ரீ-ரிலீசிலும் சாதனை படைத்த ‘கில்லி’!

கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘கில்லி’. ‘ஒக்குடு’ என்ற தெலுங்கு படத்தில் இருந்து மூலக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, விஜய்க்கு ஏற்ப, திரைக்கதை அமைத்து, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப, அற்புதமான காட்சிகளை உருவாக்கி இருந்தார், தரணி.

விஜய் ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். வில்லன் வேடம் ஏற்றிருந்த பிரகாஷ்ராஜின், உடல்மொழியும், உருட்டி மிரட்டும் கண்ணும், வசன உச்சரிப்பும், படத்தின், மிகப்பெரிய ‘பிளஸ் பாய்ண்ட்’. ஏ.எம்.ரத்னம் தயாரித்த இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றியும், வசூலும், விஜயை அடுத்த கட்டத்துக்கு தூக்கி சென்றதை கோடம்பாக்கம் அறியும்.

இந்தப் படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘4கே டிஜிட்டல்’ தரத்தில் மெருகூட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 600 திரைகளில் கடந்த சனிக்கிழமை ‘கில்லி’ வெளியானது.

இந்தப் படத்தை சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், முதல் காட்சியை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடினர். ஆரவாரத்துடன் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன.

‘கில்லி’யை தொலைக்காட்சியில் 50 முறையாவது பார்த்து இருப்போம் – ஆனால், தியேட்டரில் பார்ப்பது வேறமாதிரி அனுபவமாக இருந்தது’ என திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்கள் குதூகலித்தனர்.

‘ரஜினிக்கு ஒரு ‘பாட்ஷா’ போல், விஜய்க்கு ஒரு ‘கில்லி’ – அனைத்து பாடல்களும் சூப்பராக இருக்கும் – அர்ஜூனரு வில்லு, கொக்கர கொக்கரக்கோ, அப்படி போடு போடு ஆகிய பாடல்களை தியேட்டரில் மூன்று முறை ‘ரிப்பீட் போட்டாங்க’ என்றும் அவர்கள் கூறினர்.

‘கில்லி’ ரீ – ரிலீசில் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 4 கோடியே 75 லட்சம் ரூபாய் அள்ளியது.

நடிகை திரிஷாவும், பிரகாஷ் ராஜும் படத்தின் மறுவெளியீடு குறித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

திரிஷா, தனது வலைத்தள பக்கத்தில், ரசிகர்களின் கொண்டாட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

‘வாழ்க்கை ஒரு வட்டம் – முதல் நாள் முதல் காட்சிக்கு இருந்த உற்சாகம், இன்று மீண்டும் உள்ளது. கில்லி கொண்டாட்டங்களுடன் பொழுது விடிந்துள்ளது’’ என அவர் பதிவிட்டுள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like