உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக சைகை மொழி!

காதுகேளாத வழக்கறிஞர் ஒருவர் சைகை மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பாளர் மூலம் வாதாடிய வழக்கை உச்சநீதிமன்றம் முதன்முறையாக விசாரித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் காணொளி காட்சி மூலம் நடைபெறும் மெய்நிகர் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் கட்டுப்பாட்டு அறை வழக்கறிஞர் சாரா சன்னிக்கு அனுமதி மறுத்துவிட்டது.

ஆனால், அவரது மொழிபெயர்ப்பாளர் சவுரப் ராய் சவுத்ரி அவரது இடத்தில் அனுமதிக்கப்பட்டார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பு காணொளி மூலம் ஆஜரான சவுரப் ராய் சவுத்ரி, சாரா சன்னியின் சைகையை மொழிபெயர்த்து வாதங்களை முன்வைத்தார்.

தலைமை நீதிபதி, நீதியை சமமாக அணுகுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு, மாற்றுத்திறனாளிகள் உச்சநீதிமன்ற நீதிமன்றத்திற்கு வரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு சாதகமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தலைமை நீதிபதி சந்திரசூட் இரண்டு மாற்றுத்திறனாளி சிறுமிகளின் வளர்ப்புத் தந்தையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தலைமை நீதிபதி சந்திரசூட் தனது இரண்டு மகள்களையும் தான் பணிபுரியும் உச்சநீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து வந்தார்.

அப்போது உச்சநீதிமன்றம் எவ்வாறு செயல்படுகிறது, அங்கு அவர் என்ன செய்கிறார் என்பதை தனது மகள்களுக்கு விளக்கினார்.

ஞாயிற்றுக்கிழமை, உச்சநீதிமன்றத்தின் குழந்தை பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதன்முறையாக சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பங்கெடுத்தனர்.

நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் பார்வையற்றோர் படிக்க உதவும் வகையில் முதன்முறையாக பிரெய்லி பதிப்பாக வெளியிடப்பட்டது.

உச்சநீதிமன்றம் குழந்தைகள் உரிமை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், பிற அரசுத் துறைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய மற்றும் மாநில அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

You might also like