தமிழ் சினிமாவின் மாறாத சில விஷயங்கள்!

எழுத்தாளர் சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா தமிழ் பத்திரிகை உலகில் நீங்கா இடம் பிடித்தவர். சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர். இவரது சில நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டன. மேலும், சில திரைப்படங்களில் இவர் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சில ஃபார்முலாக்கள் எப்போதும் கடைபிடிக்கப்படும். காலத்திற்கேற்ப சினிமா ரசிகரின் ரசனை மாறுபடும்.

ஆனால், தமிழ் சினிமாவில் சில விஷயங்கள் பழைய கருப்பு வெள்ளை திரைப்படங்கள் தொடங்கி, தற்கால டிஜிட்டல் திரைப்படங்கள் வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

சினிமாத் துறையில் இவர் பணியாற்றி இருந்தாலும், தமிழ் சினிமாவின் மாறாத விஷயங்கள் என்று இவர் நகைச்சுவையாகக் கூறிய 20 சுவாரஸ்யமான நையாண்டி விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

1. இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர்.

2. பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம். வெடிக்காது.

3. எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான் உதைபடுவார்கள்.

4. இரவு நேரத்தில் எல்லா விளக்குகளையும் அணைத்த பின்பும் வீடு முழுதும் ஊதா கலரில் தெரியும்.

5. நேர்மையான போலீஸ் அதிகாரியைக் காட்டினால் நிச்சயமாக அவர் கொல்லப்படுவார்.

6. வில்லன் ஹீரோவை நேராக சுட்டோ, கத்தியால் குத்தியோ கொல்ல மாட்டார். ஹீரோ தப்பிக்க முப்பது நிமிடமாவது இருக்கும்படி சுற்றி வளைத்துதான் கொல்ல முயற்சிப்பான்.

7. ஹீரோ வில்லனிடம் செமயாக அடி வாங்கும்போது வலிக்கவே வலிக்காது. ஆனால், ஹீரோயின் பஞ்சு ஒத்தடம் கொடுக்கும்போது மட்டும் ஸ்…. ஸ்… ஆ என்பான்.

8. ஒரு பெரிய கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடியைக் காட்டினால் அதை உடைத்துக் கொண்டு யாராவது விழுவார்.

9. ஹீரோவோ ஹீரோயினோ ரோட்டில் நடனமாடத் துவங்கினால் தெருவில் போகும் அனைவரும் அதே தாளத்தில் ஒரே மாதிரி நடனமாடுவார்கள்.

10. போலீஸ் உயர் அதிகாரி நல்லவர் என்றால் கீழே இருக்கும் போலீஸ்காரர்கள் கெட்டவர்களாக இருப்பர். உயர் அதிகாரி கெட்டவர் என்றால் இவர்கள் நல்லவர்கள்

11. உணர்ச்சி வசப்படும் காட்சிகளில் திடீரென மின்னல் வெட்டி மழை வந்தே ஆக வேண்டும்.

12. பாடல் காட்சிகளில் ஒரு வரி மயிலாப்பூரிலும், அடுத்த வரி ஐரோப்பாவிலும், அடுத்த வரி மலேசியாவிலும் பாடப்படும்.

13. ஒரே பாட்டு பாடிக்கொண்டிருக்கையில் உடை மாறும், உடையின் நிறம் மாறும்.

14. சட்டென்று எல்லா மியூசிக்கும் நின்று விட்டால் யாரோ செத்துப் போய்விட்டார்கள் என்று அர்த்தம்.

15. கோர்ட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கின் எந்தக் கட்டத்திலும் நுழைந்து, உடனே சாட்சி  சொல்லலாம். கோர்ட் வாசற்படியில் நின்றுகூட சாட்சி சொல்லலாம்.

16. முகூர்த்தத்துக்கு நேரமாறது, பொண்ண வரச்சொல்லுங்கோ’ என சாஸ்திரிகள் அவசரப்படுத்தினால், பெண் காணாமல் போய் விட்டாள் என எதிர்பார்க்கலாம்.

17. கல்யாண காட்சியில் தாலியைக் கட்டப்போகும் சமயம், “நிறுத்துங்க“ என்ற குரல் எப்படியும் ஒலித்தே தீரும்.

18. ஹீரோ ஏழை என்றால் பணக்கார பெண்ணையும், பணக்காரன் என்றால் ஏழைப் பெண்ணையுமே காதலிப்பான்.

19. வில்லன் என்றாலே நிச்சயம் ஏதாவது கள்ளக்கடத்தல் செய்வான்.

20. ஹீரோ முதல் பாதி கிராமத்திலிருந்தால் இரண்டாம் பாதி நகரத்திற்கு வருவார்.

– எஸ்.விஜயலட்சுமி (கல்கி)

 

You might also like