இயற்கை அழகை கவிதைகளாக்கிய வாணிதாசன்!

நம் நாட்டில் இருந்த கவிஞர்கள் ஏராளமான கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் எண்ணற்ற விஷயங்களை நமக்கு எடுத்துரைத்துள்ளனர்.

அவர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசனின் மாணவன் என்ற பெருமைக்குரிய வாணிதாசன் பற்றி இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பார்க்கலாம். அவருடைய நாளிதழுக்கு கிடைத்த புகழும், பரிசும் எண்ணில் அடங்காதவை. 

இவரது இயற்பெயர் அரங்கசாமி எத்திராசலு. இவர் பாண்டிச்சேரியில் உள்ள வில்வ நல்லூர் (வில்லியனூரில்) 22-ம் தேதி ஜூலை மாதம் 1915-ம் ஆண்டு பிறந்தார்.

இவரது தாயாரின் பெயர் துளசியம்மாள், தந்தையின் பெயர் அரங்க திருக்காமு ஆவர். அவருடைய ஏழாம் வயதில் அவர் தாயார் இயற்கை எய்தினார். தாயாரின் மறைவிற்கு பின்னர் தந்தை, சிற்றன்னை மற்றும் பாட்டியிடம் வளர்ந்தார்.

2 ஆண்டுகள் திண்ணை கல்வி பயின்றார். பின் வில்லியனூரில் உள்ள பள்ளியில் கல்வி பயின்றார். இவரது ஆசிரியர்கள் எல்லப்ப ஆசிரியர், முத்துக்குமாரசாமி பிள்ளை ஆகியோர். இவருடைய தாய் மொழி தெலுங்கு.

பள்ளியில் தமிழும், பிரெஞ்சும் கற்றார். பள்ளி இறுதி தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக வெற்றி வாகை சூடினார்.

பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றார். பாரதிதாசன் மற்றும் தமிழின் மீது இருந்த பற்றின் காரணமாக கவிதைகளை எழுதத் தொடங்கினார்.

இவரது கவிதையை வெளியிட்ட தமிழன் நாளிதழின் ஆசிரியர் இவருக்கு வாணிதாசன் என்ற பெயர் வைத்தார். பின் 1945-ல் இவர் எழுதிய கவிதைக்கு சென்னையில் வித்வான் பட்டம் கிடைத்தது.

புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பொன்னி, காதல், முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல் போன்ற நாளிதழ்களில் தனது கவிதைகளை எழுதினார்.

இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகள் நன்றாகத் தெரிந்தவர். இவருடைய பாடலுக்கு பிரான்சு நாட்டு குடியரசுத் தலைவர் செவாலியர் விருது வழங்கிச் சிறப்பித்தார்.

திராவிட நாடு எனும் நாளிதழில் விதவைக்கொரு செய்தி என்ற கவிதை வெளிவந்து இவரை புகழின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.

தமிழச்சி, கொடி முல்லை, தொடுவானம் போன்ற குறுங்காப்பியங்களையும் எழுதியுள்ளார். தொடுவானம் எனும் நூலில் தனது பாடல் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நூலிற்கு முன்னுரை எழுதியவர் கவிஞர். திரு.வி.க ஆவார்.

வாணிதாசன் கவிதைகள் எனும் 88 பாடல்கள் இயற்கை, இன்பம், மக்கள், புரட்சி, தமிழ், பூக்காடு, இசைக்குரியார் போன்ற 7 தலைப்புகளில் 1956-ல் வெளிவந்து இவருக்கு மேலும் பல புகழை கொடுத்தது.

இவருடைய பொங்கல் வாழ்த்துப் பாடல்கள் ஏராளமான நாளிதழ்களில் தொகுக்கப்பட்டு பொங்கல் பரிசு என்ற நூலின் பெயரில் வெளிவந்தது.

தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி, தீர்த்த யாத்திரை, இன்ப இலக்கியம், எழிலோவியம், எழில் விருத்தம், குழந்தை இலக்கியம், பெரிய இடத்துச் செய்தி, சிரித்த நுணா, இரவு வரவில்லை போன்ற நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார்.

பாட்டு அரங்கத்தில் இவர் பாடிய ஏராளமான பாடல்கள் பாட்டரங்கப் பாடல்கள் எனும் பெயரில் நூலாக வெளிவந்தது.

இயற்கை பற்றியும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இயற்கை கவிதை எழுதியதால் இவரை தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என போற்றப்படுகிறார்.

கவிஞரேறு, பாவலர் மணி, புதுமைக் கவிஞர், உவமைக் கவிஞர், தமிழ்நாட்டுத் தாகூர் என்றெல்லாம் போற்றப்படுகிறார்.

தமிழ்நாடு அரசு இவரது நூல்களை நாட்டுடமை ஆக்கியுள்ளது. உருது, ஆங்கிலம் போன்ற மொழிகளில் இவரது நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இவரது பெருமையை போற்றும் விதமாக புதுச்சேரி மாநிலம் அவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு இவரது பெயரை சூட்டியுள்ளனர்.

இவரது பிறந்த நாளை அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் புதுவை அரசு, கலை பண்பாட்டு துறையும் கொண்டாடி வருகிறது.

இயற்கையின் அழகை ரசித்து கவிதை எழுதிய வாணிதாசனை அவரது 59-ம் வயதில் இயற்கை அழைத்துக் கொண்டது.

– தரணி

நன்றி: பொதுநலம்

You might also like