மீண்டும் அமைச்சரானார் பொன்முடி!

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். ஆனால் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.

ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு தொடர்பாக சரமாரியான கேள்விகளை எழுப்பியதுடன், கண்டனமும் தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முன்வந்தார்.

இந்த நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா மிக எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது பொன்முடியை அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

You might also like