‘றெக்கை முளைத்தேன்’ தலைப்பை வெளியிட்ட சசிகுமார்!

சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின்‌ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த இது கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபுவை வைத்து சத்ரியன், சசிகுமார் நடித்த கொம்பு‌ வெச்ச சிங்கம்டா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது முதல் முறையாக பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதல் படத்தை தானே இயக்கியும் உள்ளார்.

இப்படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ளார். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு “றெக்கை‌ முளைத்தேன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை நண்பர்கள், காதல் என்று குடும்பங்கள் கொண்டாடும் படமாக எடுத்துவந்த இவர் இப்படத்தை க்ரைம் த்ரில்லர் படமாக இயக்கியுள்ளார்.

இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் உடன் ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தலைப்பை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர்கள் சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், நடிகை மடோனா செபாஸ்டின், நடிகர் சூரி வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன், “சென்னை, மூணார், தேக்கடி, வாகமண் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கதாநாயகனை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுத்து வந்தேன். ஆனால் ஒரு எழுத்தாளராக நல்ல கருத்துள்ள கதைகளை‌ கதாநாயகர்களை மையபடுத்திய படங்களில் சொல்ல முடியவில்லை.

நல்ல கதைகளை தொடர்ந்து கமர்ஷியலாக பதிவுசெய்ய விரும்புகிறேன். அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நல்ல கதைகளையும் நிறைய புதுமுக இயக்குநர்களையும் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்த உள்ளேன்” என்றார்.

You might also like