விமான விபத்தில் மராட்டிய துணை முதல்வர் உயிரிழப்பு!

மஹாராஷ்ட்ர மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.

விபத்தில் சிக்கிய விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இன்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகனான அஜித் பவார் (வயது 67), மராட்டிய துணை முதல்வராக 6 முறை பதவி வகித்தவர்.

மாநிலத்தின் நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அமைச்சராகவும் அஜித் பவார் இருந்துள்ளார். சரத் பவாரின் அரசியல் வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் அஜித் பவார் தனித்து செயல்பட்டார்.

அவரது பிரிவையே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மராட்டியத்தில் பா.ஜ.க. கூட்டணி அரசில் 3-வது பெரிய கட்சியாக அஜித் பவாரின் கட்சி உள்ளது. அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You might also like