கோடிக்கணக்கில் சம்பாத்தியம்.. சில படங்கள் தயாரிப்பு.. சரிந்து போன பிஎஸ் வீரப்பா..!

ஒரு சில நடிகர், நடிகைகளை தவிர பெரும்பாலான நட்சத்திரங்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை சொந்த படம் எடுத்து இழந்து அதன்பிறகு நடுத்தெருவுக்கு வந்த கதைகள் பல பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் பி.எஸ்.வீரப்பா கடந்த 1950 முதல் வில்லனாக படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்தார். ஆனால் ஒரு சில படங்கள் தயாரித்த அவர் பெரும் நஷ்டமாகி நடுத்தெருவுக்கு வந்தது தான் திரையுலகின் சோகமாக பார்க்கப்படுகிறது.

நடிகர் பி.எஸ்.வீரப்பா கோவையைச் சேர்ந்தவர். இவர் சிறு வயதிலேயே நடிப்பின் மீது கொண்ட ஆசை காரணமாக சென்னை வந்தார். கே.பி.சுந்தராம்பாள் ஆதரவுடன் அவருக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தது.

1939-ம் ஆண்டு முதல் படத்தில் நடித்து அதன்பிறகு சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் நடித்தார். எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’, எம்ஜிஆர் நடித்த ‘மருதநாட்டு இளவரசி’ ஆகிய படங்களில் நடித்தார்.

பெரும்பாலான எம்ஜிஆர் படங்களில் இவர் வில்லனாக இருப்பார். இவரது வில்லத்தனம் வித்தியாசமாகவும் அவரது நடிப்பு தனித்துவமாகவும் இருக்கும்.

குறிப்பாக எம்ஜிஆர், சாவித்திரி நடித்த மகாதேவி திரைப்படத்தில் ‘மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி’ என்ற வசனம் அன்றைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இந்த வசனத்தில் மகாதேவியை மட்டும் எடுத்துவிட்டு தங்களுடைய காதலியின் பெயரை போட்டு அந்த கால இளைஞர்கள் பலர் பேசி வருவார்கள்.

அதேபோல் வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் பத்மினி மற்றும் வைஜெயந்தி மாலா இடையே நடன போட்டி நடக்கும்போது ‘சபாஷ் சரியான போட்டி’ என்ற வசனத்தையும் அவர் பேசியிருப்பார். அந்த வசனமும் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது.

ஆறு முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றியவர் என்ற பெருமையைக் கொண்டவர் பி.எஸ்.வீரப்பா. அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், என்.டி.ராமராவ், ஜானகி ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களுடன் அவர் நடித்துள்ளார் மற்றும் அவர்களுடைய படங்களை தயாரித்துள்ளார்.

எம்ஜிஆர் நடித்த பல படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவர் சிவாஜி கணேசனுடைய மிகப்பெரிய ரசிகர். இதை வீரப்பாவே பல பேட்டிகளில் கூறியுள்ளார். மேலும் சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணி, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் என பலருடன் இவர் நடித்துள்ளார்.

இவர்தான் நடித்து சம்பாதித்த பணத்தை தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்தது தான் அவர் செய்த மிகப்பெரிய தவறு. ஆரம்ப காலத்தில் இவர் தயாரித்த ஆலயமணி, ஆனந்த ஜோதி, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்றாலும் அதன் பிறகு அவர் தயாரித்த படங்கள் எதுவும் லாபத்தை தரவில்லை.

வீரப்பாவின் மறைவுக்குப்பின் அவரது மகன் பி.எஸ்.வி.ஹரிஹரன் ஒரு சில திரைப்படங்கள் தயாரித்தார். விஜயகாந்த் நடித்த சாட்சி, வெற்றி ஆகிய படங்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும் ஓடங்கள், மறக்க மாட்டேன், துளசி, வணக்கம் வாத்தியாரே ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததால் மீதமிருந்த சொத்துக்களையும் இழந்தார். இதையடுத்து தற்போது அவரது மகன் வாடகை வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத வில்லன் நடிகராக இருந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு இறுதி காலத்தில் மிகவும் சோகமான சூழ்நிலையிலேயே அவர் காலமானார். தனது 1998-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பி.எஸ்.வீரப்பா காலமானார். அவர் மறைந்தாலும் அவருடைய வில்லத்தனமான சிரிப்பு மற்றும் வசனங்கள் என்றும் ரசிகர்கள் மனதில் இருக்கும்.

  • நன்றி : முகநூல் பதிவு

#பி.எஸ்.வீரப்பா #கே.பி.சுந்தராம்பாள் #எம்ஜிஆர் #சாவித்திரி #பத்மினி #வைஜெயந்தி_மாலா #அண்ணாதுரை #கருணாநிதி #என்_டி_ராமராவ் #ஜானகி ராமச்சந்திரன் #ஜெயலலிதா #p_s_veerappa #kps #mgr #savithri #badmini #vaijayanthi_mala #annadurai #karunanithi #ntramarav #janaki_ramachandren jayalalitha

You might also like