உலகளவில் புரட்சியை ஏற்படுத்திய ‘உயிரினங்களின் தோற்றம்’!

இயற்கையியல் அறிஞரான சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை, ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை.

இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன.

மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது.

எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.

இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, ‘தக்கன பிழைக்கும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது, அதாவது வலிமையானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.

டார்வின் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859-ம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல்.

தத்துவம் அல்லது இலக்கியப் படைப்புக்கள் தனித்தனியான ஆளுமைகளின் படைப்புக்களாகும், பலருடைய தொடர்ச்சியான கூட்டு முயற்சிகளால் உருவாக்கப்படுவதில்லை.

ஆனால், அறிவியல் படைப்புக்கள் தனித்தனி நூல்கள் அல்ல; அவை தொடர்ந்து வரும் கூட்டுச் செயல்பாடுகளின் படைப்புக்கள். தனிப்பட்ட விஞ்ஞானிகள் இதில் பங்காற்றித் தங்கள்  பங்களிப்பினைச் செய்து வருகிறார்கள்.

தனிப்பட்ட விஞ்ஞானிகள் என்னதான் ஒரு கோட்பாட்டை வெற்றிகரமாக உருவாக்கினாலும், அதனைக் கடந்து போகும் வேறொரு கோட்பாடு வரும் என்ற எதிர்நோக்கல் எப்போதும் உண்டு.

சாதாரண வாசகனுக்கு அறிவியல் செவ்வியல் படைப்புக்கள் பொதுவாகப் புரியாது.

அந்தப் புரியாமைக்கு விஞ்ஞானத்தின் கலைச்சொற்களும், சிக்கல்வாய்ந்த கணித எடுத்துரைப்பும் காரணமாகலாம். ஆனால் டார்வினுடைய ‘உயிரினங்களின் தோற்றம்’ இதற்கு விதி விலக்கானது.

: உயிரினங்களின் தோற்றம்!
ஆசிரியர்: சார்லஸ் டார்வின்
விடியல் பதிப்பகம்
பக்கங்கள்: 136
விலை: ரூ.100/-

You might also like