நாகேஷ் என்ற கலைஞனை செதுக்கிய கே.பி எனும் சிற்பி!

”எதையும் மிகைப்படுத்திப் பேசப் பிடிக்காது. ஆனா, நாகேஷ் மாதிரி ஒரு கலைஞனை மிஞ்சுற ஆள் இந்தியாவிலேயே இல்லைனு சொல்வேன்.
 
அந்த மாபெரும் கலைஞனுக்கு பத்மஸ்ரீ பட்டம்கூடக் கிடைக்கலையேங்கிறது என்னோட மிகப் பெரிய ஆதங்கம்!” – வருத்தத்தில் துடிக்கிறது இயக்குநர் பாலசந்தரின் குரல்.
 
நாடகத் துறையின் மீது நாகேஷ் கொண்டிருந்த அதீத பாசத்தை விவரிக்கிறார் பாலசந்தர்.
 
”என்னோட ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் அப்போ ஏக பிரசித்தம். டி.கே.சண்முகம், நாகேஷ் எல்லாரும் ‘மேஜர் சந்திரகாந்த்’ பத்தி எல்லார்கிட்டயும் பெருமையாப் பேசினாங்க.
 
‘இனிமே துண்டு துக்கடா வேஷத்தில் நடிக்க விரும்பலை. உங்களோட இயக்கத்தில் நான் நடிச்சே ஆகணும்’னு சொன்னார் நாகேஷ்.
 
தினமும் மாலை அவர் என்னைப் பார்க்க வரும் நேரம்தான் எனக்கு டீ டைம்.
 
‘ஏதோ ஒரு கேரக்டரைக் கொடுக்க முடியாது. உன்னை மனசுல வெச்சு தனியா கதை பண்ணினால்தான் உண்டு. அதனால, நீ கொஞ்ச காலம் காத்திரு’னு சொன்னேன்.
 
அப்போ ஸ்ரீதருடைய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ரிலீஸாகி, ஓவர் நைட்ல நாகேஷ் ஃபேமஸ் ஆகிட்டார்.
 
அப்புறம் அவர் என்னைப் பார்க்க வரும்போது எல்லாம் கூட்டம்கூடிரும். சினிமாவில் பிரபலமான பின்னும் என் நாடகத்தில் நடிக்கணும்னு தீவிரமா இருந்தார். அவருக்காகவே நான் உருவாக்கியது தான் ‘சர்வர் சுந்தரம்’ நாடகம்.
 
அந்தநேரம் பார்த்து ‘காதலிக்க நேரமில்லை’ ரிலீஸ். நாகேஷ் பெரிய காமெடியனா உருவாகிட்டார். எனக்குப் படபடப்பு ஆகிருச்சு. காரணம், ஒரு காமெடியனா நாகேஷ் சினிமாவில் ஜெயிச்சிருக்கும்போது ‘சர்வர் சுந்தரம்’ நாடகம் எப்படி எடுபடும்கிற தயக்கம்.
 
நாகேஷ் அழுவுற ஸீன்லகூட மக்கள் சிரிச்சிடுவாங்களேங்கிற பயம். ஆனாலும், நாகேஷ், ‘அப்படி எல்லாம் நடக்காது பாலு. நாடகம் நிச்சயம் ஹிட் ஆகும்’னு நம்பிக்கையா சொல்லிட்டு இருந்தார்.
 
தயக்கமும் பயமுமா நாடகம் முடிஞ்சப்ப, பெரிய ரெஸ்பான்ஸ். ”நான் உங்களுக்குத் தைரியம் சொன்னேனே தவிர, எனக்கும் பதற்றம்தான்.
 
கைத்தட்டலைப் பார்த்ததுக்கு அப்புறம்தான் பதற்றம் போச்சு”னு சொன்னப்ப, நாகேஷ் முகத்தில் அப்படி ஓர் உருக்கம்.
 
“நாம் எதிர்பார்க்கிறதைக் காட்டிலும் அதிகமாகச் செய்து அசத்துவதில் நாகேஷை மிஞ்ச ஆளே கிடையாது!” – பாலசந்தரின் வார்த்தைகளே நாகேஷின் நடிப்புக்கான பதக்கங்கள்.
 
நன்றி: விகடன்.
You might also like