ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!
கரப்பான் பூச்சிக்கு எலியக் கண்டா பயம்.!
எலிக்கு பூனையக் கண்டா பயம்..!
பூனைக்கு நாயக் கண்டா பயம்.!
நாய்க்கு மனுஷனைக் கண்டா பயம்.!
மனுஷனுக்கு அவன் மனைவியைக் கண்டா பயம்.!
அவன் மனைவிக்கு கரப்பான் பூச்சியக் கண்டா பயம்.!!
எவ்வளவு பெரிய விஷயமும் சின்ன விஷயத்திடம் சில சமயம் அடிமையாகும் என்பதே உலக நியதி.
அம்புலிமாமா ஸ்டைலில் ஒரு கதையை இப்போது பார்ப்போம். மகேந்திரன் மச்ச நாட்டு மன்னன். அவனது நாட்டுக்கு அருகாமையில் உள்ள நாடு மருத நாடு. மருதநாட்டு மன்னன் சுரேந்திரன்.
மருத நாடு படைபலம் கொண்டது. செல்வ வளமும் அதிகம். ஆனால் மச்சநாடு அந்த அளவுக்குப் படை பலம் கொண்டதல்ல. இருப்பினும் மகேந்திரன் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தபடியால் மருத நாட்டை வெல்லவேண்டும் என்ற வெறி கொண்டிருந்தான்.
அதனால் அடிக்கடி மீண்டும் மீண்டும் மருத நாட்டின் மீது படை எடுத்தவண்ணம் இருந்தான். சுரேந்திரனின் பெரும்படைக்கு முன் தாக்குப் பிடிக்க முடியாது, தொடர் தோல்வியடைந்த வண்ணமே இருந்தான் மகேந்திரன்.
ஒருமுறை ஒற்றர் மூலம் மகேந்திரன் மீண்டும் படையெடுக்கப் போவதை அறிந்த சுரேந்திரன் அதை எதிர்கொள்ளத் தயாராகும்படி படைக்கு உத்தரவிட்டான். அப்போது அவனது மதியூக மந்திரி மகிபாலர் மன்னனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மன்னா, மகேந்திரன் மீண்டும் படையெடுத்து வருவதால், நமது படைகளைச் சற்று சீரமைக்க வேண்டும்… கட்டளையிடுங்கள் என்றார்.
சுரேந்திரன் சிரித்தான்.
“மந்திரியாரே, எத்தனை முறை அவன் படையெடுத்தாலும் அவனால் நம்மை வெல்ல இயலாது. நமது படைக்குமுன் அவன் படை எம்மாத்திரம்?”
அப்படி அலட்சியமாக இருக்கக் கூடாது மன்னா! நமது வீரர்கள் போரிட்டுக் களைத்திருப்பர் என்றுதான் மீண்டும் உடனே படையெடுத்து வருகிறான். நமது குதிரைப் படைதான் நமது வெற்றிக்குக் காரணம்.
குதிரைகளும் நமது படையில் அதிகம். அவை பலமுறை போரிட்டதால் கால்களிலுள்ள குளம்புகளில் ஆணிகள் தேய்ந்து போய் விட்டன. அவற்றுக்கு லாடம் அடிக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் படை நடத்த முடியும்…” என்றார் பணிவோடு.
ஆனால் சுரேந்திரனோ, ‘இப்போது ஆணி அடிப்பதற்கெல்லாம் அவசரமில்லை. மகேந்திரனின் படையை வெற்றிகொண்டு துரத்திய பிறகு மாதக்கணக்கில் நிதானமாக அடித்துக் கொள்ளலாம்” என்று அலட்சியமாகக் கூறிவிட்டு அந்தப்புரம் சென்று விட்டான்.
‘ஆணியே’ அடிக்கவேண்டாம்!’ என்ற மன்னரின் அலட்சிய வார்த்தைகளை வேறுவழியின்றி ஒப்புக் கொண்டார் மந்திரி.
சில நாட்களில் இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. இரு மன்னர்களும் தங்கள் படைகளுடன் புறப்பட்டனர்.
சுரேந்திரன் புன்னகையுடன் தன குதிரைப்படையை நடத்திச் சென்றான். திடீரென்று படையிலிருந்த குதிரைகள் கீழே விழுந்தன.
சில சரியாக ஓட முடியாமல் தடுமாறின. மகேந்திரனின் படை சிறிதானாலும் எல்லா வகையான பராமரிப்பும் செய்யப்பட்டிருந்தன.
குதிரைகள் லாடம் அடிக்கப்பட்டு நன்கு ஓய்வெடுத்து, போருக்குத் தயாராக சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்தன. ஆனால் சுரேந்திரன் படையோ பெரிதாக இருந்தாலும், போதிய பராமரிப்பின்மையால் பாதிக்குமேல் படுத்து விட்டன.
மன்னன் சுரேந்திரனும் அச்சமும் சோர்வும் அடைந்துவிட்டான். தக்க தருணம் பார்த்து மகேந்திரன் சுரேந்திரனையும் அவனது மந்திரி மகிபாலரையும் கைது செய்து சிறையில் அடைத்தான்.
இப்போது இருவரும் மச்ச நாட்டுச் சிறையில் இருந்தனர்.
மந்திரியின் சொல்லைக் கேளாததால்தான் தனக்கு இந்த நிலை வந்ததென்று வருந்திப் பேசினான் சுரேந்திரன்.
அப்போது மகிபாலர், “மன்னா, சிறிய உளி என்று நினைப்பது தவறு. அதுதான் பெரிய மலையைப் பிளக்கிறது.

மேலும் ஆணிதானே அடிக்க வேண்டும் பிறகு செய்யலாம் என்று நினைத்ததால்தான் போரில் தோற்கும் நிலை வந்தது.
படை பெரிதாக இருந்தும் தக்க தருணத்தில் தேவையான பராமரிப்பைச் செய்யாததால்தான் தங்களுக்கு இந்த நிலை” என்றபோது மன்னனுக்குப் புத்தி வந்தது.
துன்பம் வருவதற்கு முன்பாகவே அதைத் தடுப்பதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்யத் தவறியவன் வாழ்க்கை, நெருப்பின்முன் வைக்கப்பட்ட வைக்கோல் போரின் நிலையை அடையும்.
எந்தச் சிறு விஷயமாக இருந்தாலும், தக்க தருணத்தில் சரியானபடி கவனிக்கவேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொள்வோம்.
– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை, ஒரு விதை‘ என்ற நூலிலிருந்து பகுதி.