நூல் அறிமுகம்:
‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’. 2006-ம் ஆண்டில் இந்த புத்தகம் வெளிவந்த போது இருந்த காலகட்டத்திற்கும் தற்போதுள்ள நிலைக்கும் சமுதாயத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்ட போதும் இன்றுவரை இந்தியாவில் திருமணம் முடிந்ததிலிருந்து பெண் ஆணுக்கு சமைத்துபோடவேண்டும் என்பது எழுதப்படாத விதியாய் தான் இருந்துகொண்டு வருகிறது.
இன்று பல ஆண்கள் (சில வேளை குழந்தைகள் கூட) தனக்கு விருப்பமான உணவை தானே யூ டியூப் பார்த்து சமைக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், இந்தப் புத்தகத்தின் கருத்து பலருக்கு நகைச்சுவையாக இருக்கலாம்.
ஆனால், இதுவெறும் சமையல் குறிப்பு புத்தகமன்று, கற்காலத்தில் மனிதன் உணவை சமைக்க தொடங்கியதிலிருந்து அது எப்படி பெண்கள் மட்டுமே செய்யும் விஷயமானது என்பதுவரை தெளிவாக எடுத்துரைக்கிறது.
போர்த்துகீசியர்கள் நம் உணவு முறையில் கொண்டு வந்த மாற்றங்கள் பற்றியும் நகைச்சுவையான தொனியில் சொல்கிறது அதையெல்லாம் வாசித்து ரசித்துக் கொள்ளுங்கள்.
காலையில் எழுந்ததும் செய்தி தாள் பார்த்துக்கொண்டே, “எட்டி காப்பி கொண்டா” என்று கேட்கும் ஆண்களில் ஒரு ஐந்து சதவீதம் பேராவது, நாம் சமைத்தால் இல்லாளின் சுமை குறையும் என்பதை யோசித்துப் பார்க்கவும், குறைந்த பட்சம் அவர்களின் கஷ்டங்களை அறிந்துகொள்ளவாவது அவசியம் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும்.
“நான் சமைக்க மாட்டேன்…. என்னை விட்ருங்க” என்று ஓடும் ஆண்களை விக்ரமாதித்தன் எப்படி வேதாளத்தை பிடித்துக் கொண்டு வருவானோ, அப்படிப் பிடித்து இழுத்து வைத்து சமையல் பட்டறைகளை நடத்தி அவர்களையும் சமைக்க வைக்க வேண்டும் என்பது தான் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் அவா.
அப்படி ஒரு சமையல் பயிற்சிப் பட்டறை நடக்கும்போது, அங்கு ஆசிரியர் பேசினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனையை “முன்னுரைக்கு பதில்..” என்று எழுதி இருக்கிறார்.
அதில் தெறிக்கும் நகைச்சுவையில் சிரித்து சிரித்து எனக்கு வயிறு வலித்தே விட்டது.
ஆண்கள் சமைப்பதால் மட்டும் பெண்களின் நிலை மாறிவிடுமா என்று கேட்பவர்களுக்கு லெனின் சொல்கிறார், “நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலைப் பெறாமல் பூரண மனித குல விடுதலை சாத்தியமில்லை” என்று.
நிஜம் தானே வீட்டில் கணவரும் குழந்தைகளும் சாப்பிடாமல் இருப்பார்கள் என்று தெரியும்போது எப்படி ஒரு பெண்ணால் நிம்மதியாக தன் வேலையில் கவனம் செலுத்த முடியும்?
அரிசியை யார் சமைத்தாலும் சோறாகும் தானே. இன்னும் சொல்லப் போனால், கல்யாண வீடுகளிலும் பெரிய பெரிய ஹோட்டல்களிலும் ஆண்கள் தான் சமைக்கின்றனர் எனும்போது வீட்டில் மட்டும் எப்போதுமே பெண்கள் தான் சமையல் வேலையை செய்ய வேண்டுமா என்ன?
பெண்ணியம் பற்றி வாய்க் கிழிய மேடைகளில் பேசுவதைவிட வீட்டில் அவர்களின் சுமைகளைக் குறைப்பதன் மூலம் அவர்களுக்கான விடுதலையுணர்வையும் பிடித்ததை செய்யக் கூடிய சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்பதையே இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது.
இன்று எத்தனையோ வகை பிரியாணிகள் வந்துவிட்ட போதும் என் சின்ன வயதில் மணி மாமா (தோழியின் அப்பா) செய்யும் பிரியாணிக்கு நான் அடிமை.
அதில் அப்படி என்ன விசேஷமாய் சேர்த்திருப்பார் என்று யோசித்ததுண்டு. ஆனால், ஒன்றுமே பெரிதாய் இல்லை. அது விசேஷமானது என்று நாங்கள் நம்புவதால் மட்டுமே அது அவ்வளவு ருசியானதாய் இருந்தது.
அரிசி களைவது, கீரை கடைவது பற்றியெல்லாம் இதில் எழுதி இருந்ததை வாசித்தபோது அந்த நாட்களில் ஆச்சிக்களும் அம்மாகளும் அதை செய்யும்போது ரசித்து பார்த்தது நினைவில் வந்தது.
கிரைண்டர் வராத நாட்களில் ஆட்டுரலில் ஒருவர் ஆட்டுக்கல்லை பிடித்து ஆட்ட, இன்னொருவர் மாவை தள்ளிவிட்டு கதை பேசிக்கொண்டே மாவரைத்த சின்ன வயது நாட்கள் எல்லாம் படம் போல் வந்து போனது.
இது அந்த நாட்களில் தம்பதியருக்குள் ஒரு சுவாரஸ்யமான வேலையாக அறியப்பட்டிருந்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
இப்போதெல்லாம் எல்லாமே பெரும்பாலும் தோல் நீக்கப்பட்டே வந்துவிடுவதால் சமைத்தல் வெகு சுலபமாகி விட்டது என்றே கூறலாம்.
தம்பதிகள் இணைந்து சமையல் வேலையை செய்யும்போது அவர்களுக்குள் இருக்கும் நேசம் அதிகரிக்குமென்கிறார் ஆசிரியர். இது நூற்றுக்கு நூறு நிஜம் என்றே நானும் நம்புகிறேன்.
ஆண்கள் சமைப்பதைவிட மிக முக்கியமான ஒன்று அவர்களை சமைக்க அனுமதிப்பது. பல வீடுகளில் பெண்களே இது எங்களுக்கான வேலை நீங்கள் உள்ளே வராதீர்கள் என்று தடுத்து விடுகிறார்கள்.
அதனால் அவர்களும் இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் தங்கள் மனங்களை விசாலப்படுத்தி கொள்ளுதல் மிக அவசியம்.
- இந்துமதி கணேஷ்
******
நூல்: ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது!
ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்
வாசல் வெளியீடு
பக்கங்கள் : 107