தாயின் கருவில் 10 மாதங்கள் குழந்தை இருந்தால்தான், குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்தும் முழு வளர்ச்சி அடையும்.
ஒருவேளை 10 மாதங்களுக்கு முன் தாய் குழந்தை பிரசவித்தால், அது குறைப்பிரசவம் எனப்படும். இச்சூழலில் உடலுறுப்பு வளர்ச்சியிலும் சிக்கல் இருக்கும்.
உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் குறைமாத குழந்தை பிறப்பில் சுமார் 1 மில்லியன் குழந்தைகள் வரை இறக்கிறார்கள்.
உயிர் தப்பும் பிற குழந்தைகளும்கூட, வாழ்நாள் முழுவதும் குறைபாடுகளுடன் வாழ்வதற்கு வாய்ப்பு உண்டு என்று WHO தெரிவிக்கிறது.
சமீபகாலத்தில் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் சென்று கொண்டிருக்கிறது.
இருப்பினும் பெரும்பாலானவர்களுக்கு குறைப்பிரசவம் என்றால் என்ன? அதை எப்படி கையாளுவது? இது நடக்காமல் தடுப்பது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை.
இதையெல்லாம் வலியுறுத்த, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17-ம் தேதி குறைப்பிரசவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குறைப்பிரசவ விழிப்புணர்வு தினம் என்பது கடைப்பிடிக்கப்படுகிறது.
குறைப்பிரசவம் – வகைகள்
ஒரு தாயின் கர்ப்ப காலம் என்பது 37 வாரங்கள் முழுமை பெற்றிருக்க வேண்டும்.
அப்படியில்லாமல் சில மருத்துவ காரணங்களால், 37 வாரங்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தால் அது குறைப்பிரசவம். இதிலேயே மூன்று நிலைகள் / வகைகள் உள்ளன.
3 வகையான குறைப்பிரசவம்:
28 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தை – மிக மிக முன்கூட்டிய பிறப்பு
28-32 வார இடைவெளியில் பிறக்கும் குழந்தை – மிகவும் குறைப்பிரசவம்
32-37 வார இடைவெளியில் பிறக்கும் குழந்தை – இடைப்பட்ட காலம்
என்ன பாதிப்பு ஏற்படும்?
தாயின் கருப்பையில் சிசு இருக்கும்போது ஏற்படும் பிரச்னைகளே, குறைப் பிரசவத்துக்கான முக்கிய காரணம்.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக அளவு பாதிக்கப்படும் முக்கிய உள்ளுறுப்பு நுரையீரல்.
கல்லீரல், நுரையீரல் போன்று உடலின் பல பகுதிகள் வளர்ச்சி அடைவதில்லை.
ஊட்டசத்துக் குறைபாடு, உடல் உறுப்புகள் வலுவிழந்து காணப்படும் தன்மையும் இருக்கும். உடலின் நோய்த்தடுப்பு ஆற்றல் குறைவதன் காரணமாக நோய்த் தொற்றும் அவர்களுக்கு எளிதல் ஏற்படக்கூடும்.
உலக சுகாதார நிறுவனம் சொல்வதென்ன?
குறைப்பிரசவத்தை குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “குறைப் பிரசவங்களைத் தடுப்பதே, குறைப்பிரசவத்தால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுப்பதற்கான வழி.
தெற்கு ஆசியா மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்காவில்தான் பெரும்பாலும் குறைப்பிரசவ பிரசவங்கள் நடக்கின்றன.
மிக மிகக் குறைப்பிரசவத்தில் அதாவது 28 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகள் உயிர் வாழும் எண்ணிக்கை என்பது அவர்கள் வாழும் நிலப்பரப்பினை அடிப்படையாகக் கொண்டுள்ளது” என்கிறது
குறைப்பிரசவங்களை எப்படி தவிர்ப்பது?
கர்ப்பிணிகள்,
– மிக ஆரோக்கிய வாழ்வும் உணவு முறை கொண்டிருப்பது மிகவும் அவசியம்.
– தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
– முன் கூட்டியே குழந்தை பிறப்பு அனுபவம் இருந்தால் அடுத்த குழந்தை பிறப்பின்போது ஏதேனும் ஆபத்துக் காரணிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
– மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
– மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கத்திற்கு வழக்கமானவர் என்றால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், பல்வேறு சவால்களை சந்தித்துதான் பூமிக்கு வருகிறது.
அப்படி பிறந்த பிறகும் வாழ்நாளில் அவர்களுக்கு ஏற்படும் சவால்கள் இன்னும் அதிகமாகிறது என்பதே மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றனர்.
எனவே குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தொடர்ச்சியான உடல்நலக் கண்காணிப்பு மிகவும் அவசியமாகிறது.
2025-ம் ஆண்டின் கருப்பொருள்
“சிறிய படிகள், பெரிய தாக்கம்: ஒவ்வொரு குழந்தைக்கும், எல்லா இடங்களிலும், சருமத்திலிருந்து சருமத்திற்கு அவசர பராமரிப்பு.”
இந்த கருப்பொருள், முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளின் உயிரைக் காக்க சரியான பராமரிப்பு மற்றும் skin-to-skin care – அதாவது “கங்காரு பராமரிப்பு” – எனப்படும் உடல் தொடர்பு மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது.
மருத்துவ ஆய்வுகளின் படி, இந்த பராமரிப்பு முறையால்:
* குழந்தையின் உடல் வெப்பநிலை சீராகிறது
*இதயத் துடிப்பு சீராக செயல்படும்
* தொற்று அபாயம் குறைகிறது
*தாயுடனான உணர்ச்சிப் பிணைப்பு அதிகரிக்கிறது
இந்த கருப்பொருள், “ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வாழ வேண்டும்” என்ற உலகளாவிய செய்தியைத் தெளிவாக முன்னிலைப்படுத்துகிறது.
– ஜெனிட்டா ரோஸ்லின்
- நன்றி: புதிய தலைமுறை