மீட்டெடுக்கப்படுமா மகாபாரதக் கதை சொல்லல்?!

திரெளபதி அம்மன் கோயில் திருவிழா வந்துவிட்டுப் போங்கள். என்னை அன்புடன் அழைத்தவர் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற பெரியவர் சந்திரசேகரன். ஊர்: பூநெய்த்தாங்கல். மக்கள் பூனைத்தாங்கல் என்கிறார்கள். காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமம்.

போரூர் டு காஞ்சிபுரம். குன்றத்தூர், நந்தம்பாக்கம் வழியாக திருப்பெரும்புதூர். அங்கிருந்து ஏனாத்தூர் வழியாக காஞ்சிபுரம். இரண்டு மணி நேரத்திற்குள் சென்றுவிட்டேன். பேருந்துகளும், கனரக வாகனங்களும் பரபரப்பாக விரையும் தேசிய நெடுஞ்சாலை. நான் நிதானமாகவே சென்றேன்.

கோடை மழையில் சாலையோரம் பசுமை கூடியிருந்தது. வறட்சி தெரியாமல் ஏதேதோ செடிகள் முளைத்திருந்தன. மழை வருவது மாதிரியும் இருந்தது. வானம் மூடி மெல்ல திறந்து வெயில் காட்டியது.

காலை 10.30. திரெளபதி அம்மன் கோயிலில் தெருக்கூத்துக் கலைஞர்கள் பாடல் பாடி பூஜைகள் செய்யப்பட்டன. பல பெண்கள் சாமியாடினார்கள். எல்லாம் முடிந்து மதியம் 1.30 மணிக்கு மக்களுக்கு பிரசாதம் கொடுத்தார்கள்.

மெல்ல மழைத் தூறல். மதியம் 2.30 மணிக்கு பாரதம் கதை சொல்லல் நிகழ்வு. திறந்தவெளியில் ஒரு புளியமரத்தடியில் நான்கைந்து பெஞ்சுகள்தான் மேடை. பின்னே ஒரு திரைச்சீலை. சிறிய பந்தல். அதிகபட்சம் 50 பேர் வந்திருப்பார்கள்.

பாரதம் கதை சொல்லவந்திருந்தார் உலகநாதன். தெருவில் இருந்து அவரை மேள தாளங்களுடன் மேடைக்கு அழைத்து வந்தார்கள். எனக்குப் புதிய அனுபவம். எங்க ஊர்ப்பக்கம் கூத்தும் கதை சொல்வதும் கிடையாது. திருவிழா என்றால் கரகாட்டம், நாடகம் நடக்கும். அதுவும் இப்போது மாறிவிட்டது.

ஊர்க்காரர்கள் கதை சொல்லிக்கு மாலையும் பொன்னாடையும் அணிவித்து மரியாதை செய்தார்கள். பாடல்களுடன் மகாபாரதம் கதையைச் சொல்லத் தொடங்கினார். அது பெரிய கடல். எனக்குக் கிடைத்த நேரத்தில் சுருக்கமாகச் சொல்கிறேன் என்றார்.

கதையை ஆரம்பிக்கையில் மைக் மக்கார் செய்தது. கதை சொல்பவர் கோபமானார். எப்படியோ சரி செய்தார்கள். மீண்டும் பாட்டும் கதையுமாக பாரதம் சொல்லத் தொடங்கினார். கூடவே சிறு தூறலும் தொடங்கியிருந்தது.

மக்கள் ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கியிருந்தார்கள். மழையைப் பற்றி கவலைப்படவில்லை. எனக்கு கவலைதான். மாலை 4 மணிக்கு வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டேன். வாலாஜா, ஓரகடம், படப்பை வழியாக சென்னை.

இருள் மலரும் மாலையில் மனசுக்கு இதமான வழித்தடமாக இருந்தது.

வீடு வந்துசேரும் வரை பெருமழையை காட்டாமல், பிழைத்துப்போ என வானம் என்னைக் காப்பாற்றியது.

– சுந்தரபுத்தன்

You might also like