தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத பெயர்!

நாரண துரைக்கண்ணன் என்கிற ஜீவா – இலக்கிய உலகில் மறக்க முடியாத பெயர்.

சிறுகதைகள், நாவல்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் தனக்கென்று தனி வழி வகுத்துக் கொண்டவர்.

இதழாசிரியராக இருந்ததால் பல்வேறு பகுதிகளை எழுதும்போது வெவ்வேறு புனைப் பெயர்களை அமைத்துக்கொள்ள நேர்ந்தது.

தான் ஆசிரியராக இருந்த ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், மாத, மாதமிரு முறை இதழ்களில், மைவண்ணன், வேள், துலாம், தராசு, திருமயிலைக் கவிராயர், துரை, லியோ எனப் பல்வேறு புனைப் பெயர்களில் கதை, தொடர்கதை, அரசியல் தலையங்கம், விமர்சனங்கள், விவாதங்கள், நாடகங்கள் எழுதிக் குவித்தார்.

அவ்வாறு எழுதும்போது பல்வேறு பெயர்களைச் சூட்டிக் கொண்டாலும் “ஜீவா’ என்ற பெயர் தான் வாசகர்கள், எழுத்தாளர்களிடையே அன்று பிரபலமானது.

பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப.ஜீவானந்தம் ‘ஜீவா’ என்று அழைக்கப்படத் தொடங்கியதும் நாரண துரைக்கண்ணனாரை ‘ஜீவா’ என்று அழைப்பது குறைந்தது. இதில் நாரண துரைக்கண்ணனுக்கு வருத்தமே.

சென்னை, திருமயிலையில், 1906-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி, க.வே.நாராயணசாமி – அலர்மேல் மங்கை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் நடராசன்.

ஆனால், அவர்கள் “துரைக்கண்ணு’ என்று செல்லமாக அழைத்தனர்.

துரைக்கண்ணன் என்ற பெயருடன் தந்தை பெயரில் உள்ள “நாரண’னைச் சேர்த்துக் கொண்டு நாரண துரைக் கண்ணனானார். எழுத்துலகில் அந்தப் பெயர் நிலை பெற்றது.

மறைமலையடிகள் போன்ற மேதைகளிடம் தமிழ் பயின்றார். மெய்ப்பு சரி பார்க்கும் பணியில் பல அச்சகங்களில் பணியாற்றினார். மெய்ப்பு சரி பார்ப்பதில் வல்லவரானார்.

வருவாயைப் பெருக்க சில காலம் அடிசன் கம்பெனியில் பணியாற்றினார்.

நாரண துரைக்கண்ணனின் முதல் கட்டுரையே ‘சரஸ்வதி பூஜை’ என்கிற பெயரில் 1924-ம் ஆண்டு சுதேசமித்திரன் இதழில் பிரசுரமானது.

தமிழ்ப் புலமையுடன் எழுத்தில் ஆர்வமும் பிறந்தது. கதை மாந்தர் (பாத்திரங்கள்) வாயிலாக சமூக சீர்கேடுகளை விளக்கி, அவற்றைக் களையும் ஆர்வம் இயற்கையிலேயே ஏற்பட்டது.

துணிவாகவும், கற்பனையாகவும் உண்மை என நம்பக்கூடிய வகையில் எழுதும் கலை கைவரப் பெற்றார்.

கற்பனையை உண்மை என நம்பும்படி எழுதும் திறமையால் அவருக்குத் தொடக்கத்திலேயே சங்கடம் ஏற்பட்டது.

‘நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?’ என்ற புதினம் தொடராக வந்து நூல் வடிவம் பெற்றது.

தம் குடும்பத்தின் நிஜ வாழ்க்கையை அம்பலப்படுத்திவிட்டார் என்று சிலர் குற்றம் சாட்டினர். அவருக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட பெண் வீட்டாரும் அவர்களுள் ஒருவர்.

தம் குடும்பத்து உண்மைச் சம்பவமாக அந்தக் கதை இருப்பதாகப் பெண் கொடுக்க வந்தவர்கள் முடிவு செய்தனர்.

இத்தகைய குணமுடைய மாப்பிள்ளைக்குத் தன் மகளை மணம் முடித்தால் பெண்ணின் பிற்கால வாழ்க்கை என்ன ஆகுமோ என்று அவர்கள் அஞ்சி, பெண் கொடுக்க மறுத்து விட்டனர். திருமணம் நின்று போனது.

கற்பனைக்கு ஏற்பட்ட விளைவால் ஜீவா வியப்படைந்தாரே தவிர, கவலை அடையவில்லை. அவர் எழுத்து மேலும் வீறு கொண்டது. எழுத்தில் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. சமூக அவலங்களைத் தம் கதைச் சம்பவமாக்கிச் சாடினார்.

அந்தத் திருமணத் தடைக்குப் பிறகு வேறு இடத்தில் 1932-ம் ஆண்டு, தன் 25வது வயதில் மீனாம்பாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

1982-ம் ஆண்டு வரை ஜீவாவுக்கு உறுதுணையாக இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு ஜீவா மிகவும் சோர்வடைந்தார்.

எழுத்தை முழு மூச்சாகக் கொண்ட எழுத்தாளர்களுள் நாரண துரைக் கண்ணனுக்குச் சிறப்பிடம் தரலாம். அவருடைய சமகாலத்தவரான ‘கல்கி’யைப் போன்று புகழ் பெற்றார்.

மகாத்மா காந்தியின் கொள்கைகளில் மிகவும் பற்றுக் கொண்டவர் என்றாலும் பெரியார், அண்ணாவின் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. 

வள்ளலார் மற்றும் மகாகவி பாரதியின் நூல்களை ஆர்வத்துடன் கற்றார். திருவருட்பா பற்றிய நூலொன்றை எழுதினார்.

பிற்காலத்தில் பாரதியின் பாடல்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்குப் பெரும் கிளர்ச்சி செய்து அதற்கென ஏற்பட்ட குழுவினர் சார்பில் பாரதியின் துணைவியார் செல்லம்மாளை திருநெல்வேலிக்குச் சென்று, கண்டு, அனுமதிக் கடிதம் வாங்கினார்.

‘கல்கி’யை வாசனுக்கு அறிமுகப்படுத்திய பரலி சு.நெல்லையப்பர், நாரண துரைக்கண்ணனை ‘லோகோபகாரி’ வார இதழில் துணையாசிரியராக்கினார்.

தேச பந்து, திராவிடன் இதழ்களில் பணியாற்றிய பிறகு 1932-ஆம் ஆண்டு ‘ஆனந்த போதினி’ இதழின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ‘ஆனந்த போதினி’ இதழ் அந்தக் கால கட்டத்தில் பிரபலமாக விளங்கியது.

அந்த இதழில் தான் ‘அழகாம்பிகை’ என்ற சிறு கதையை எழுதினார். அதுவே அவருடைய முதல் சிறுகதை என்று கூறலாம்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாரண துரைக்கண்ணனின், ‘நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?’ என்ற நாவலைப் படித்து வ.ரா. பெரிதும் பாராட்டினார்.

1942-இல் ‘உயிரோவியம்’ என்ற புதினம் எழுதியபோது வ.ரா. அந்த நாவலுக்கு முன்னுரை வழங்கினார்.

தேவதாசிகள் என்ற இழுக்கை சமூகத்தில் இருந்து களைய வேண்டும் என்ற கிளர்ச்சி நாட்டில் பரவிய காலத்தில் எழுதப்பட்ட நாவல் தான் ‘தாசி ரமணி’.

பொது வாழ்வில் மிகவும் ஈடுபட்டவர். பலன் கருதாது உழைத்தவர். சென்னை எழுத்தாளர்கள் சங்கம் ஏற்படப் பெரிதும் காரணமானவர்.

அந்த அமைப்புக்குத் தான் தலைமை ஏற்காமல் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியை வற்புறுத்தித் தலைவராக்கினார்.

மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் வகையில் தோத்திரப் பாடல்களை ‘அருட்கவி அமுதம்’ என்ற பக்திப் பாடல்கள் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.

“தமிழ் இலக்கிய உலகுக்கு ஓர் அருமையான எழுத்தாளர் ஜீவா!” என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு முறை பாராட்டியுள்ளார்.

தன்னைப் புகழ்வதையும், காரியம் சாதிக்கப் பாராட்டுவதையும் ராஜாஜி ஏற்க மாட்டார் என்பதை அவருடன் பழகியவர்கள் அறிவார்கள்.

மது விலக்குக் கொள்கை, தீண்டாமை ஒழிப்புக் கொள்கை, சீர்திருத்தக் கருத்துகள் இவற்றால் ஈர்க்கப் பட்ட ஜீவா, ராஜாஜியைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம் ஒன்றை எழுதினார்.

அதை ராஜாஜியிடம் வெளியிட அனுமதி கேட்டபோது வெளியிடக் கூடாது என்று ராஜாஜி கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.

ஆனால், நாரண துரைக்கண்ணனிடம் மதிப்பு வைத்திருந்த ராஜாஜி, நூலைப் படித்துப் பார்த்து “நானே இதைவிடச் சிறப்பாக எழுதி இருக்க முடியாது” என்று பாராட்டி ஆசி வழங்கினார். 

1949-ல் மகாகவி பாரதியார் இலக்கியங்களை நாட்டுடைமையாக்கப் போராட ஏற்பட்ட குழுவில் முக்கிய பங்கு வகித்து வெற்றி பெற்றார்.

பதினைந்துக்கும் மேற்பட்ட புதினங்களும், சிறுகதைத் தொகுதிகளும், கவிதைத் தொகுதிகளும், நாடகங்களும் எழுதி தமிழ் நாட்டு மக்களிடையில் படிக்கும் வழக்கத்தையும், சீர்திருத்தக் கருத்துகளையும் பரப்பிய நாரண துரைக்கண்ணனார், 32 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பிரசண்ட விகடன் ஆசிரியராகத் திகழ்ந்தார்.

20-ஆம் நூற் றாண்டின் புரட்சி எழுத்தாளரான நாரண துரைக்கண்ணன், இறுதிக் காலத்தில் வளமாக வாழவில்லை. பல அறிஞர்களும், மக்களும் வற்புறுத்திய பிறகே அவரது நூல்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன.

எழுத்தாளர் ஜீவா- நாரண துரைக்கண்ணனுக்கு தமிழ் நாட்டில் தகுந்த புகழும் மரியாதையும் அளிக்கப்படவில்லை. அவர் வாழ்ந்து வந்த சூளைமேடு பகுதியில் உள்ள முக்கியமான சாலைக்கு நாரண துரைக்கண்ணன் சாலை என்று பெயரிட்டுப் பெருமைப்படுத்தலாம். இப்போதும் காலம் கடந்து விடவில்லை.

1996-ம் ஆண்டு, ஜூலை 22-ம் தேதி அவர் மறையும் வரை எழுதிக்கொண்டே இருந்தார்.

நாரண துரைக்கண்ணனின் மிக எளிமையும், தொண்ணூறு வயது நிறைந்த போதும் நினைவாற்றலுடன் ஆற்றிய பணியும் தமிழ்நாடு உள்ள வரை மறையாது.

நன்றி : தினமணி 

You might also like