்த்துகள் பெறுவேன் என்பது நான் கற்பனை செய்யாத ஒன்று.
சொந்த ஊரிலிருந்தும், பல ஆண்டுகளாக தொடர்பிலேயே இல்லாத நண்பர்களிடம் இருந்தும் என அழைப்புகள் வந்தவண்ணமே உள்ளன. இருவர் பேசும்போதே மகிழ்ச்சியின் மிகுதியால் அழுதுவிட்டனர்.
அந்தக் கனத்தை எப்படிக் கையாள்வது என்று புரியாமல் ஒரு சில நொடிகள் உறைந்துபோனேன். அத்தனை அன்புக்கும் எவ்விதம் கைமாறு செய்வேன், நல்ல படைப்புகளை எழுதுவதைத் தவிர. அனைவருக்கும் என் நன்றி.