சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே நல்ல சினிமா!
படத் தலைப்பிலும் நீதியைத் தேடிய எம்.ஜி.ஆர்!
‘பாக்கெட்மார்’ என்ற இந்திப் படக் கதையை தமிழில் எடுப்பது என்றும், அதில் எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும் முடிவு செய்து அதற்கான பணிகள் ஆரம்பித்தன.
இந்தப் படத்திற்கு முதலில் ‘பிக்பாக்கெட்’ என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பெயர் எம்.ஜி.யாருக்குப் பிடிக்கவில்லை.
அப்போது, படத்திற்கு வேறு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது, எம்.ஜி.ஆர், “எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம். அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும்.
பணம் செலவு செய்து ‘போஸ்டர்’ ஒட்டுகிறோம். பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்” என்றார்.

அத்துடன், அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.
இதனால் எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில் படக் குழுவைச் சேர்ந்த மா.லெட்சுமணன், இந்தப் படத்திற்கு ‘திருடாதே’ என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
எம்.ஜி.ஆருக்கும் அந்தப் பெயர் ரொம்பவும் பிடித்துவிட்டது. மா.லெட்சுமணனுக்கு 500 ரூபாய் பரிசளித்தார் எம்.ஜி.ஆர்.
– தகவல் : சின்ன அண்ணாமலை