காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் ராகுல்காந்தி தான்!

காங்கிரசில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத், இன்று கட்சியில் இருந்து வெளியேறினார். காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இவர் ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த குலாம்நபி ஆசாத் அண்மைக் காலமாக காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக குலாம்நபி ஆசாத் அறிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியுள்ளார்.

அரசியலில்  முதிர்ச்சி இல்லாத ராகுல் காந்தியின் தலைமையே, 2014-ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தோல்விக்குக் காரணம் என்றும், காங்கிரசில் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் அல்லது அவரது உதவியாளர்களால் எடுக்கப்படுகிறது என்றும் குலாம்நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரசில் இருந்த கலந்தாலோசனை வழிமுறையை ராகுல் காந்தி முற்றிலும் அழித்துவிட்டார் என்றும், காங்கிரஸில் பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி தலைவராக இருக்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

You might also like