தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தத் தேர்வெழுத 8 லட்சத்து 2,568 பள்ளி மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறை கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.21 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். இதில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 83 முகாம்களில் ஏப்ரல் 4-ல் தொடங்கி 17-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மேலும், இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன.
இதற்கிடையே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால் ஒருநாள் முன்னதாக இன்று வெளியிடப்பட்டது.
சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை காலை 9 மணிக்கு வெளியிட்டார்.
அதன்படி, 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ, மாணவிகளில், 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளதாக அவர் அறிவித்தார்.
இந்த ஆண்டும் வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 93.16 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகளில், 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, 96.70 சதவீத மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மாணவி ஓவியஞ்சலி 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.