மனதை சமநிலைப் படுத்தும் புத்தகம் தேவை!

சிறுவர் தொட்டு இத்தனை காலம் வரை நம்ம குடும்பம் அல்லது குடும்பத்தை தாண்டி நாம் கடந்து வந்த நம் சுற்றத்தாரிடமும் நடந்த சுவாரசியமான அல்லது மனதால் மறக்க இயலாத சிறுசிறு சம்பவங்களை ஆசிரியரே கதை சொல்லியாக நின்று ரசிக்கும் படியாக கூறியிருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு தான் ஆசிரியர் போகன் ஷங்கர் எழுதிய இந்த புத்தகம்.

மொத்தம் 106 கதைகள். அவை கதைகள் என்பதை காட்டிலும் சம்பவம்/நிகழ்வு என்று தான் கூற வேண்டும்.

ஆசிரியரின் சொந்த ஊரான திருநெல்வேலி தொடங்கி கன்னியாகுமரி வரை ஒவ்வொரு ஊரையும் நாம் சுற்றிபார்க்க முடியும்.

நாஞ்சில் நாட்டு வழக்கு மொழி என்றபோதும், முற்றிலும் அதே வழக்கில் அல்லாது, உரையாடலில் மட்டும் அது வெளிபட்டு, உணர்வுகள் பொதுத்தமிழில் வார்த்ததே புத்தகம் நம் மனதிற்கு நெருக்கமாக அமைந்துவிடும். 

கதை மாந்தர்கள் அனைவருமே ஆசிரியர் வாழ்வில் சந்தித்தவர்கள். கதைகள் புனைவு அல்லது அபுனைவா என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவைப்படாது.

எந்த பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி, எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த புத்தகத்தை வாசித்து, ரசித்து மகிழக் கூடிய வகையில் உள்ளது.

அதிகபட்சம் 3-5 கதைகள் வாசித்தாலே நமக்குள் ஒரு உற்சாகம் பிறந்துவிடும். அது மகிழ்ச்சியா, சிந்தனையா என்றில்லை.

சோகமே ஆனாலும் அது நம்மை சமநிலைப்படுத்தி கடந்து போகவைக்குமே அன்றி உறைய வைக்காது.

1. வேஷ்டி
2. ஒண்ணாம் நம்பர் கலா ரசிகன்
3. ஓர் இலக்கிய கூட்டம்
4. அசல் ராஜா
5. தற்கொலை
6. நீல வெளிச்சம்
7. அப்பக்களின் நாட்கள்
8. கொட்டுச் சத்தம்
9. ஒரு தெளிவான நாளில் நீங்கள் எதையுமே பார்ப்பதில்லை
10. மீண்டு வருதல்  – உள்ளிட்ட கதைகள் நிச்சயம் நம்மை ரசிக்க வைக்கும்.

  •  நன்றி: கதிரவன்
You might also like