சமூக அவலங்களைக் கவித்துவமாகச் சொல்லும் நூல்!

நூல் அறிமுகம்:

பெருங்கடலில் நீந்திச் செல்லும் மீன்கள் தனது சிறிய துடுப்பால் பெருங்கடலை அசைத்துப் பார்ப்பது போல், பெருங்கடலில் வாழும் மீன்கள் அக்கடலையே சுமப்பது போன்ற ஒரு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கவிஞர் இளையவன் சிவா தனது கவிதை நூலுக்கு ‘மீன் சுமக்கும் கடல்’ என்று பெயரிட்டிருப்பது பெரும் சிந்தனைப் புரட்சியை உண்டு பண்ணுகிறது.

“குவிந்து கிடக்கின்றன
பூச்சிக்கொல்லியும் உரமும்
வயலின் வயிற்றில்.”

“கடனை மீட்டது வயல்
கரும்பு விளையாமல்
கல் நட்ட பின்.”

– இரண்டு வெவ்வேறு கவிதைகளின் வாயிலாக, நிகழ்கால விவசாயிகளின் நிலையினையும் நிலத்தின் நிலைப்பாட்டையும் தெளிவாக சுட்டிக் காட்டுகிறார் கவிஞர்.

பெரும்பாலான விலை நிலங்களில் ரசாயனம் கலந்த உரங்கள் தான் இடப்படுகிறது. இதனால் விலைநிலங்களின் நல்லத்தன்மை குறைந்து மலட்டுத்தன்மை தான் அதிகரிக்கிறது.

விளைப்பொருட்களிலும் நச்சுத்தன்மை உருவாகி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தொற்றுநோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளும் உருவாகிறது. மேலும் விவசாயத்தால் அதிக இலாபம் இல்லாத நிலையில், அந்த இடத்தை மனையாக மாற்றி வருவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

“கணக்கிட முடியவில்லை
பாலமெங்கும் கார்கள்
வெள்ளத்தில் சென்னை.”

“சிங்காரச் சென்னை
கார்காலப் பொழுதுகள்
பாலமெங்கும் கார்கள்.”

– என்ற கவிதை மழைக்காலத்தில் தற்போதைய சென்னையின் நிலைபாட்டை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதேபோல் நானும் எனது ‘இருளில் ஒளிரும் நிலா கவிதை’ நூலில் பின்வருமாறு பதிவுச் செய்திருக்கிறேன்.

“மழை அதிகரிக்கிறது
தயார் நிலையில்
நகரங்களில் படகு.”

இருளதிகாரம் என்று முதல் வரிகொண்ட ஐந்து கவிதைகளும் பருந்துகள் தேசத்தில் என்று முதல் வரிகள் கொண்ட பன்னிரண்டு கவிதைகளும் பல கருத்துக்களை உணர்த்துகிறது.

“எதிர்க்கட்சிகள் இணைந்தன
அடித்துக் கொண்ட தொண்டன்
வாக்கு வங்கியில் கவனம்.”

– காரசாரமாக மேடையில் பேசும் கட்சித் தலைவர்களின் பேச்சை நம்பி, தொண்டர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் தேர்தல் நேரத்தில் கூட்டணி என்ற பெயரில் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து கொள்வதும் தற்போது நடைபெறுகிறது.

தங்களின் கட்சிக்காக தொண்டர்கள் வாக்கு சேகரிப்பதும் இயல்பான ஒன்றாக உள்ளது. இதனைத் தெளிவாக பதிவுச் செய்திருக்கிறார் கவிஞர் இளையவன் சிவா.

“கழுத்தில் கத்தி
அமைதியில் இருக்கிறேன்
சலூன் கடை.”

“ஒழிந்தது தீண்டாமை
போராட்டங்கள் இல்லை
வன்புணர்வுக் கும்பலிடம்.”

– இன்னும் இதுபோன்ற சமூகம் சார்ந்த பல கவிதைகளையும் ‘மீன் சுமக்கும் கடல்’ எனும் இக்கவிதை நூலில் திறம்பட வாசகர்களுக்கு தந்திருக்கிறார்.

வாசிப்பு : மா.செல்வகுமார், கல்லூர், கும்பகோணம். 99448 86468

*******

நூல் : மீன் சுமக்கும் கடல்
ஆசிரியர் : இளையவன் சிவா
வெளியீடு : மௌவல்
பக்கம் : 84
விலை : ரூ.120/-
தொடர்புக்கு : 97877 09687, 99653 59130

You might also like