கண்ணதாசன் பாடலுக்கு ‘நோ’ சொன்ன எம்.எஸ்.வி!

தமிழ் சினிமாவில் க்ளாசிக் ஹிட் பாடல்களை எடுத்துக்கொண்டால், அதிகமாக கண்ணதாசன் – எம்.எஸ்.வி கூட்டணியில் வெளியான பாடல்களை தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு, இசையும் பாடலும் இணைந்த இந்தக் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் கண்ணதாசன் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.

அதேபோல் இசையமைப்பாளர் – கவிஞர் என்பதைத் தாண்டி கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. இருவரும் ஒன்றாக அமெரிக்கா செல்வது, இசையமைக்கும்போது ஜாலியாக பேசிக்கொள்வது, என நெருங்கிய நட்பு பாராட்டி வந்துள்ளனர்.

கண்ணதாசன் முதன் முதலில் சினிமாவில் பாடல் எழுதிய திரைப்படம் கன்னியின் காதலி. ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்புராமன் ஆகிய இருவரும் இசையமைத்திருந்தனர்.

இந்தப் படத்தில் முதன்முதலாக பாடல் எழுத வாய்ப்பினை பெற்ற கண்ணதாசன், ‘’கலங்காதிரு மனமே’’, ‘’புவி ராஜா’’ என இரண்டு பாடல்களை எழுதி கொடுத்துள்ளார்.

இந்த இரண்டு பாடல்களும், எழுதி முடிக்கப்பட்ட பின் மெட்டு போடப்பட்டுள்ளது. ஆனால் 3-வது பாடல் மெட்டு அமைத்து அதற்கு பாடல் எழுதுமாறு கூறியுள்ளனர்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்த இந்த மெட்டை, அவரிடம் உதவியாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் வாசித்துக் காட்டியுள்ளார்.

இதற்காக பாடல் எழுத முயற்சித்த கண்ணதாசனுக்கு சரியாக வார்த்தைகள் அமையாத நிலையில், 3 நாட்களாக போராடியுள்ளார்.

ஆனால் இந்த புதுப்பையன் பாடல் எழுதி கொடுக்கவில்லை என்று யூனிட்டில் இருந்த அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதனால் இரவு பகலாக முயற்சித்து ஒரு பாடலை எழுதியுள்ளார்.

அந்த பாடல் தான் ‘’காரணம் தெரியாமல்’’ என்ற பாடல். இந்த பாடலை கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த எம்.எஸ்.விஸ்வநாதன், ‘’காரணம் தெரியாமல் உள்ளம் கலிகொண்டே கூத்தாடுதே’’ என்ற பல்லவியை வாசித்துப் பார்த்துவிட்டு, மெட்டுக்கு சரியாக பொருந்துகிறது.

ஆனால் அது என்ன கலி கூத்து என்று உள்ளது. இந்த வார்த்தைகளை மாற்றித் தாருங்கள் என்று கூறியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அப்போதைய முன்னணி கவிஞரான உடுமலை நாராயணகவி, ‘’காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே’’ இதை வாசி என்று கூறியுள்ளார்.

இதை வாசித்த எம்.எஸ்.வி சரியாக இருக்கிறது என்று சொல்ல, இதையே வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு, கண்ணதாசனிடம், “நீ எழுதிக்கொடுத்து அற்புதமாக தமிழ் வார்த்தைகள். ஆனால் அது இவர்களுக்கு புரியாது. அதனால் இவர்களுக்கு புரிகிற மாதிரி என்ன தேவையே அதை எழுதி கொடு. அப்போது தான் சினிமாவில் நீ பாடல் எழுத முடியும்” என்று கூறியுள்ளார். உடுமலை நாராயணகவியின் இந்த வார்த்தைகளை கண்ணதாசன் கடைசிவரை கடைபிடித்துள்ளார்.

– நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

You might also like