ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்!

ஏ.ஐ. (AI) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், நமது அன்றாட வாழ்க்கை மற்றும் தொழில்களில் அளப்பரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

பெரு நிறுவனங்களின் புதிய செயலிகள் செயற்கை நுண்ணறிவு திறனை பன்மடங்கு அதிகரித்து வருகின்றன.

நிஜ உலக கட்டமைப்புகளைக் கணினியில் உருவாக்கி ஆபத்து இல்லாமல் பரிசோதனைகளை மேற்கொள்ள இது வழிவகை செய்கிறது.

கடினமான மற்றும் மீண்டும் மீண்டும் செய்யும் வேலைகளை AI இயந்திரங்கள் எளிதாக கையாளுகின்றன.

புதிய மருந்துகளை விரைவாக உருவாக்குவதிலும் நோய்களை துல்லியமாக கண்டறிவதிலும் இந்த தொழில்நுட்பம் பெரும் பங்காற்றுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், chatgpt அறிமுகமானபோது, அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கியது.

ஆனால், சில மாதங்களிலேயே கோடிக்கணக்கான பயனர்களை பெற்று AI தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சம் chatgpt தான் என்ற நிலையை உருவாக்கியது.

சமீபத்திய ஆய்வுகளின் படி chatgpt உலகின் மிக வேகமாக 100 கோடி மாதாந்திர பயனர்களை எட்டிய செயலி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

பல்வேறு முக்கிய செயலிகளையும் இது பின் தங்க வைத்துள்ளது.

மேலும் செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு ஒருவரின் முகத்தை அடையாளம் காணக்கூடிய புதிய தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஸ்மார்ட் கண்ணாடிகளின் கேமரா மூலம், பார்க்கப்படும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களை பற்றிய தகவல்களை பயனருக்கு வழங்கும் வகையிலான திட்டங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இத்தகைய வசதி எதிர்காலத்தில் அறிமுகமானால் தொழில்முறை சந்திப்புகள், கருத்தரங்குகள் மற்றும் வணிக மாநாடுகளில் புதிய நபர்களை அடையாளம் காணவும், எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளவும் உதவக்கூடும்.

Whatsapp செயலியிலும் தற்போது பயனர்களின் தனி உரிமையை மேலும் வலுப்படுத்தும் வகையிலான புதிய அம்சங்களை சேர்க்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி இனி ஒரு செய்தியைப் படித்தவுடன் அது தானாகவே மறையும் வகையில் அமைக்கப்படும்.

அதனை நகலெடுக்கl, பிறருக்கு அனுப்ப அல்லது சேமித்து வைக்க முடியாத வகையிலும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட இருக்கிறது.

கடவுச்சொற்கள், ரகசிய தகவல்கள் போன்றவற்றை பகிர்வதற்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் பழைய கைபேசிகளின் உள்ளே உள்ள முக்கிய மின்சுற்று பலகைகளை மட்டும் இணைத்து ஒரு கணினி வலை அமைப்பாக மாற்றும் திட்டத்திலும் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

AI தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக, உலக அளவில் தற்போது Synthetic Intelligence என்று அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பு புரட்சி உருவாகி வருகிறது.

நடப்பில் இருக்கும் செயற்கை தொழில்நுட்பம் மனிதர்களின் செயல்பாடுகளை பிரதிபலிப்பதில் கவனம் செலுத்துகிறது.

ஆனால், SI தொழில்நுட்பமானது, முற்றிலும் மனிதனை சாராது சுயமான மற்றும் புத்தம் புதிய வடிவிலான உண்மையான இயந்திர அறிவாற்றலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மனித கட்டளைகளுக்காக காத்திராமல் தானாக சிந்தித்து செயல்படும் ஆற்றல் இதற்கு உண்டு.

இது மனித நரம்பு மண்டலத்தை ஒத்த மூலக்கூறுகள் மற்றும் கணினி அமைப்புகளை இணைத்து உருவாக்கப்படுகிறது.

இதனைப் பயன்படுத்தி பல்வேறு துறைகளிலும் சிறந்த தீர்வுகளை பெற முடியும். நோயாளிகளின் தனிப்பட்ட மரபணுக்கள் மற்றும் செல்களை கொண்டு ஆய்வகத்தில் உருவாக்கப்படும் மருந்துகளை சோதித்து துல்லியமான சிகிச்சைகளை இதனால் வழங்க முடியும்.

மனிதத் தலையீடே இல்லாமல் சந்தை தேவைக்கு ஏற்ப உற்பத்தி முறைகளை நொடிகளில் மாற்றியமைத்து தொழிற்சாலைகளை உருவாக்க முடியும்.

மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளையும் சுய நினைவுகளையும் கொண்டு காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடையும் இது, டிஜிட்டல் மனிதர்களை மெய்நிகர் உலகில் உருவாக்கவும் வழிவகுக்கும்.

இவ்வாறு பல்வேறு நன்மைகளை இது தரவல்லது என்றாலும் சில சவால்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.

மனிதக் கட்டுப்பாட்டை மீறிய சுய சிந்தனை கொண்ட ஓர் இயந்திரம் உருவாகும்போது அதன் நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் எழுகின்றன.

இருப்பினும் அறிவியல் உலகம் இதனை களையும் என்று நம்பப்படுகிறது.

மனித சிந்தனையின் எல்லைகளை விரிவுபடுத்தும் ஒரு உன்னத விஷயமாக எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பங்கள் உருவாகும் என்றால் அது மிகையில்லை.

S. வாணி

You might also like