மக்கள் பார்வையில் சட்டசபை நேரலை நிகழ்வுகள்!

தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு எத்தனையோ சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் நடந்திருக்கின்றன.

எத்தனையோ பேர் தமிழக முதல்வர்களாகவும், சட்டமன்றத்தில் சபாநாயகர்களாகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்கள்.

ஆனால், அவை எல்லாவற்றையும்விட தற்போதைய தவெக ஆட்சி முழுக்க மாறுபட்டு சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பி அதை தமிழகமெங்கும் கோடிக்கணக்கானவர்களைப் பார்க்க வைத்து அவர்களுக்கான பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது.

சென்னையில் சாதாரண மார்க்கெட்டில் காய்கறி விற்கும் பெண்மணி துவங்கி தெருவில் பழம் விற்கும் வியாபாரிகள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், விவசாயப் பெருமக்கள் இவர்களையெல்லாம்விட அதிகமாக இளைஞர்களும் இளம்பெண்களும் மாணவர்களும் அதிகமாக சட்டமன்ற நேரலையை கவனித்து தங்களுக்கான ஒரு அரசியல் கருத்தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இவற்றை சர்வே என்றெல்லாம் கணக்கிடாமல் பொதுவாக இவர்களுடைய பேசுபொருள் என்னவாக இருக்கிறது என்று பார்த்தால், பலதரப்பட்ட ஆச்சர்யங்கள்.

முதன்முறையாக சட்டமன்றத்தில் கேள்வி கேட்கும் அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் பொதுமக்களுக்குத் தெரிய வந்திருக்கின்றன. அமைச்சர்களின் பெயர்கள் தெரிய வந்திருக்கிறது.

அதிகமாக குரல் எழுப்பிப் பேசியவர்கள் யார்? அநாகரீகமாக பேசியவர்கள் யார்? கையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தவர்கள் யார்?

சட்டசபையில் பெரும் சர்ச்சைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க சிரித்த முகத்துடன் காணப்பட்டவர்கள் யார்? பேசாமலே இருந்துவிட்டவர்கள் யார்?

உண்மையிலேயே மக்களுக்காகப் பேசியவர்கள் யார்? என்று அனைத்தையுமே சாதாரண பொதுமக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அந்த விதத்தில் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய் அறிவித்த அறிவிப்புகளும் சரி, சாதாரணமாகத் துவங்கி ஆவேசமாக நிறைவடைந்த அவரது பதிலுரையும் சரி பார்த்துக் கொண்டிருந்தவர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அதிமுக ஆட்சிக் காலத்தில் இதுவரை திமுகவை எதிர்த்து பலமுறை பேசப்பட்டிருக்கிறது. சர்க்காரியா ஊழல் உட்பட பல்வேறு ஊழல்கள் குறித்து எல்லாம் பேசப்பட்டிருக்கிறது.

சட்டசபைக்குள் அடிதடி சண்டை நடந்து, ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தியதும், கலைஞர் மீது தாக்குதல் நடந்ததும், எதிர்க்கட்சித் தலைவரான விஜய்காந்த் நாக்கைத் துருத்தி விரலை உயர்த்தி எச்சரித்ததெல்லாம் கடந்தகால சட்டசபை வரலாற்றில் நடந்திருக்கின்றன.

ஆனால், இதற்கு முன்பும் சுமார் 2 மணிநேரம் வரை கூட தமிழக முதல்வர்கள் பதிலளித்ததெல்லாம் நடந்த நிலையில், தற்போது முதல்வரான விஜய்யின் பேச்சு இந்தளவுக்கு வைரலானதுக்கு என்ன காரணம்? பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?

பொதுவாக புள்ளிவிவரத் தொகுப்பாக முதல்வர்களின் பதிலுரை இருந்துவந்த நிலையில், மிகவும் எளிமையாக சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் தங்களுக்கு முன்பு ஆட்சி செய்த திமுக குறித்து விஜய் முன்வைத்த ஆவேசமான கருத்துக்கள் பெரும் கவனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பது யதார்த்தம்.

அதிகம் படித்திடாத சாதாரண பெண்களைக் கூட விஜய்யின் பேச்சு கவர்ந்திருக்கிறது.

திமுக குறித்தும் கரூர் ‘கேங்க்’ குறித்தும் திமுகவின் முன்னணித் தலைவர்கள் கூட தனக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று சபிக்காத குறையாக பேசியது குறித்தும் பெண்களை இழிவாக பேசியது குறித்தும் பெருமளவில் இளைஞர்களையும் ஈர்த்திருக்கிறது. குடும்பப் பெண்மணிகளையும் ஈர்த்திருக்கிறது.

இந்த நேரலை ஒளிபரப்பை முதலில் வலியுறுத்தியது திமுக தான். ஆனால், அவர்கள் விரித்த நேரடி ஒளிபரப்பு வலையில் அவர்களே நேரடியாக விழுந்து, பிறரை பேசவிடாமல் கத்தி, சபாநாயகரை நோக்கி ஓடிவந்து முற்றுகையிட்டு தர்ணா செய்ததெல்லாம் நேரலையாக ஒளிபரப்பானதெல்லாம் திமுகவினருக்கு பெருமை சேர்க்கவில்லை.

அதிலும் திமுக கொறடாவான எ.வ.வேலுவே சேம் சைட் கோல் போடுகிற மாதிரி தனது கட்சி சரியில்லாததனால் தானே எங்களை எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்திருக்கிறார்கள் என்று பேசியதெல்லாம் நேரலையில் ஒளிப்பரப்பாகி தன்னைத்தானே வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டார்கள்.

அதேசமயம் பாமக எம்எல்ஏவான சௌமியா அன்புமணியின் பேச்சும், தொகுதி சார்ந்து யாரையும் தாக்காமல் பிரச்சனைகளை மட்டும் முன்வைத்த விதமும் பெண்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

அதைப்போலவே பெரிதும் கவனிக்கப்பட்ட இன்னொருவர் விசிக அமைச்சரான வன்னியரசு.

சட்டமன்றத்தில் தலித் மக்களின் நிலை குறித்து அவர் பேச முயன்றபோது, அதை திமுகவினர் எழுந்து கத்தி தடுக்க முயன்றபோது, இதுவே ஒருவித ஒடுக்குமுறைதான் என்று அவர் பதிலளித்ததெல்லாம் நேரலையாக ஒளிபரப்பாகியது, ஆதிக்க மனநிலை பரவலாக இருப்பதை வெளிக்காட்டியது.

தவெக அமைச்சர்களில் ராஜ்மோகன் போன்றவர்களின் பேச்சு செறிவாக அமைந்தாலும், மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி அவையினரையும் பார்வையாளர்களையும் அதிர வைத்தவர் பொதுபணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா.

திமுக தலைமை தன்னுடைய மாமானாரிடமிருந்து 900 கோடி ரூபாயை வாங்கியதா இல்லையா என்று கேட்டபோது, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் அதை மறுக்காமல், “அதை உங்கள் மாமனாரிடம் தான் கேட்க வேண்டும்” என்று சொன்னதில் துவங்கி,

இறுதி நாளன்று முன்னாள் அமைச்சரான எ.வ.வேலு 2000 கோடி ரூபாயை முன் கூட்டியே வாங்கி பயன்படுத்தியது குறித்து பேசியதெல்லாம் சிவகாசி பட்டாசு ரகம் என்றுதான் பொதுமக்களின் பார்வையில் போய் சேர்ந்திருக்கிறது.

தெரிந்தோ தெரியாமலோ நேரலை ஒளிபரப்புக் குறித்து திமுக எடுத்த முடிவு திமுகவுக்கே சறுக்கலை ஏற்படுத்தி தவெக மீதான ஆதரவை பலப்படுத்தியிருக்கிறது என்பது தான் பரவலான பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.

இனி வர இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவு இதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமையலாம்.

– லியோ

You might also like