இசைஞானியின் குரலுக்கு அப்படியே பொருந்தும் நவரச நாயகன்!

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்துப் படங்களில் சிவாஜிக்கு பாடல்களில் பின்னனிக் குரல் கொடுத்தவர் சி.எஸ்.ஜெயராமன். அதேபோல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பல பாடகர்கள் குரல் கொடுத்தனர்.

இவையெல்லாம் டி.எம்.சௌந்தர்ராஜன் வரவுக்கு முன்னர் தான். டி.எம்.சௌந்தர்ராஜன் திரையிசைப் பாடல்கள் பாட ஆரம்பித்தபோது எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கும் மிகப் பொருத்தமான குரலாக இருந்தார்.

இதேபோல் ரஜினிக்கு பொருத்தமான குரலாக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பெரும்பாலும் எஸ்.பி.பி-யின் பாடல்களே ரஜினிக்குப் பொருத்தமாக இருக்கும்.

ஆனால் இசைஞானி இளையராஜாவின் குரல் ஒரு நடிகருக்குக் கனகச்சிதமாகப் பொருந்திப் போகிறது என்றால் அது நம் நவரச நாயகனுக்குத்தான். கார்த்திக்கு பல பாடகர்கள் பாடியிருந்தாலும் இளையராஜாவின் குரலில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது.

அப்படி என்னென்ன பாடல் தெரியுமா? தெய்வ வாக்கு படத்தில் இடம்பெற்ற வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

நவரச நாயகனின் வாயசைவும், அதற்குப் பின்னனி கொடுத்த இளையராஜாவின் குரலும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று. இந்தப் பாடல் இன்றும் கேட்கும்போது இசையும், குரலும் நம்மை 90-களின் ஆண்டிற்கே அழைத்துச் செல்லும்.

அடுத்த பாடல் ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’ படத்தில் இடம்பெற்ற “செவ்வரளி தோட்டத்திலே” பாடல். மறைந்த பாடகி உமா ரமணனுடன் இளையராஜா இசையமைத்துப் பாடிய பாடல்.

கிராமத்து ஒலிப்பெருக்கிகளில் இந்தப் பாடல் அடிக்கடி ஒலிக்கும். தூரத்திலிருந்து எங்கோ வரும் இசையும் பாடலும் கார்த்திக்கையும், இளையராஜாவையும் ஞாபகப்படுத்தும்.

‘நாடோடிப் பாட்டுக்காரன்’ படத்தில் இடம்பெற்ற “ஆகாயத் தாமரை அருகில் வந்ததே” பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகச் சிறந்த டூயட் பாடலாக விளங்கும் இப்பாடலும் நவரச நாயகனுக்காக இளையராஜா கொடுத்த பின்னனி.

மணிரத்னத்தின் கிளாசிக் ஹிட் படமான ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் இடம்பெற்ற  “ராஜா.. ராஜாதி ராஜன் இந்த ராஜா” இன்றும் கார்த்திக்கு கெத்து காட்டும் பாடலாக விளங்குகிறது.

இந்தப் பாடல் இளையராஜாவின் குரலிலிலும், இசையிலும் உருவானதே.

“நான் தேடும் செவ்வந்திப் பூவிது.. ஒரு நாள் பார்த்து..” இன்றும் மனதிற்குப் பிடித்த பாடலாக விளங்கும் தர்மபத்தினி படத்தில் இடம்பெற்ற இப்பாடலும் நவரசநாயகனும், இளையராஜாவும் செய்த மேஜிக் கூட்டணி.

அதேபோல் நாடோடித் தென்றல் படத்தில் இடம்பெற்ற மணியே மணிக்குயிலே பாடலின் முதல் தொகையறா இளையராஜா பாடியதே.

இப்படி நவரசநாயகனுக்கு தன்னுடைய இசையாலும், குரலாலும் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

நன்றி : ஜான் அழகர் முகநூல் பதிவு

You might also like