எழுத்தாளர், கலை விமர்சகர் இந்திரன் பதிவு:
காந்தி சிலை வைக்கப்படாத பாண்டிச்சேரி கடற்கரையை நான் சிறுவனாக பார்த்திருக்கிறேன்.
எனக்கு 16,17 வயது இருக்கும்போது தான் 13 அடி உயர காந்தி சிலையை அங்கே நிர்மாணித்தார்கள்.
நான் சிறுவனாக காந்தி சிலையின் தலை மீதும் தோள் மீதும் ஏறி விளையாடி இருக்கிறேன். அப்போது சிறுவர்களைத் தடுப்பவர்கள் யாரும் இல்லை.
என்னுடைய மகள்கள் கூட காந்தி சிலையின் மீது ஏறி விளையாடி இருக்கிறார்கள்.
சென்னை கலை, கைவினைப் பள்ளியில் முதல்வராக இருந்த சிற்பி டிபி ராய் சவுதிரி செய்த காந்தி சிற்பம் தான் அங்கு நிர்மாணிக்கப்பட்டது.
காந்தி சிலை வருவதற்கு முன்னால் அங்கு பாண்டிச்சேரி துறைமுகம் இருந்தது.
என்னுடைய உறவினர்கள் பலர் பிரஞ்சு மொழியையும் தமிழ் மொழியையும் மொழி பெயர்க்கும் துவி பாஷியாக அந்த துறைமுகப் பகுதியில் வேலையில் இருந்தார்கள்.
அந்தத் துறைமுகத்தை ஒட்டி காந்தி சிலை வைப்பதற்கு முன்னாலேயே செஞ்சிக் கோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 சிற்பத் தூண்கள் அங்கே இருந்தன. (காந்தி சிலை இல்லாத பழைய புகைப்படத்தைப் பாருங்கள்.)
ஒருமுறை மாபெரும் புயல் அடித்து துறைமுகத்திற்குசெல்லும் பாலம் உடைந்தது.
இப்போது கூட உடைந்த பாலத்தின் இரும்புத் துண்டுகள் கடலில் தலை நீட்டிக் கொண்டிருப்பது நாம் பார்க்க முடியும். இதற்குப் பிறகுதான் துறைமுகத்தை இப்போது துறைமுகம் இருக்கும்வேறு இடத்துக்கு மாற்றினார்கள்.