வாசனையால் வரவேற்கும் கூடலூர் திரவியக் கண்காட்சி!

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

அப்படி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழாவின் ஒரு பகுதியாக 10வது வாசனை திரவியக் கண்காட்சி கூடலூரில் துவங்கியது.

அங்குள்ள மார்னிங் ஸ்டார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

கண்காட்சியையொட்டி தோட்டக்கலை துறை சார்பில் 95 கிலோ வாசனை திரவியங்களால் ஆன வரவேற்பு வளைவு, ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண படத்தில் நடித்த முதுமலை புலிகள் காப்பக யானை பாகன் தம்பதிகள் பொம்மன், பெள்ளி, படத்தில் இடம்பெற்ற யானைகளான் உருவம் மற்றும் அதற்காக அளிக்கப்பட்ட ஆஸ்கர் விருது வடிவம் ஆகியவை 14 வகையான வாசனை திரவியங்களை கொண்டு தயாரித்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில், 4 அடி உயர ஆஸ்கார் விருது கசகசா, ஜாதிபத்திரி, கருஞ்சீரகம், ஸ்டார் அனீஸ் ஆகிய வாசனை திரவியங்களாலும், யானைகள் சீரகத்தாலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதோடு கூடலூர் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன பிரமாண்ட மீன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

You might also like