புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:
“அண்ணன் எம்.ஜி.ஆரும் நானும், அப்போதும் சரி, இப்போதும் சரி, எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வேறுவேறு பாதையில் பயணித்தாலும், எப்போதாவது திடீரென சந்தித்துக் கொண்டால், கண்களில் அன்பைத் தேக்கிக் கொண்டு, இருவரும் சிறிது நேரம் எங்களையே மறந்து விடுவோம். அந்த நிலையை யாரால் விளக்க இயலும்?
அண்ணனைப் (எம்.ஜி.ஆர்) போல் நானும், என்னைப் போல் அண்ணனும் தாய்ப் பாசத்தில் அதீத பற்று கொண்டவர்கள். தாய்ச் சொல்லைத் தட்டாதவர்கள். தாய் கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள். தாயைத் தெய்வமாக மதிப்பவர்கள்.

கல்விக்குப் பலர் இலக்கணம் வகுத்துள்ளனர். நாங்கள் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள்.
நாடகத்தில் நடிப்பதற்காக நான் சென்னைக்கு வந்த பிறகு, எனக்கும் அண்ணனுக்கும் நெருக்கமான உறவு உண்டானது.
அப்போது வால் டாக்ஸ் சாலையின் முனையில் ஒரு பெரிய கட்டிடம். அதில்தான் நான் தங்கி இருந்தேன்.
அதே தெருவில் நாலு வீடு தள்ளி அண்ணன் (எம்.ஜி.ஆர்) வீடு. அப்போது அவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்.
காலை டிபன் அவரோடுதான். இரவில் எனக்கு ‘டிராமா’ முடிந்ததும் இருவரும் சினிமாவுக்குப் போவோம்.
அப்போது அண்ணனுக்கு தலை நிறைய அடர்ந்த கேசம் இருக்கும்.

அதனால் தலையில் முண்டாசுக் கட்டிக்கொண்டு, வேட்டியையும் வரிந்து கட்டிக்கொண்டு வருவார்.
சினிமா பார்த்து விட்டு, இரவில் ஒரு மணிவாக்கில், மிண்ட் தெருவில் உள்ள சேட் பால்கடைக்குப் போய் பால், சப்பாத்தி சாப்பிடுவது வழக்கம். எல்லாம் அண்ணன் செலவுதான்.
அப்போது அண்ணன் நிறைய காசு வைத்திருப்பார். அப்போதே, பிறருக்கு உதவி செய்யும் வழக்கம் அண்ணனுக்கு அதிகம்.
சாதாரணமாக இருக்கும்போதே நண்பர்களுக்கு நிறைய செலவு செய்வார். வசதி வாய்ப்புகள் பெருகிய நிலையில், எவ்வளவு செலவு செய்திருப்பார் என எண்ணிப் பாருங்கள்.
இந்த மாதிரி வளர்ந்தது எங்கள் நட்பு. அன்பை பொழிவதில் அண்ணனுக்கு ஈடு இணை கிடையாது.
எனக்கு 1952 ஆம் ஆண்டு கல்யாணம் நடந்தது. அந்த திருமணத்தில் எல்லோருக்கும் சாப்பாடு போட்டு கவனித்துக் கொண்டவர் அண்ணன்தான்.
என்னையும், என் மனைவியையும் உட்கார வைத்து சாப்பாடு போட்டவரும் அண்ணன்தான். அதன் பிறகு எங்கள் குடும்ப நெருக்கம் அதிகமானது.

நான் சினிமாவுக்குள் வந்த பிறகு, அந்த நெருக்கம் மேலும் இறுகியது. அன்னை சத்யாவை காணாமல் நான் இருக்க மாட்டேன்.
அதேபோல் அண்ணனின் தாயார் சத்யாவும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்.
அண்ணனும் எனது அன்னை ராஜாமணியை பார்க்காமல் இருக்க மாட்டார்.
ராஜாமணி அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்றால், தனது உடம்புக்கு பாதிப்பு வந்த மாதிரிதான் அண்ணன் இருப்பார்.
மற்றவர்கள் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால், அது தனது குடும்பத்து சிக்கல் போல் கருதி, அதனைத் தீர்க்க முயல்வார் அண்ணன் எம்.ஜி.ஆர்.”
இப்படி, தனது மனதில் உள்ள எம்.ஜி.ஆர். குறித்த மலரும் நினைவுகளை, சிவாஜி பகிர்ந்துள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி