உயிர்வலியை உணர்ந்த தருணம்!

நடிகர் நாகேஷின் அனுபவம்

ஒருநாள் காலையில் எனக்கு ஒரு போன் கால் வந்தது. “நான் உங்கள் ரசிகன்” என்றார் போன் பேசியவர்.

“நல்லது சொல்லுங்க!”

“என் பெயர் சாஸ்திரி. சென்சார் போர்டு அதிகாரி”

“சொல்லுங்க சார்! உங்களைப் போன்றவர்களை ரசிகராகப் பெற்று இருப்பதில் எனக்கு ரொம்ப பெருமை!”

“நான் உங்களைப் பார்க்கணும். என் ஆபீஸ் பனகல் பார்க் அருகில்தான் இருக்கு. நீங்க ஷூட்டிங் போகிறபோது ஒருசில நிமிஷங்கள் எனக்காக ஒதுக்கணும். முடியுமில்லையா?”

“கண்டிப்பாக வர்றேன் சார்”

அன்றைய தினமே ஷூட்டிங் போகிற வழியில் சென்சார் போர்டு ஆபிஸூக்குப் போய் சாஸ்திரியைச் சந்தித்தேன்.

சாஸ்திரி மிக நல்ல மனிதர். திறமையான, அதேசமயம் மிகவும் கறாரான அதிகாரி. அவர் பெயரைச் சொன்னாலே, பல சினிமாக்காரர்களுக்கு நடுக்கம் வந்துவிடும். என்னை அன்போடு வரவேற்று, உட்காரச் சொன்னார் சாஸ்திரி.

“ஒவ்வொரு வருஷமும் ரிலீஸாகிற, ஏறத்தாழ எல்லாப் படத்திலேயும் நீ நடிக்கிறே. சென்ஸார் அதிகாரிங்கிற முறையிலே நான் தவறாமல் பார்க்கிறேன். உன் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். உனக்கு ‘சென்சார் நாகேஷ்’ னு ஒரு பட்டம் கொடுத்துடலாம்ணு கூட தோணுது” என்றார்.

எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. தொடர்ந்து பேசினார்.

“முந்தா நாள்கூட ஒரு படம் வந்தது, பார்த்தேனே! பேர் கூட…”

“‘அன்னை இல்லம்’ சார். எனக்கு நல்ல காமெடி ரோல். நடிப்பு உங்களுக்குப் பிடிச்சிருந்ததா சார்?”

“ம்… அதை காமெடின்னா சொல்றே?… ஏ…ஏ…ஏ… என்னப்பா நீ-ன்னு இழுத்து இழுத்துப் பேசுகிற திக்குவாய்… உனக்குக் காமெடியா இருக்குதா?”

நான் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“திக்குவாயை வைத்து காமெடி பண்ணி இருப்பதற்காகவே இந்தப் படத்தை நான் தடை பண்ணலாம்ணு நினைச்சேன்.

தமிழ் நாட்டுல இது மாதிரி திக்குவாயால் பாதிக்கப்பட்டவங்க எத்தனை பேர் இருப்பாங்க, அவங்களும் அவங்க குடும்பத்தினரும் நண்பர்களும், படத்துல நீ திக்கித் திக்கிப் பேசுறதைப் பார்த்துட்டு அதை ரசிச்சுச் சிரிப்பாங்கன்னு நினைக்கிறியா? அதப்பாக்குற அவங்க வேதனைப்பட மாட்டாங்களா?” என்றார்.

என்னை யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்தாற்போல உணர்ந்தேன். அவருக்கு என்ன விளக்கம் சொல்லி என் நடிப்பை நியாயப்படுத்த முடியும்? என்னால் எதுவும் பேசமுடியவில்லை.

என் முன்னே கையை நீட்டினார், “இனிமேல் இதுபோல் அடுத்தவர்களின் குறைபாடுகளை கிண்டல் செய்யும் விதமாய் நடிக்கமாட்டேன்- என்று எனக்கு இங்கே, இப்போது சத்தியம் செய்து கொடு! இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய நான் அனுமதி வழங்குகிறேன்!” என்றார்.

சற்று கலங்கிய கண்களுடன் நான் அப்படியே செய்து கொடுத்தேன்.

– ‘நான் நாகேஷ்’ நூலிலிருந்து.

You might also like