ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய ஆட்சியை விமர்சித்த எந்த விடுதலை வேட்கைக் குரல் எழுத்திலோ, மேடைப் பேச்சிலோ, நாடக மேடையிலோ, திரைப்படத்திலோ இடம் பெற்றாலே அவை மோப்பம் பிடிக்கப்பட்டு விமர்சன விகிதத்திற்கு ஏற்பத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
பாரதி மாநிலம் கடந்து புதுச்சேரிக்கு இடம் பெயர வேண்டியிருந்தது. பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
நாடகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் பாடல் பாடியவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
‘தியாக பூமி’ போன்ற திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
பொதுவெளி அந்த அளவுக்கு அதிகாரக்கனத்துடன் கவனிக்கப்பட்டது.
சுதந்திரம் கிடைத்த பிறகு பொதுவுடமைக் கொள்கை பேசியவர்கள் வேட்டையாடப்பட்டு அவர்கள் தலைமறைவாகும் சூழல் உருவானது.
இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘நெருக்கடி நிலை’ ஆட்சியை விமர்சிக்கும் குரலையே அடியோடு குலைத்தது. ‘மிசா’ போன்ற கடுமையான சட்டங்கள் இயறறப்பட்டுப் பல கொடூரங்கள் அரங்கேறின. சிறைகள் சித்திரவதைக் கூடங்களாகின. எதிர்க்கட்சிகள் முடக்கப்பட்டிருந்தன.
மௌனமாகப் பொறுத்திருந்த தங்கள் வாக்கின் மூலம் பதில் அளித்து அந்த ஆட்சியை அகற்றிய பிறகு காலங்கடந்து நெருக்கடி நிலையை அமல்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டார் இந்திரா காந்தி.
அன்றைக்கு அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையின் போது, கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டவர்களில்- இன்றைய பாரதிய ஜனதாவின் முன்னோடிகளான ஜனசங்கத்தினரும் அடக்கம். மதவாதிகளும் அடக்கம்.
தாங்கள் செய்த தவறுகளை அவை நிகழும் காலத்திலேயே அவர்கள் உணரவில்லை என்பது தான் ஜனநாயகத்தின் அர்த்தப்பிழை.