மலையாளத்தில் பேசி ரசிகர்களை அசத்திய விஜய்!

கேரளாவில் ‘இளையத் தளபதி’ விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. விஜயின் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது, தமிழகத்தைப் போலவே, கேரள தியேட்டர்களும் திருவிழாக் கோலம் பூணும்.

சித்திக் இயக்கிய ‘காவலன்’ படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் கடந்த 2010 ஆம் ஆண்டு கேரளா சென்றார். அதன்பிறகு கேரளா செல்லவில்லை.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) படத்தின் படப்பிடிப்பாக அண்மையில் கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு விஜய் சென்றார்.

விமான நிலையத்தில், காலை 11 மணி முதலே அவரை வரவேற்க ரசிகர்கள் காத்திருந்தனர். மாலை 5 மணிக்கு விஜய் பயணித்த விமானம் திருவனந்தபுரம் சென்று சேர்ந்தது.

விமான நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

விஜயை நெருங்கப் பார்க்க முயன்றபோது, நெரிசல் ஏற்பட்டதால், விமான நிலையத்தின் சில பகுதிகள் சேதம் அடைந்தன. விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளும் உடைந்தன.

ஓட்டலுக்கு விஜய் கார் புறப்பட்டபோது, ரசிகர்கள் அதனை பின் தொடர்ந்து சென்றனர். கார் மீது அவர்களின் ‘பைக்’ உரசியது.

இதனால் கார் கண்ணாடிகள் உடைந்தன. காரின் பக்கவாட்டு பகுதியும் சேதமடைந்தது.

விஜய் வருகை தந்த திங்கள் கிழமை அன்று, திருவனந்தபுரம் நகரமே அல்லோலகல்லப்பட்டது.

‘கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு, இப்போது திருவனந்தபுரத்தில் உள்ள ’க்ரீன் பீல்டு’ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் விஜய்யை காண அங்கு ரசிகர்கள் திரண்டு வருகின்றனர்.

மைதானத்துக்கு வெளியே நின்று முழக்கம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் படப்பிடிப்புக்கு இடைவெளி கொடுத்து விட்டு, ரசிகர்களை பாரப்பதற்காக விஜய் அங்கு வந்தார்.

ரசிகர்களை நேரில் சந்தித்த விஜய், அவர்களுடன் அளவளாவி, இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அங்கிருந்த வேனில் நின்றபடி மலையாளத்தில் பேசினார்.

’சேச்சி.. சேட்டன் மார்களே, உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடும் நாளில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்களோ, அதே அளவு சந்தோஷத்தில் இப்போது உங்கள் முகத்தைப் பார்க்கும்போது நான் உணர்கிறேன்.

எல்லோருக்கும் கோடான கோடி நன்றிகள். என்னுடைய தமிழ்நாட்டு நண்பர், நண்பிகளைப் போல் நீங்களும் வேற லெவல்’ என விஜய் உரத்த குரலில் சொன்னபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

பின்னர் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விஜய் தொடர்ந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

கேரள ரசிகர்களுடன் விஜய், மலையாளத்தில் பேசும் வீடியோ காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

-பாப்பாங்குளம் பாரதி

You might also like