குதிரை லாயத்திலிருந்து என்னுடைய குதிரையைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன். அந்த வேலைக்காரன் என்னுடைய கட்டளையைப் புரிந்துகொள்ளவேயில்லை. அதனால் நானே குதிரை லாயத்திற்குச் சென்றேன். குதிரைக்கு சேனம் பூட்டி ஏறினேன்.
தொலைவிலிருந்து ஒரு ட்ரம்பட்டின் ஓசையை நான் கேட்டேன். அது எதைக் குறிக்கிறது என்று என்னுடைய வேலைக்காரனிடம் கேட்டேன். அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அவன் எதையும் கேட்டிருக்கவும் இல்லை. வாசல் கதவருகே என்னை நிறுத்தியவனாய் அவன் கேட்டான்: “எஜமான் எங்கே செல்கிறீர்கள்?”
“எனக்குத் தெரியாது” என்றேன். “வெறுமனே இவ்விடத்தை விட்டுச் செல்கிறேன் அவ்வளவுதான். என்னுடைய இலக்கை அடைவதற்கு இதுதான் ஒரே வழி.” அப்போது அவன் “உங்களுடைய இலக்கு எது தெரியுமா?” என்று கேட்டான். “ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். “நான் இப்போதுதானே உன்னிடம் கூறினேன். இவ்விடத்தை விட்டுச் செல்லவேண்டும் அதுதான் என்னுடைய இலக்கு.”
- நூதனச் சிறுகதைகள்
ஃப்ரான்ஸ் காஃப்கா – ஜெர்மன் / தமிழில்: கீதாஞ்சலி
#நூதனச்சிறுகதைகள் #shortstories #ஃப்ரான்ஸ் காஃப்கா #francekafka