நிராகரிப்புகளை சமாளிப்பது எப்படி?

நடிகர் மனோஜ் பாஜ்பாய் விளக்கம்

நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். போன்ஸ்லே உட்பட இரண்டு படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

நான்கு பிலிம்பேர் விருதுகளையும் பெற்ற இவர்,  2019-ம் ஆண்டில், கலைக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த பத்மஸ்ரீ அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தனது திரைப்பயண அனுபவம் பற்றியும் நடிப்புத்திறன் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்ட நேர்காணல்.

#நிராகரிப்புகளை எப்படி சமாளிப்பது?

எத்தனை முறை நிராகரிக்கப்பட்டாலும் கவலைப்பட வேண்டாம். திரைத்துறையை விட்டு விலகி விடலாம் என்ற ஆப்ஷனை கண்டிப்பாக எண்ண வேண்டாம்.

மீண்டும் மீண்டும் முயற்சிப்பதற்கான ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். நிராகரிக்கப் பட்டோம் என்பதற்காக கனவை/இலட்சியத்தை விட்டுப் போக முடியுமா?

அதில்லாமல் யாரோ ஒரு நடிகர்/கலைஞர் வருவார் என்று எந்தத் துறையும் காத்திருப்பதில்லை.

நடிகர்களும் கலைஞர்களும் எண்ணிக்கையில் எக்கச்சக்கம். கடுமையான போட்டி இருக்கும். நிராகரிப்பு கண்டிப்பா இருக்கும்.

நிராகரிக்கப்பட்டால் இன்னும் கூடுதலாக தயார் செய்து கொண்டு போகவேண்டும். நிராகரிக்கவே முடியாத அளவுக்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

நடிப்பு பற்றிய தியரிகள், புத்தகங்கள், இன்னும் பல மேதைகள் எழுதியிருப்பதை சொல்லியிருப்பதை வாசிக்க விருப்பம் இருந்தால் வாசியுங்கள், பின்பற்ற விருப்பமிருந்தால் பின்பற்றவும் செய்யுங்கள். ஆனால் அது கட்டாயம் இல்லை. அப்படியானவைகள் உங்களைக் குழப்புவது போல் இருந்தால் தூக்கி வீசுங்கள்.

கொஞ்சம் வெற்றியைக் கண்டவர்கள் நடிப்பு என்றால் என்ன தெரியுமா என்று கதையளப்பார்கள் பயம் வேண்டாம். நானும் அதை செய்வதாக நினைக்க வேண்டாம்.

உங்களுக்கான தனித்துவத்தை மட்டும் கொண்டிருங்கள் என்றும், தயங்காமல் திரைத்துறைக்கு வாருங்கள் என்றும்தான் சொல்கிறேன். என்னை நம்பலாம்.

குறைந்தது நான்கு ஆண்டுகளாவது ஒரு நடிகர் போராட வேண்டும். பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். வாசிக்க வேண்டும்.

ஒரு கேப்ஷூலை விழுங்கிக் கொண்டு உருமாறி வெற்றிக் கண்டு விட முடியும் காரியம் அல்ல நடிப்பு. ஒரு நிராகரிப்பு, நூறு நிராகரிப்புகள் இதெல்லாம் கணக்கு இல்லை.

பின்காலத்தில் நடிப்புக்காய் ஒரு விருது, நூறு விருதுகள் கொடுத்தால் மறுப்பீர்களா? அப்படித்தான். நாளை பாராட்டுகளை கணக்கில்லாமல் பெற்றுக் கொள்ள நினைக்கும் நடிகர் இன்று நிராகரிப்புகளை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.

உங்களுக்கு இந்தத் துறை மீது ஆசையோ பேராசையோ இருந்தால் கண்டிப்பாக எது நடந்தாலும் விட்டு விலகவே மாட்டீர்கள்.

நாடகம், குறும்படம், திரைப்படம், வெப்சீரிஸ் என்று பல வகையான பிரிவுகளில் பணியாற்றும் போது எப்படியான சவால்களை உணர்கிறீர்கள்?

இவை எல்லாமும் ஒரு மீடியம் தான் நாடகத்தை தவிர்த்து எல்லாவற்றிலும் கேமராதான் மீடியமாக இருக்கிறது. நாடகத்தில் கேமரா இல்லை, ஆனால் நான்காவது சுவரை நடிப்பால் தான் உருவாக்க முடியும். சினிமாவில் நான்கு சுவர்களும் உள்ளன. பதிவும் ஆகின்றன.

மீடியம் எதுவாக இருந்தாலும் சரி நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். நடித்தாக வேண்டும். அதை சிறப்பாகச் செய்யுங்கள். அவ்வளவுதான். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்ய உண்மையாக இருங்கள்.

என்னுடைய முதல் படம் ”பண்டிட் குயின்” படப்பிடிப்பின் போது அதன் இயக்குனர் சேகர் கபூர் அவர்களிடம் போய் அடுத்து என்ன மாதிரியான ஷாட்.? Close up அல்லது medium shot எப்படியான ஷாட்? என்று கேட்டு எரிச்சல் படுத்தியிருக்கிறேன்.

ஏன் இப்படிக் கேட்கிறாய் என்று அவர் கடிந்து கொள்வார். Medium shot என்றால் நான் வேறு மாதிரியாக நடிக்க வேண்டும் இல்லையா என்றேன். நீ நாடகத்தில் எப்படி நடித்தாயோ அப்படியே நடி. கேமராவுக்காக நடிக்க வேண்டாம். இந்தக் கதாபாத்திரம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய். மற்ற வேலைகளைச் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்றார்.

#நீங்கள் நடிகனாக வேண்டும் என்று வந்த பின்னர் அன்றாட நிராகரிப்புகளை தாங்கிக் கொண்டு சுயமாக எப்படியான பயிற்சியில் ஈடுபட்டீர்கள்?

நாடக காலகட்டத்தில் ஒரு நடிகனாக பார்வையாளர்களுக்காக எதையும் செய்வதைக் காட்டிலும் எங்களுக்காக பலதை செய்து கொள்வதுண்டு.

நான் நாடக படிப்பை முடித்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வந்துவிட்டப் பின்னர், வாய்ப்புகளுக்காக மும்பைக்கு வந்தேன். மும்பையில் நாடகங்கள் பார்க்குப் போது, நடிகர்கள் பார்வையாளர்களை மகிழ்விக்க என்னென்னமோ செய்து கொண்டிருந்தார்கள்.

நாடகமும் பார்வையாளர்களுக்காகவே எழுந்தப் பட்டிருப்பதாக உணர முடிந்தது. அல்லது பெரும்பான்மையான காட்சிகள் பார்வையாளர்களை கவனத்தில் கொண்டே எழுதப் பட்டிருந்தது புரிய வந்தது.

என்னால் இப்படியான நாடகங்களில் ஈடுபடுத்திக் கொள்ள முடியாது என்று உறுதியாக நம்பினேன்.

நான் ஒரு சிறுகதையை எடுத்துக் கொள்வேன். எனக்குப் பிடித்த அந்த சிறுகதையை மனப்பாடம் செய்து கொள்வேன். ஆறு, எட்டு அல்லது பத்து பக்கங்களாக இருந்தாலும் சரி, அதை மனப்பாடம் செய்து கொள்வேன். பின்னர் அதை தினமும் நடித்துப் பயிற்சி செய்வேன்.

சில நேரம் அந்தக் கதையின் சூத்திரதாரியாக, சில நேரம் அதிலுள்ள கதாபாத்திரங்களாக ஆகி விடுவேன். இப்படியாக அந்தக் கதை ஒரு நாடகம் போல் உருவாகி விடும். அரைமணி நேர நாடகம் போல் ஆகி விடும்.

இப்படியான பயிற்சி காலங்களின் போது வீட்டிற்கு வரும் நண்பர்களிடம் அந்த சிறுகதையை நடித்துக் காட்டி கருத்து கேட்பதுண்டு.

நான் நடிக்கிறேன் என்று சொன்னதும் கொஞ்சம் மிரண்டு போகும் நண்பர்கள் நான் நடிக்கத் துவங்கியதும் என் நடிப்போடு அவர்கள் பயணப் படுகிறார்கள்.

அவதானிக்கிறார்கள். பின் பேசிக் கொண்டிருக்கும் போது என் நடிப்பைப் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் குறைகளையும் சுட்டிக் காட்டிப் பேசுகிறார்கள்.

இப்படித்தான் நான் போராடிக் கொண்டிருந்தேன். நிராகரிப்பு என்ற வார்த்தையெல்லாம் எங்கேயும் கொண்டு சேர்க்காது.

நான் டீயும் வடையும் சாப்பிட்டு வாழ்கிறேன். வாடகைக்கு பணமில்லை. நல்ல சாப்பாடு இல்லை என்பதெல்லாம் போராட்டம் ஆகாது.

கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வளர்த்து வைத்திருக்கிறேன் என்பதெல்லாம் கூட பெரிதாய் உதவாது. முடி வளர்த்துக் கொள்ளுதல் கெட்டப்புகளை மாற்றிக் கொள்ளுதல் கூட பயனளிக்காது.

பணமில்லை என்பதற்கும் கலைஞாக ஆவதற்கும் கொஞ்சம் தொடர்பில்லை. யாரிடம் தான் போதிய அளவு பணமிருக்கிறது. யாரிடமும் அவர்களின் தேவைக்கான பணமில்லை. அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கலைஞாக ஆக விரும்பி இயல்பான வாழ்க்கையை விட்டு வெளியே வந்தவர்களுக்கு இப்படியான வாழ்வாதாரப் பிரச்சனைகள் பெரிதானது அல்ல. அதைப் பற்றி வெற்றி பெற்ற பின்னரும் கூட சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

அடிப்படை வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுவது புதிதானது அல்ல. செய்ய வேண்டியது முயற்சிகள் தான். கடுமையான முயற்சி. மேலும் முயற்சிகளில் வெற்றி பெற தன்னைத்தான் தயார் செய்து கொள்ளும் பயிற்சிகள். சுயமாக பயிற்சிகளில் ஈடுபடாதவர்கள் செய்யும் முயற்சிகள் கண்டிப்பாய் வெற்றி இலக்கில் கொண்டு போய் நிறுத்தாது.

நடிப்புக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும், போட்டி உலகில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கவும், திறமைகளை நிரூபிக்கவும் செய்யும் ஆயத்தங்கள் தான் புதிதாக இருக்கும்.

கலைஞனாக கண்டிப்பாய் தனியாக இருந்துதான் பயிற்சிகளையும் முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

இலட்சங்கள், கோடிகள் என்று பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதைச் சொல்லிக் கொடுக்கவும் அதற்கு வழிகாட்டவும் வர்த்தக நிறுவனங்களும் நிபுனர்களும் ஏராளமாக இருக்கிறார்கள் அவர்களிடம் போய் சேருங்கள்.

நான்கு நண்பர்கள் கூடும் இடத்தில் நடித்துக் காட்டுங்கள். ஒரு மேடை ஐந்து நிடத்திற்கு காலியாக இருப்பதை அறிந்தால் அனுமதியோடு ஏறி விடுங்கள். அனுமதி இல்லாமல் ஏறியும் கைத்தட்டல் வாங்கிக் கொண்டு திட்டு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வாய்ப்புகளை விடாதீர்கள்.

இயக்குனர் மகேஷ் பட் அவர்களை சந்திக்கும் போதெல்லாம் நான் நடித்துக் கொண்டே இருப்பேன்.

அவரும் ஆமாம் நீ நல்ல நடிகன் என்றுத் தெரியும் அதை இத்தனை முறை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, நீ நல்ல நடிகன் என்று என்னை இன்னும் எத்தனை முறைதான் சொல்ல வைப்பாய் என்று சலித்துக் கொள்வார். நான் சலித்துக் கொள்ள மாட்டேன்.

#நீங்கள் கலைப்படங்கள் மற்றும் வணிகப் படங்கள் இரண்டிலும் நடித்திருக்கிறீர்கள், இதற்கு எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள்?

உலகத்திலேயே இந்தியாவில் மட்டும்தான் இப்படியொரு கேள்வியையே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இரண்டு வகை இல்லை எனலாம். ஆனால் இருப்பது போல் ஒரு மாயையை உண்டாக்கி விட்டதனால் நாங்களும் கொஞ்சம் கூடுதலாக நடித்தும் விளக்கம் சொல்லியும் சமாளித்துக் கொண்டிருக்கிறோம்.

நடிகர் அமிதாப் பச்சன் அவர்களை திரையில் பார்த்து அவரைப் போல சிறந்த நடிகனாகவும் கொண்டாடப்படும் நட்சத்திரமாகவும் ஆக வேண்டுமென்று பேராசைக் கொண்டது உண்டு.

இந்தப் பேராசைக்காக செய்த படங்களை வேண்டுமானால் வணிகப் படங்கள் என்று தனிப்பட்டியல் இட்டுக் கொள்ளலாம்.

நடிகர் அபிதாப் பச்சன் அவர்கள் பல மோசமான காட்சிகளையும் தன் நடிப்பால் சிறப்பாக்கி உள்ளார். மக்களை பார்த்து ரசிக்க வைத்துள்ளார். அப்படிச் செய்ததற்காக அவர் வருந்தவில்லை. ஆனால் அவர்தான் இன்னும் பல தலைமுறைகள் பார்த்துக் கற்றுக் கொள்ளும் படியான நடிப்பையும் வழங்கியுள்ளார்.

அவரைப் பார்த்து சினிமாவுக்குள் வந்த நாங்களும் அப்படிச் சில தடுமாற்றங்களை சந்தித்து உள்ளோம். ஆத்மதிருப்தியாக பல படைப்புகளில் பணியாற்றியும் உள்ளோம்.

வணிகம் – கலை இரண்டிலும் எனக்கு சம பங்கு உண்டு. ஒரு நடிகனாக எனக்கு அதன் வேறுபாடுகளும் அதற்கான ஆயத்தங்களிலும் பெரிய மாற்றமுமில்லை. இரண்டிலும் முழு ஈடுபாட்டுடனே நடிக்கிறேன்.

# ஒரு கதாபாத்திரத்திற்கு தயார் செய்கையில் மிகவும் சிரமமாக கருதிய பாத்திரம் எது?

Gangs of Wassepur திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பின்னர் கடுமையாக குழம்பினேன். ஸ்கிரிப்ட்டை பலமுறை வாசித்தப் பின்னரும் எனக்கு பெரிதாக ஒரு தெளிவு இல்லை.

அந்தக் கதாபாத்திரம் ஒரு கேங்ஸ்டர் போல தெரியவில்லை. ஒரு கேனயனைப் போல் தான் இருந்தது. அவன் ஒரு அரைவேக்காட்டு கிரிமினல் போலத்தான் எனக்கு புரிந்தது.

எல்லோரும் அந்தப் படத்தைப் பற்றி பேசத் துவங்கி விட்டார்கள். ஆனால் அந்தப் பாத்திரத்தில் எப்படி நடிப்பது என்று எனக்கு தெளிவு இல்லாமல் இருந்தது.

மீண்டும் ஸ்கிரிப்ட்டை வாசித்தேன். நடிகர்களுக்கான பயிற்சிகளும் நடந்தது. எனக்கு பயம் கூடிக் கொண்டிருந்தது. அப்பொழுது அப்படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யாப் ரீமா சென் அவர்களை ஆடிஷன் செய்யப் போவதாகவும் என்னையும் கூட வரும்படியும் அழைத்தார்.

உங்களைப் பார்த்தால் ரீமா சென் தயங்கக் கூடும் நீங்கள் மறைந்திருங்கள், கூப்பிட்டதும் வாருங்கள் என்று என்னை ஓரமாக நிற்க வைத்தார். ரீமாவை துணி துவைப்பது போல நடிக்கச் சொல்லிவிட்டு, என்னை அழைத்து ரீமாவை சைட் அடிக்கச் சொன்னார்.

அப்பொழுதுதான் எனக்கு அந்தக் கதாபாத்திரம் பிடிபட்டது. அப்பாத்திரம் கடுமையானவன் என்பதையும் தாண்டி ஒரு கிளுகிளுப்பான ஆசாமி என்று புரிந்து கொண்டேன் பின்னர் என் வசனங்களைப் பேச எனக்கு ஒரு பிடி கிடைத்தது.

சொல்லி அடிப்பேன் – சொல்லி அடிப்பேன் என்று சொல்லிக் கொண்டு, கடைசியில் குண்டு பட்டு செத்துப் போகும் ஒரு கேங்ஸ்டர்.

# நீங்கள் பார்த்து வியந்த நடிகர்கள் யார்?

நியூட்டன் திரைப்படத்தில் பங்கஜ் திரிப்பாட்டி. அனார்கலி திரைப்படத்தில் சஞ்ஜய் மிஷ்ரா நடித்தப் பாத்திரத்தில் முதலில் என்னைக் கேட்டார்கள். ஆனால், சஞ்ஜய் போல் ஒரு நடிகரைப் பார்க்கவே முடியாது. நவாஸுதின் நடிப்புக்கு இணையாக இனி ஒருவர் வரமுடியும் என்று தோன்றவில்லை. இர்ஃபான் கான் நடிப்பைப் பற்றி உலகமே பேசியது, அப்படியொரு நடிகர்.

கே.கே. மேனன் என்ற ஆகச் சிறந்த ஒரு நடிகனை இன்னும் இந்திய சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பேன். அதே போல் நீரஜ் கபியும் மிகச் சிறந்த நடிகர். இவர்களைப் போல் நடிகர்களுக்கு மத்தியில் நான் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

# திறமையும் ஆர்வமும் இருக்கிறது ஆனால் எப்படி அதை வெளியில் தெரியப் படுத்துவது?

நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். நண்பர்களைப் போல் உதவ வேறு யாரும் இருக்க மாட்டார்கள். நண்பர்களிடன் உங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள். அவர்களைக் கடந்து செல்லும் வாய்ப்பு பற்றி கண்டிப்பாக உங்களுக்கு தகவல் சொல்வார்கள்.

நடிப்புப் பயிற்சி விஷயங்களுக்கு பக்கத்து வீடுகளில், பொழுது போகாமல் போக்க வழியில்லாமல் பணி ஓய்வு பெற்ற மனிதர்களை இழுத்துக் கூட்டி வந்து உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து நடித்துக் காட்டுங்கள்.

செய்தித்தாள்களை வாசியுங்கள். எப்படியாவது வாசியுங்கள். வாங்கி வாசிக்க முடியாவிட்டால் ஆன்லைனில் வாசியுங்கள்.

நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மேலும், ஒரு செய்தியிலிருந்து ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்யுங்கள். ஒரு நாள் முழுவதும் அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து அதுபற்றியே யோசித்துக் கொண்டிருங்கள்.

பியூஷ் மிஷ்ரா இப்படித்தான் செய்வாராம். அவரிடமிருந்து நானும் இதை கற்றுக் கொண்டு பயிற்சி செய்திருக்கிறேன். இன்னும் செய்து வருகிறேன்.

ஒரு நாள் முழுவதும் நீங்கள் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்வது எவ்வளவு பெரிய பயிற்சி. கண்டிப்பாக இதைச் செய்து பாருங்கள். மேலும் இந்த பயிற்சி ஒழுக்கம் உங்களை சிறப்பாக வளர்த்து விடும்.

– மதியழகன் சுப்பையா

You might also like