செப்டம்பர் 18 – உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்
1992-ஆம் ஆண்டு ஐ.நா.வின் சுற்றுச்சூழல் வளர்ச்சிக் கழகக் கூட்டத்தில் நீர்வளப் பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்பின் உள்ளூர் நீர்நிலைகளைக் கண்காணித்து நீரின் தரம், வளம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் கிளீன் வாட்டர் பவுண்டேசன் இந்த தினத்தை 2003ல் அறிவித்தது.

குடிநீர், பாசனம், உயிரினங்களுக்கான நீர், மனிதர்களின் இதரத் தேவைகளுக்கான நீர் என்று தண்ணீர்தான் பூமியின் இயங்கு சக்தியாக உள்ளது.
அந்த தண்ணீரைக் காக்க வேண்டியது நமது முக்கிய கடமையாக உள்ளதால், அதனை கண்காணிப்பதும் மிக அவசியமானதாக உள்ளது.
இவைதான் இந்த சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினத்தின் நோக்கமாக உள்ளது.
உலகில் 40 சதவீதம் மக்கள் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் வரும் காலங்களில் பல கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், நீருக்காகப் போர்கள் மூளும் அபாயம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

உலகில் 97.5 சதவீதம் உப்புநீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம்தான் நன்னீர். ஆனால், அதில் 2.24 சதவீத நீர் துருவப் பகுதிகளில் பனிப்பாறையாக உள்ளது.
எஞ்சிய 0.26 சதவீத நீர்தான் அனைத்து உயிர்களுக்குமான வாழ்வாதாரம்.
இந்த சொற்ப தண்ணீரையும் தினம்தோறும் பல ஆயிரம் டன் கழிவுகளைக் கலந்து மாசுப்படுத்தி வருகின்றனர்.
அதுபோல தொடர்ந்து நிலத்தடி நீர் வகைதொகையில்லாமல் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் அபாய கட்டத்தில் உள்ளது.
இதுபோல பல்வேறு பக்கங்களிலும் நீருக்கான நெருக்கடி மற்றும் நீர் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் என்பதும் மிக அவசியமான ஒரு நாளாக மாறியுள்ளது.
– நன்றி: புதிய தலைமுறை