தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை:

நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

எனினும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், பயன்படுத்துவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்துக்காக பயன்படுத்தப்படும் பாலீஸ்டைரீன் , தட்டுகள், கோப்பைகள், குவளைகள், கரண்டிகள், கத்திகள், உறிஞ்சு குழல்கள், மெல்லிய பிளாஸ்டிக் கொண்டு போர்த்தப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் இனிப்பு பெட்டிகள், அழைப்பிதழ் அட்டைகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி.பேனர்கள், கிளரிகள் ஆகிய பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் இந்த பொருட்களை இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல், வினியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவோர் மீது உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது.

You might also like