கலைவாணரை எங்கே தேடுவோம்?

நினைவுகளில் வாழும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இதில், ஒரு விசித்திரம் அண்ணா மறைவதற்கு முன்பு உடல் நலிவடைந்த நிலையில், அவர் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சி கலைவாணர் சிலை திறப்பு விழா.

அந்த நிகழ்ச்சி அப்போது சென்னை தியாகராய நகரில் முக்கிய இடத்தில் சிலை வைக்கப்பட்டு, அதில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். அதன் திறப்பு விழா கல்வெட்டில் அறிஞர் அண்ணா அவர்களது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்படிப்பட்ட காலத்தின் முக்கியத்துவம் கூடிய கலைவாணரின் சிலையை, போக்குவரத்து நெருக்கடி என்ற காரணத்தை வைத்து அதே சாலை மூலைப்பகுதிக்கு அதை இடமாற்றினார்கள்.

அதன் பிறகு தி.நகரில் ஒரு சாலை முனையில் அந்த சிலை வைக்கப்பட்டு அதற்கு பலரும் மரியாதை செலுத்தி வந்தார்கள்.

ஆனால், தற்போது தியாகராய நகரில் வைக்கப்பட்டிருந்த அந்த சிலையையும் தற்போது காணவில்லை.

அதே சமயத்தில், கலைவாணர் பெயரில் அமைந்த வாலாஜா ரோட்டில் உள்ள கலைவாணர் அரங்கத்திலும் அந்த சிலை இதுவரை வைக்கப்படவில்லை.

அங்கு சிலை வைக்கப்படும் என்று சொல்லப்பட்டாலும், இதுவரை அந்த சிலை அங்கு நிறுவப்படவில்லை.

இந்த சமயத்தில் கலைவாணர் திரைப்படத்தில் பாடிய ஒரு முக்கிய பாடலான, “பணத்தை எங்கே தேடுவேன்?” என்கின்ற பாடலைப் போலவே கலைவாணரை நேசிக்கும் அனைவரும் கேட்கின்ற இயல்பான கேள்வி, “கலைவாணரை எங்கே தேடுவோம்?”

– யூகி

You might also like